Friday 19 January 2018

ஆயுர் தேவி அவதாரம்

பொதிய மலைச் சாரல்பல்லாயிரக் கணக்கான அற்புதமான மூலிகைகளின் குணங்களைத் தாங்கி நறுமணத்தென்றல் வீச

சித்தர்குல நாயகராம் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தம் சிஷ்யர்களுடன் சிவ ஆராதனையை நிகழ்த்திய பின் மெளனமாய் அமர்ந்திருக்கிறார். போகர் சாந்தமாய்த் தன் சற்குருவைத் தொழுது, வணங்கி கேட்கத் தொடங்குகிறார்.

போகர்: “சற்குருதேவா! இன்று முதல் நாம் அனைவரும் திவ்ய க்ஷேத்ராடனம் தொடங்குகிறோம் அல்லவா? குறிப்பாக, “தேவி உபாசனையைப் பற்றிக் கலியுக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் இதுஎன்று சாட்சாத் சதாசிவனே அருளியதாக இன்றைய பூஜையில் எடுத்துரைத்தீர்கள். எனவே நாம் அம்பிகை அருள்புரியும் திருத்தலங்களுக்குச் செல்கிறோமல்லவா.?”

அகத்தியர்:- “ஆம் போகா! அது மட்டுமல்ல, ஸ்ரீவித்யாவாக தரிசனம் தரும் பராசக்தி உறைகின்ற மேருச்சக்கரத்தில் மட்டும் 43 கோடி தேவியர் அருளாட்சி செலுத்துகின்றனர். அதர்மம் பெருகி வரும் கலியுகத்தில் கோடி கோடியாய் உடல் நோய்களும் மன நோய்களும் வறுமை, திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் பொன்ற சமுதாய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆதலால் இந்த 43 கோடி தேவியரும் பூலோகதில் அவதரித்துத் தீவினைகளை எதிர்த்து நல் வாழ்க்கையை நிலைநாட்டிக் கலியுக மக்களுக்கு அருள் புரிய விழைகின்றனர். ஆனால் சிவபெருமான் திருவுளம் யாதோ அதுதானே நடைபெறும்!”

புலிப்பாணி:- “இறைவனின் திருவுளம் தாங்கள் அறியாததா குருதேவா?”

அகஸ்தியர்:- “சீடர்களே, ஆதி சிவனின் ஆக்ஞைப்படி பல்வேறு யுகங்களில் பல்வேறு தேவியர் அவதாரம் பெற்றுள்ளனர். ஆனால் யுகதர்மங்கள் மாறுவதால் தேவியருடைய அவதார அம்சங்களும் மாறுகின்றன.”

போகர்:- “ஞான குருவே! தற்போது மீண்டும் அவதாரம் பெறும் ஸ்ரீதேவி சக்தி யாரென்று அறிய விரும்புகிறோம்!”

ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் அவதாரம்



அகத்தியர்:- (புன்முறுவலுடன்) “கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் வீட்டிற்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்தஸ்ரீ ஆயுர் தேவிஎன்னும் ஆதிபராசக்தி அவதாரமே தற்போது சித்த புருஷர்கள் மூலமாக கலியுகத்தில் மீண்டும் அருள் புரிய வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.”

ஸ்ரீ ஆயுர் தேவி மீண்டும் அவதாரம் பெறுகிறாள் என்று சொல்வதைவிட ஸ்ரீ ஆயுர் தேவி உபாசனை கலியுகத்தில் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதே சரியானது!!

ஆம் சிஷ்யர்களே! இதனைப் பின்னர் விளக்குகிறேன், எத்தனையோ ஆன்மீக ரகசியங்கள் பல யுகங்களில் சற்குருமார்களால் அளிக்கப்பட்டு வந்து சென்றுள்ளன. இவையெல்லாம் சாதாரண மனிதனின் அறிவிற்கெட்டாத ஆன்மீக ரகசியங்கள். காலபோக்கில், சரியாக கடைபிடிக்காதவற்றை மனித குலம் மறந்து விடுகிறது. மறைந்தவைகளைச் சற்குரு மூலமாகவே ஒருவன் அறிந்து தெளிவு பெறமுடியும்.”

போகர்:- “குருதேவா! மனிதன் வாழ்நாளில் அறிந்து கொள்ள வேண்டியவை எண்ணிறத்தன என்பதை உணர வேண்டும். “எதை அறிந்து கொண்டால் மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டவன் ஆகிறானோ அதை மட்டும் அறிந்து கொண்டால் போதும்,” என்பதை அவன் உனர வேண்டுமல்லவா.”

அகத்தியர்:- “ஆம் போகா! முதலில் குருவின் காலைப் பற்று! அவரே அனைத்தையும் அறிந்தவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வேதம், கணிதம், பௌதீகம், அணுவியல், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்துத் துறைகளையும் கற்க முடியுமா? ஆனால் இறையருளால் அனைத்தையும் பெற்று தரவல்ல சற்குருவை அடைந்தால் போதும், அவரே அறிவு. உண்மையான ஞானம். மற்றவை எல்லாம் ஏட்டு சுரைக்காய்களே! எனவே நம் சித்தர் பாரம்பரிய சற்குரு மூலம், ஆங்கீரஸ வருட்த்தில் [கலியுகாதி 5094] ஸ்ரீ ஆயுர் தேவி உருவ தரிசனம் நவராத்திரி பூஜையின் போது மீண்டும் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் சித்தம்

போகர்:- கிருதயுகம், திரேதா யுகத்திற்குப் பிறகுப் ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை மறைந்து விட்டதா? குருதேவா?

அகத்தியர்:- ”இல்லை போகா! எவ்வாறு ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மகிமை, ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம் போன்றவை, 300, 400 வருடங்களுக்குள்ளாகப் பல சித்தர்களின் மூலம் புத்துணர்ச்சி பெற்றதோ அதுபோல பல்வேறு யுக மக்களின் அசிரத்தையால் கால போக்கில் மறைந்த ஸ்ரீ ஆயுர் தேவி வழிபாடு தற்போது நடைமுறைக்கு மீண்டும் வருகிறது. ஸ்ரீதேவி, காருண்ய தேவியாக மக்களின் நலனுக்காக மீண்டும் தோன்றி அருள்பாலிக்கின்றாள்.

புலிப்பாணி:- “ஞானாசிரியரே! புதுப்புது தேவியர் தோன்றுவது அவசியமா என்று சில ஆன்மீகவாதிகளே குழம்புகின்றனரே, அது ஏன்?”

அகத்தியர்:- “நன்கு கேட்டாய் புலிப்பாணி! கலியுக மக்கள் சுகங்களை நாடுபவர்கள். ‘துக்கங்களும், துன்பங்களும் உடனே தீரவேண்டும்என்று எதிர்பார்க்கின்றனர். சுகதுக்கங்களுக்கிடையே உண்மையான பக்தியை அவர்களால் பெற முடியாது. எனவேதான் அவர்களுக்கு உரித்தான தக்க இகபர சுகதுக்கங்களைத் தந்து அதற்கு அப்பாற்பட்ட பரம்பொருளும் உண்டு என்பதைச் சாதாரண மக்களுக்கும் உணர்த்துவதற்காகவே தேவி உபாசனை என்று சாக்த வழிபாடு பிறந்தது.”

போகர்:- “இதனால்தான் மாரியம்மன் திருவிழா, காளி பூஜை போன்ற பல்வேறு அம்மன் வழிபாடுகள் கலியுகத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதல்லவா குருதேவா?”

அகத்தியர்:- “ஆம்! எந்த சுவாமிக்குப் பிரார்த்தனை செய்தால் எந்த வியாதி நீங்கும்? பணக் கஷ்டம் தீரும்? குழந்தைப் பேறு உண்டாகும்? வேலை கிடைக்கும்? என்று கோடிக்கணக்கான மக்கள் அலைந்து திரிந்து பல கோயில்களை நாடுகின்றனர். இம் முறையிலாவது மக்களின் இறைநம்பிக்கை பெருகுவது குறித்து மேலுலகத்திலுள்ள பித்ருக்களும், ரிஷிகளும், தேவதைகளும் மகிழ்ச்சியுறுகின்றனர்.

எனவே குறிப்பிட்ட வியாதியையோ கஷ்டத்தையோ நிவர்த்தி செய்ய தேவியர் மீண்டும் அவதாரம் பெறுகின்றனர். இதனால்தான் பல தேவிசக்திகளின் வழிபாடு கலியுகத்தில் வலுப்பெற்று வருகிறது. புதுப்புது தேவி அம்சங்கள் என்பதை விட பல யுகங்களில் அவதாரம் பூண்டிருந்த தேவியரே மீண்டும் சக்தி வடிவம் பெறுகின்றனர் என்பதை ஆன்மீகவாதிகள் உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.”

போகர், புலிப்பாணி:- “ஸ்ரீ ஆயுர்தேவியின் அவதார மஹிமைகளை எளிமையாகக் கூற வேண்டுகிறோம் குருதேவா?”

அகத்தியர் :- “பல இலட்சம் கிரந்தங்களில் பல்லாயிரம் சித்தர்களும், மஹரிஷிகளும் வர்ணித்துள்ளதைச் சுருக்கித் தருவது எளிதா? எனினும் கூறுகின்றேன். கிருதயுகத்திலிருந்து யுகம் யுகமாக தர்ம நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப் பட்டமையால்தான் கலியுகத்தில் இன்றைக்கு வன்முறைகளும், அராஜகமும் பெருத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஜீவன்களிடத்தில் ஒழுக்கம் குறைந்து விட்டதேயாகும். இறை நம்பிக்கையோடு ஒழுக்கம் வளர்ந்தால், தனக்குரித்தானதைத் தன் கர்ம வினைகளுக்கேற்பப் பெறுவோம் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் காமம், குரோதம், போட்டி, பொறாமை இவற்றிற்கு இடமில்லையே! உலக ஜீவன்கள் சாந்தமயமாக ஜீவிக்குமல்லவா!

புலிப்பாணி:- “சற்குருவே! அப்படியானால் சிறு குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அனைவருக்கும் பொறுமை, நல்லெண்ணம், அடக்கம், போன்ற இகபர சுகங்களையும் அளிக்க வல்லவள் ஆயுர்தேவி. ஆனால் ஸ்ரீ அம்பிகை இவற்றை அருளும் முறைகளே அதிஅற்புதமானதாகும்!”

போகர்:- “கலியுகத்தில் மனிதன் கைமேல் பலன் காணத் துடிக்கிறானே! அர்ச்சனை செய்தவுடன் வியாதி குணமாக வேண்டும், ஒரு மணடல பூஜைக்குப் பின் உடனே குழந்தை பாக்கியம் கைகூடவேண்டும்இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியிடம் கூட மன்றாடுவார்களே, குருதேவா!”

அகத்தியர் :- “முறையான இகபர சுகங்களுக்காகப் பிரார்த்திப்பதில் தவறில்லை சிஷ்யர்களே! அது நல்ல முறையில் பூஜை, தான தர்மங்களோடு அமைந்தால் பிரார்த்தனையின் பலன் வலுப்பெறும். இதற்காகத் தான் நாம் சத்சங்கங்களை உருவாக்கியுள்ளோம். சத்சங்களில் இருப்போர் சொற் பொழிவுகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், உரையாடல்கள் மூலமாக மக்களுக்குத் தான தர்மங்களைப் பற்றி போதிக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் இரவு உறங்குவதற்கு முன்இன்றைக்கு இரண்டு பேர்களிடமாவது நல்ல விஷயங்களையும் இறைப்பணி பற்றியும் (சற்குரு போதித்தவைகளை) பரிமாறிக் கொண்டோமா?” என்று தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உன்மையான ஆத்ம விசாரமாகும். இத்தகைய எளிமையான ஆத்ம விசாரத்திற்கு வித்திட்டு உரிய செல்வங்களை வழங்கி அருள்புரிபவளே ஸ்ரீ ஆயுர்தேவி. இதற்காகவே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஒன்பது கரங்களைப் பூண்டு அவதாரங் கொண்டுள்ளாள். “வேண்டுவதை வேண்டிடில் அவள் தருவதை தருவாள்என்பது பிரார்த்தனையின் இரண்டாவது பாடம். அதுவே ஆத்ம விசாரத்தின் தெளிவு

போகர் :- “நல்லாசாணே! வழக்கமாகச் சங்கு, சக்கரம், மழு போன்ற ஆயுதங்களைத் தாங்கி துஷ்ட நிக்ரஹ பாணியில்தான் அம்பிகைகள் அவதாரங் கொண்டுள்ளனர். ஸ்ரீ ஆயுர்தேவியின் தோற்றமே வித்தியாசமாக உள்ளதே!”?
அகத்தியர் :- “ஆதிபராசக்தியின் அவதார விருப்பமும் அதுவேதான் போகா! இதையே ஸ்ரீ ஆயுர்தேவியின் அனுக்கிரக பரிபாலனமும் வித்தியாசமானது எனக் குறிப்பிட்டோம். ஸ்ரீ ஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும், நவக்கிரஹத் தத்துவங்களை எளிமையாக விளக்குகின்றன.”

நவக்கிரஹ தத்துவம்

போகர் :- “மனிதனுடைய இன்பங்களையும், துன்பங்களையும் தனித்தனியே ஒன்பது வகைகளாகப் பிரிக்கலாம். உலகின் அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுகதுக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கி விடுகின்றன. துன்பங்களையும், துக்கங்களையும் நிவர்தி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய பொதுப் பிரார்த்தனை ஆக்கிவிட்டது. இது கருதியே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கேற்பவே நவக்கிரக தெய்வங்களை இறைவன் படைத்தான். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப இகபர சுகங்களை நவக்கிரகாதிபதிகள் கணிக்கின்றனர்

ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பானதீபிகா பிம்ப சக்கரம்அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது. இந்த தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலன்ங்களை நிர்ணயிக்கின்றது. நித்ய ஜீவசக்தியை அளிக்கின்றது.

கும்பகோணம், வாரணாசி போன்ற ஸ்தலங்களில் கொண்டாடப்படும் கும்பமேளா உற்சவம் உணர்த்தும் சிருஷ்டியை உற்பவிக்கச் செய்யும் அமிர்த கலச குடத்தைச் சிவபெருமான் இந்த தூபிகா பிம்பச் சக்கரத்திலிருந்துதான் வடிவமைக்கிறார்.

No comments:

Post a Comment