Saturday 10 March 2018

பலம் மட்டும் போதுமா?

பலம்  மட்டும் போதுமா?

அழியும் உடல்களை பெற்றுள்ள சாதாரண மானுட ஜீவன்களாகிய நாம், ஏதேதோ அற்ப விஷயங்களை நினைத்து பெருமை கொண்டு,  அதன் பொருட்டு ஆணவம் கொள்கிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்தின் முன், நாம் தூசுக்கு சமம். இவ்வுலகில் கடவுள் மட்டுமே  பெரியவன்; அவனே அனைத்திற்கும் ஆதாரம் என்று நினைத்தால், மனமானது ஆணவ சேற்றில் அமிழ்ந்து விடாது. சிவனிடம் பெற்ற வரத்தாலும், தன்னுடைய வீரத்தின் பேரில் தான் கொண்ட ஆணவத்தாலும் தேவர்களையும், முனிவர்களையும்  மதிக்காமல் இருந்ததுடன், அவர்களை துன்புறுத்தியும் வந்தான் ராவணன்.

ஒரு சமயம், தன் அமைச்சர் மகோதரனுடன் உலகின் பல இடங்களை சுற்றி வந்தான் ராவணன். அவர்களுடைய பயணம் பாதாள  லோகத்தை அடைந்தது; அங்கே, மகாபலி சக்கரவர்த்தி இருந்தார். மகாபலியைப் பற்றி அறிந்திருந்தாலும், தன் வீரத்தின் பேரில் இருந்த  ஆணவத்தால், நானே ரொம்பப் பெரியவன்; என்னை மிஞ்சிய வீரன் இவ்வுலகில் இல்லை... என்ற எண்ணத்துடன், ராவணன்,  மகாபலியைப் பார்த்து, நான் ராவணன் வந்திருக்கிறேன்... என்றான். மகாபலியோ, ஓ... இலங்கையில் ராவணன் என்ற பெயரில், ஒரு  சிறுவன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்; அது நீ தானா... சரி... பக்கத்து அறையில், இரண்டு கடுக்கன்கள் இருக்கின்றன, அவற்றை எடுத்து  வா... என்றார். அந்த அறைக்குச் சென்ற ராவணன், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கடைசியில் வெறுங்கையோடு திரும்பி, தன்  இயலாமையை ஒப்புக் கொண்டான்.

மகாபலி சிரித்து, ராவணா... அந்த இரண்டு கடுக்கன்களும், என் கொள்ளுத் தாத்தா இரண்ய கசிபுவினுடையவை; பரந்தாமன், நரசிம்ம  அவதாரம் எடுத்து, இரண்ய கசிபுவை தூக்கிப் பிடித்து சுற்றிய போது, இரண்ய கசிபுவின் காதுகளில் இருந்த கடுக்கன்கள் சிதறி  விழுந்தன. அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தனர் என் முன்னோர். நானும், அவற்றைப் பாதுகாத்து வருகிறேன்; அவற்றைத்  தான், உன்னால் தூக்க முடியவில்லை என்கிறாய்... என்று விவரித்தார். தலை கவிழ்ந்து திரும்பினான் ராவணன். ஆனால், அதிலிருந்து  அவன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. என்னால் தூக்க முடியாத அந்த கடுக்கன்களை அணிந்து, இரண்ய கசிபு நடமாடியிருக்கிறான்;  அவ்வளவு பெரிய பலசாலியான அவனும் அழிந்து போய் விட்டானே... என்று ராவணன் நினைத்திருந்தால் ராவணன் தவறு  செய்திருப்பானா, அவனுக்கு அழிவு தான் வந்திருக்குமா? கடவுள் ஒருவனுக்கு, திறமையைக் கொடுக்கிறார்; ஆணவமும், திமிரும்  தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. அழிவைத் தேடிக் கொள்கிறான்.

தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக  அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப் படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும்.
 இதன் மூலம் வருங்கால சந்ததியினர் நம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்குவர்.