Thursday 28 December 2017

தேவ அர்க்கவல்லி

ஸ்தல வரலாறு

ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் “தேவ அர்க்கவல்லி

” என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். எல்லா முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியை தேர்வு செய்து அம்மலரைக் காணவேண்டி கேட்டுக்கொண்டனர்.
அவ்வாறே பிருகு மகரிஷியும் அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்து சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.
அச்சமயத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தனர். பிருகு மகரிஷி , அகத்திய முனிவரிடம் “தேவ அர்க்கவல்லி” மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்தார். மீண்டும் பிருகு மகரிஷி சிவலோகத்திற்கு சென்று தாம் அம்மலரைக் காணவேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.
சிறிது காலத்திற்கு பிறகு, பிருகு முனிவர் மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு இருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில இரகசியங்களை கேட்டறிந்தார்.
அச்சமயத்தில் மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும், பறவைகளும் இல்லையென்றும் எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக, லோபமாதாவிடமும், பிருகு முனிவரிடமும் கூறினார்.
அவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் “ஓம் நமச்சிவாய” என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.
அகத்திய முனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர் ஆதலால் “தேவ அர்க்கவல்லி” பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாகவும் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.
அகத்திய முனிவர் முதன் முறையாக பிருகு முனிவரையும், லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்ற போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.
இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர். விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு , இறுதியாக கி.பி.1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள், சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.



இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சங்கள்;

  • சிவநேயச் செல்வர்களே எம்பெருமான் திருவருள் கொண்ட இடம் திருத்தியமலை.
  • தேவ அர்க்க வல்லி புஷ்பத்தை சூடிக் கொண்ட ஸ்தலம்.
  • பிருங்கி, அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்ட ஸ்தலம்.
  • சூரியன் தனித்து வழிபட்ட ஸ்தலம்.
  • எம்பெருமான் திருசெம்பொன்மேனி.
  • கிரி சுயம்பு மூர்த்தி.
  • முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு தேவசேனாவை மணந்த ஸ்தலம்.
  • அம்பிகை தாயினும் நல்லாள்.
  • 22 படிகள் தாண்டி திருமலை மேல் அமர்ந்த ஸ்தலம்.
  • ஸ்தலவிருட்சம் வில்வ மரம்.
  • தனித்த சுனைநீர் தீர்த்தம்.
  • தட்சிணாமூர்த்தி பாத தரிசன ஸ்தலம்.
  • பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்து இணைத்து வைக்கும் ஸ்தலம்.
  • நக்ஷத்திர தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.
இத்திருக்கோயில் திருச்சியில் இருந்து 35கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி, மூவானூர் வழியாகவும், முசிறியில் இருந்து தண்டலைப்புத்தூர் வழியாகவும் சென்றடையலாம். சமயபுரத்திலிருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி வழியாகவும் சென்றடையலாம்.

No comments:

Post a Comment