Thursday 28 December 2017

அகத்தியரும் வைகாச பூரண மகரிஷியும்

காகம் பெற்ற ஈஸ்வர பட்டம்

இவ்வாறு சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைந்த காக மூர்த்திக்கு அடுத்து ஓர் ஆசை தோன்றியது. அது என்ன? தன்னுடைய தேவன் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்தியாக விளங்கும்போது தான் மட்டும் சாதாரண வாகன மூர்த்தியாக விளங்குவது தன்னுடைய தலைவனுக்குத்தானே இழுக்கு. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தது.

பல காலம் ஆழ்ந்த யோசனைக்குப் பின் தன்னுடைய மூர்த்தியிடமே தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டது. சனீஸ்வர மூர்த்தியும் உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணமே, ஆனால், இத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் தகுதி உள்ளவர் ரிஷிகளுக்கெல்லாம் தலைமை ரிஷியாக விளங்கும் ஸ்ரீஅகத்தியப் பெருமான் ஒருவர்தான். நீ அவரை நோக்கி தவம் இருப்பாயாக,” என்று அறிவுரை கூறினார்.

காக வாகனமும் சனீஸ்வர மூர்த்தியின் அருளுரையை ஏற்று அகத்திய முனிவரை நோக்கித் தவம் இயற்றியது. ஸ்ரீஅகத்திய பெருமான் திருஅண்ணாமலையில் காக வாகன மூர்த்திக்கு ஆக்கோட்ட லிங்கம் தரிசனமும், ஈஸ்வர பட்டமும் பெற்றுத் தந்த தெய்வீக மகாத்மியத்தை எமது ஆஸ்ரம வெளியீடான ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் எடுத்துரைத்துள்ளோம். வைகாச பூரண மகரிஷியே சனீஸ்வர மூர்த்திக்கு ஈஸ்வர பட்டம் பெற்ற வாகனமாக அமைந்து மக்களின் குறை தீர்த்து வருகிறார்.

இவ்வாறு காக வாகனம் ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு எவ்வகையிலேனும் நன்றிக் கடன் தீர்க்க வேண்டும் என்று விரும்பி, “சுவாமி, தங்கள் கருணையால் அடியேனுக்கு மிகவும் தெய்வீகமான ஈஸ்வர பட்டம் அருளப் பெற்றேன். தங்களின் கருணைக்கு எவ்வகையிலேனும் நன்றி செலுத்த அடியேனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும்,” என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தது. 

அகத்தியப் பெருமானும், “எதிர்காலத்தில் செய்நன்றி மறத்தல் என்பது கலியுகத்தில் நடைபெறும் ஒரு அன்றாட நிகழ்ச்சியாக ஏற்படும். உன்னுடைய வரலாற்றைக் கேள்விப்படும் மக்கள் உன்னை ஓர் முன்னோடியாக எடுத்துக் கொண்டால் அவர்கள் நற்கதி அடைவார்கள். ஒரு காகத்திற்கு உள்ள நன்றி மறவாத குணம் கூட ஒரு மனிதனிடம் காணப்படாதது கலியுக சாபக் கேடே. இனி வரும் மக்களுக்கு உன்னுடைய தியாகம் ஒரு பாடமாக அமையட்டும்,” என்று அற்புத ஆசி வழங்கினார். 

மேலும், “மக்களுக்கு அரும் பெரும் தொண்டாற்ற வேண்டும் என்று உன்னுடைய உள்ளம் விழைவதால் அதை நிறைவேற்றும் பொருட்டு இறைவன் அருளால் உனக்கு ஒரு இறைப் பணி வழங்க கடமைப்பட்டுள்ளேன். திருஅண்ணாமலை புனித பூமியில் மலையைச் 

சுற்றிலும் 11,022 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் எல்லாம் முறையாக நீராடி வழிபாடுகள் இயற்றி மீண்டும் பொதிய மலைக்கு வந்து சேர். உனக்கு நற்செய்தி ஒன்று காத்திருக்கும்,” என்று ஸ்ரீஅகத்தியர் காகத்திடம் தெரிவித்தார்.

காகமும் பரமானந்தத்துடன் அகஸ்தியர் கூறிய முறையில் திருஅண்ணாமலையை கிரிவலம் ஆரம்பித்தது. தினமும் ஒரு தீர்த்தத்திலாவது தீர்த்த நீராடல் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்யத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு திருஅண்ணாமலையைச் சுற்றிலும் உள்ள தீர்த்தங்களில் நீராடிக் கொண்டிருந்தது. 

மகரிஷிகளுக்கு இறைவன் பெரும்பாலும் பூஜை முறைகளை அளிப்பதில்லை. அவர்கள் தாங்களாகவே தாங்கள் மேற்கொண்டிருக்கும் இறைப் பணியைப் பொறுத்து பூஜை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள் பூலோகத்தில் ஒரு மனிதனாகவோ, விலங்காகவோ, மரம், செடியாகவோ பிறப்பெடுத்தால் அந்த ஜீவ உடலை விட்டுப் பிரிய வேண்டிய நேரத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மகரிஷிகளைப் பொறுத்தவரை இதுவே ஒரு முக்தி நிலையாகும். கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியங்கள் மிகவும் கடினமானவை. 

உதாரணமாக, ஒரு மகரிஷி ஒரு லட்சம் மக்களைக் கரையேற்றுவதற்காக பூலோகத்திற்கு அவரை இறைவன் அனுப்பி வைத்தால் அந்த ஒரு லட்சம் மக்களும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற்ற பின்தான் அவர் பூமியை விட்டுப் புறப்பட முடியும்.

இதற்கிடையே அவருடைய பூத உடல் பூமியில் ஏற்படும் கர்ம வினைகளைச் சுமக்க முடியாமல் போகலாம். ஆனால், அதை காரணம் காட்டி தாங்கள் மேற்கொண்ட பணியை நிறைவேற்றாமல் அவர்கள் தங்கள் உடலை உகுக்க முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை ஒவ்வொரு மகரிஷியும், மகானும் கட்டாயம் சந்தித்தே ஆக வேண்டும்.

எனவே முக்தி, மோட்ச நிலை என்பது ஒவ்வொருவருடைய ஆன்மீக நிலையைப் பொறுத்தது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். 
வைகாச பூர்ண மகரிஷியின் தொண்டு

தற்போது சனீஸ்வர மூர்த்தியின் காக வாகனமாக உருக் கொண்ட வைகாச பூரண மகரிஷியும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தன்னுடைய தீர்த்த யாத்திரை பூஜைகளை நிறைவேற்றி வந்தார். அவர் எப்படி தீர்த்த பூஜைகளை நிறைவேற்றி வந்தார். தான் ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக அகத்தியப் பெருமானுக்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த மூலிகையைப் பறித்து அவருக்கு அர்ப்பணித்து வந்தார் அல்லவா? அது போல ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடும்போதும் அந்த தீர்த்தத்திற்கு உரித்தான மலர்களைப் பறித்து வந்து அந்த மலர்களால் தீர்த்த தேவதைகளை பூஜித்த பின்னரே தீர்த்தங்களில் இறங்கி நீராடும் முறையைக் கையாண்டார் வைகாச பூரண மகரிஷி. 

இறை மூர்த்திகளுக்கு மட்டும்தான் மலர் வழிபாடு என்ற கணக்கு கிடையாது. தீர்த்த தேவதைகளையும் அவசியம் மலர்களால் வழிபட வேண்டும். இவ்வாறு தீர்த்த மலர் வழிபாட்டு முறையை பூலோகத்தில் முதல் முறையாக ஏற்படுத்தியவரே சனீஸ்வர மூர்த்தியின் வாகனமாய் அருள்புரியும் வைகாச பூரண மகரிஷி ஆவார். 

தீர்த்த தேவதைகளுக்கு உரிய மலர்கள் பூலோகத்தில் மட்டும் அல்லாது வேறு லோகங்களிலும் மலர்ந்திருக்கும். அந்தக் குறிப்பிட்ட லோகங்களுக்குப் பறந்து சென்று குறித்த நேரத்திற்குள் மீண்டும் பூலோகத்திற்கு வந்து மலர்கள் வாடும் முன் அவற்றை தீர்த்த தேவதைகளுக்கு அர்ப்பணித்து அற்புதமாக வழிபாடுகளை நிறைவேற்றி வந்தார். உதாரணமாக, பாரிஜாத மலர் விஷ்ணு லோகத்தில் மட்டும்தான் மலரும், ஹரி சந்தன மலரை சப்தரிஷி லோகத்திலிருந்துதான் பெற முடியும். 

திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள தீர்த்தங்களில் ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படும். சில வகைத் தீர்த்தங்களை தேவர்கள் மட்டுமே காண முடியும். இன்னும் சில அரிதான தீர்த்தங்களை மகரிஷிகள் மட்டுமே தரிசிக்க முடியும். 

நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு தீர்த்தத்தையும் அடையாளம் காண்பதற்கு மிகவும் அபரிமிதமான பூஜா சக்திகள் தேவைப்பட்டது. அச்சமயங்களில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே யோகத்தில் ஆழ்ந்து விடுவார் காக மூர்த்தி. அடுத்த தீர்த்தம் பற்றிய விளக்கங்களை அறியும் வரை உண்ணாமல் உறங்காமல் யோகத்திலேயே நிலைத்திருந்து தவம் இயற்றி வந்தார் வைகாச பூரணர். இவ்வாறு அவர் 11,022 புனித தீர்த்தங்களையும் வழிபட்டு அவற்றில் நீராடல் மேற்கொள்வதற்கு 300 யுகங்கள் கடந்து சென்றன. 

வைகாச பூரணர் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்துத் தீர்த்தங்களிலும் தீர்த்த நீராடல்களை நிறைவேற்றிய பின் அவருடைய மேனி நூறு சூரிய பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவர் உடலைச் சுற்றி பொன்னிறக் கதிர்கள் வெளிப்பட்டன. ஆனால், வைகாச பூரண மகரிஷியோ தன்னுடலிலிருந்து தோன்றிய பொற்கதிர்களை தன்னுடைய தபோ சக்தியால் மறைத்துக் கொண்டு ஒரு சாதாரண காக வடிவத்திலேயே அகத்திய முனிவரின் தரிசனத்திற்காக பொதிய மலைக்கு விரைந்து சென்றார்.

வைகாச பூரண மகரிஷியைக் கண்டவுடன் ஸ்ரீஅகத்திய முனிவர் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினார். வைகாச பூரணர் திடுக்கிட்டார். “சுவாமி, ரிஷி குலத்திற்கே தலைமைப் பீடாதிபதியான தாங்கள் அடியேனுடைய காலில் விழலாமா?” என்று குரல் தழுதழுக்க கண்கள் நீர் சொரிய இரு கரம் கூப்பி வணங்கி அகத்திய முனியைத் தொழுதார். அகத்தியர் அன்புப் புன்னகையுடன், “திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள ஆயிரக் கணக்கான தீர்த்தங்களைத் தரிசித்து அவற்றில் முறையாக நீராடி அற்புதமான தேவ லோக, விஷ்ணு லோக, சத்ய லோக மலர்களை எல்லாம் கொண்டு சிறப்பாக தீர்த்த பூஜைகளையும் நிறைவேற்றி உள்ளாய். அவ்வாறிருக்கும்போது வணங்குவதற்கு உன்னைவிடத் தகுதியான ஜீவன் எது?“ என்று வினவினார்.

காகம் தன் தலையைக் குனிந்து கொண்டது. அகத்திய பெருமானின் வார்த்தைகளில் இருந்த உண்மை காகத்தைப் பிரமிக்க வைத்தது. 300 யுகங்கள் நீராடியும் திருஅண்ணாமலை தீர்த்தத்தின் மகிமையை உணராமல் இருந்த வைகாச பூரண மகரிஷிக்கு ஒரே நொடியில் அத்தீர்த்தங்களின் அற்புத மகிமையை தன்னுடைய பணிவான வணக்கம் மூலம் தெரிவித்த அகத்திய மகரிஷியின் மேன்மை குறித்து புளகாங்கிதம் அடைந்தார். இப்படி ஒரு மகரிஷியைப் பெற்ற உலகம் எத்துணை பெருமை வாய்ந்தது என்று எண்ணி எண்ணி பேருவகை கொண்டார் வைகாச பூரண காக மூர்த்தி. 

அகத்தியர் தொடர்ந்து, “மகரிஷி, அடியேன் மேற்கொள்ள இருக்கும் தெய்வீகப் பணிக்கு உங்களுடைய புண்ணிய சக்தியை ஈந்தருள வேண்டும்.இது எம்பெருமானின் விருப்பம். இதைத் தாங்கள் அன்பு கூர்ந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். வைகாச பூரணர் பெருமகிழ்ச்சி கொண்டார். தான் அகத்தியப் பெருமானுக்கு எப்படியாவது நன்றிக் கடனைத் தீர்க்க வேண்டும் என்று தானே பல யுகங்கள் காத்திருந்தார். 

இப்போது அகத்திய முனிவர் தானே முன் வந்து அந்தச் சந்தர்ப்பத்தை அளிக்கும்போது இதை விடச் சிறந்த பேறு என்ன இருக்க முடியும்? 

வைகாச பூரணர், “சுவாமி, அடியேனுக்கு என்று எந்த வித புண்ணிய சக்தியும் கிடையாது. அனைத்தும் தாங்கள் இட்ட பிச்சையே. எனவே எப்போது வேண்டுமானாலும் அதைத் தங்கள் திருப்பாதங்களில் அர்ப்பணிக்க சித்தமாக இருக்கிறேன்,” என்று தயங்காமல் தெரிவித்தார். 

ஒரு சுப முகூர்த்த தினத்தில் அகத்தியரும் வைகாச பூரணரும் குடகு மலையை அடைந்தனர். அகத்தியர் முதலில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து முறையாக கணபதி பூஜையை நிறைவேற்றினார். பின்னர் ஒரு முகூர்த்த நேரத்திற்கு அற்புதமான வேத மந்திரங்களை ஓதி தன்னுடைய கமண்டலத்திலிருந்து மூன்று சொட்டு தீர்த்தத்தை பிள்ளையாரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அடுத்த விநாடியே அங்கு ஓர் அற்புத நீரூற்று தோன்றியது. தேவர்கள் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தனர்.  ஆம், அகத்தியர் கங்கைக்கும் மூத்த காவிரி நதியை பூமிக்கு கொண்டு வந்து விட்டார். அந்த அற்புத கோலாகலமான முகூர்த்தத்தில் அகத்தியர் வைகாச பூரணரை அழைத்து, “மகரிஷியே, தங்களுடைய திருஅண்ணாமலை தீர்த்த பூஜை பலன்கள் அனைத்தையும் இந்த தீர்த்தத்தில் தரை வார்த்துக் கொடுத்து விடுங்கள்,” என்று கூறவே வைகாச பூரணரும் சற்றும் தாமதியாது தன்னுடைய தீர்த்த பூஜா சக்திகள் அனைத்தையும் அகத்திய மகரிஷி தோற்றுவித்த காவிரி நதியில் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்.

அகத்தியர், “தங்களுடைய மலர் வழிபாடு சக்திகள் நிறைந்த புண்ணிய சக்தியால் இந்நதி பொங்கிப் பெருகுவதால் இன்று முதல் காவிரி என்று அழைக்கப்படும், (மலர்கள் செறிந்த சோலைகளுடன் விளங்கும் நதி),”

”திருஅண்ணாமலையில் உறையும் தட்சிணா மூர்த்தியின் குரு சக்திகள்  இந்நதியில் பரிணமிப்பதால் உங்களுடைய பொற் கிரண சக்திகளும் அதில் கலந்து இந்நதி குருவுக்கு உகந்த நதியாக அமையும். எனவே, காவிரி பொன்னி நதி எனவும் பெரியோர்களால் அழைக்கப்படும், தாங்கள் காக வடிவில் தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டதால் இந்நதி காகநதி எனவும் வழங்கப்படும். சனீஸ்வர பகவான் முடவன் முழுக்கு என்ற தீர்த்த நீராடலை மேற்கொள்ளும் காலத்தில் தங்கள் திருநாமத்தைக் கூறி காவிரியில் நீராடுபவர்களே அதன் முழுப் பலனையும் பெற முடியும்,” என்று ஆசி வழங்கினார். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி நதி நமது பூலோகத்தில் பிரவாகம் கொண்டுள்ளது என்றால் இதை விடப் புனித தேசம் வேறெங்கு இருக்க முடியுமா? 

ஒரு முறை ஏழு கடலையும் ஒரு துளியாக்கி அகத்திய பெருமான் தன் உள்ளங்கையில் வைத்து விழுங்கி விட்டார் அல்லவா? அதனால் அகத்தியரின் கரங்கள் பட்ட தீர்த்தத்தில் எப்போதும் ஏழு கடல்களின் சக்திகள் துலங்கும். எனவே, காவிரி தீர்த்தத்தில் ஏழு கடல் தீர்த்த சக்திகளும், திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்து தீர்த்த சக்திகளும் நிரவிப் பெருகி உள்ளன. இறை அடியார்கள் இனியாவது காவிரித் தாயின் மேன்மையை உணர்ந்து முடிந்த போதெல்லாம் காவிரியில் நீராடி அற்புத தெய்வீக சக்திகளைப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் நலம் அடைய வேண்டுகிறோம்.

சனீஸ்வர பகவானின் வாகன மூர்த்தியின் பெருமையே இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் சனீஸ்வர பகவானின் கீர்த்தி எத்துணை சக்தி உடைத்ததாக இருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.  

ஒரு மனிதன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும் இந்த நலன்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமானால் அவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லவா? ஒருவர் எல்லா யோகங்களையும் பெற்றிருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லை என்றால் அனைத்தும் வீண்தானே.  எல்லாச் செல்வத்திற்கும் மூலமான ஆயுள் செல்வத்தை அளிக்கும் மூர்த்தியே சனி பகவான் ஆவார். 

கடுமையான அரிஷ்ட யோகங்களையும் தகர்க்கும் சக்தி உடையதே சனீஸ்வர வழிபாடு. 

No comments:

Post a Comment