Friday 30 September 2022

மகாகுரு அகஸ்தியர் துதிக்கும் நவராத்திரி நாயகி

 *🌸மகாகுரு அகஸ்தியர் துதிக்கும் நவராத்திரி நாயகி🌸*


அன்னை பராசக்தி, நவநவமாக வடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் தன் பக்தர்களுக்கு நல்லனயாவற்றையும் அள்ளித்தருவாள் என்கிறது தேவி பாகவதம். அதற்கு உதாரணமாக, நவராத்திரியின் போது நவதுர்க்கா வடிவினளாகத் தோன்றி அம்பிகை அருள்வதைச் சொல்லலாம். அந்த தேவியை நவரத்தினமாலைசூட்டி ஆராதிக்கும்போது நாளும், கோளும் நன்மையே செய்யும் என்கின்றன புராணங்கள். எல்லோராலும் அப்படி நவரத்ன மாலையை அன்னைக்கு அணிவிப்பது சாத்தியமா? அதற்காகவே, நவமணிகளைக் கோத்ததுபோன்ற எளிய பாமாலை ஒன்றை ஆக்கி அளித்துள்ளார் அகத்திய மாமுனிவர். சித்தர்கள் யாவரிலும் மேலான அந்தக் குறுமுனியின் திருவாக்கில் மலர்ந்த அந்த எளிய துதி உருவானது, திருமீயச்சூர் திருத்தலத்தில்தான் என்பார்கள்.


ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார். பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதாசகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார். அதுவே லலிதா நவரத்னமாலை. இந்தத் துதியை தினமும் சொல்பவர் எல்லா வளமும் நலமும் பெற்று சிவசக்தியரின் அருளால் சிறப்புகள் யாவும் பெறுவதோடு, ஒப்பற்ற நவரத்ன மணிபோன்ற பிரகாசமான வாழ்வையும் அடைவர் என்பது அகத்தியரே அளித்துள்ள வாக்கு. பலன்தரும் அபூர்வமானதும் எளிமையானதுமான அந்தத் துதி உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது. தூயமனதோடு, துதியைச் சொல்லுங்கள். அன்னை லலிதாபரமேஸ்வரியின் அருளால், அனைத்து நலனும் உங்கள் வாழ்வில் வந்து சேரும். ஒவ்வொரு நாளும் குறையாத நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் கூடும். ஆரோக்யமும் ஆயுளும் நீடிக்கும்.


ஸ்ரீ கணேசர் துதி


ஞான கணேசா சரணம் சரணம்

ஞான ஸ்கந்தா சரணம் சரணம்

ஞான சத்குரு சரணம் சரணம்

ஞானா னந்தா சரணம் சரணம்


காப்பு


ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்

பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே


மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


வைரம்


கற்றும் தெளியார் காடே கதியாய்க்

கண்மூடி நெடுங் கனவான தவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்

பெருகும் பிழை யேன் பேசத் தகுமோ!

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கு எமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


நீலம்


மூலக் கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக் கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக் குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரி வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


முத்து


முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே

முன் நின்றருளும் முதல்வி சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாஸினியே சரணம் சரணம்

தத்தேறிய நான் தனயன்; தாய் நீ

சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பவளம்


அந்த மயங்கிய வான விதானம்

அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை

சிந்தை நிரம்ப வளம் பொழிவாரோ

தேன் பொழிலாமிது செய்தவளாரோ

எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுந்தாள்

மந்திர வேத மயப் பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


மாணிக்கம்


காணக் கிடையா கதியானவளே

கருதக் கிடையா கலையானவளே

பூணக் கிடையாப் பொலிவானவளே

புனையக் கிடையாப் புதுமைத்தவளே

நாணித் திருநாமும் நின்துதியும்

நவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஒளிக் கதிரெ வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!


மரகதம்


மரகத வடிவே சரணம் சரணம்

மதுரித பதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்

அரஹர சிவ என்றடியவர் குழும

அவரருள் பெற அருளமுதே சரணம்

வரநவ நிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே,


கோமேதகம்


பூமேவிய நான்புரியும் செயல்கள்

பொன்றாப் பயனும் குன்றா வரமும்

தீமேல் இடினும் ஜெய சக்தியெனத்

திடமாய் அடியேன் மொழியும் திறனும்

கோமேதகமே குளிர்வான் நிலவே

குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்

மாமேருவில் வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பதுமராகம்


ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும

ராகவி காஸவியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணி

சாம்பவி சுந்தர கலாதரி ராணி

அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


வைடூரியம்


வலையொத்த வினை கலை யொத்த மனம்

மருளப் பறை யாரொலி யொத்த விதால்

நிலை யற்றெளியேன் முடியத் தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அலையற்றசை வற்று அநுபூதி பெறும்

அடியார் முடிவாழ் வைடூரியமே

மலையத் துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.,

நூற்பயன்


எவர் எத்தினமும் இசைவாய் லலிதா

நவ ரத்தின மாலை நவின்றிடுவார்

அவர் அற்புத சக்தி யெல்லாம் அடைவார்

சிவரத்தின மாய்த் திகழ்வார் அவரே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


ஸ்ரீ லலிதாம்பிகை துதிப்பாடல்


ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்மாஸ னேச்வரி

ஸ்ரீ லலிதாம் பிகையே புவனேச்வரி (ஸ்ரீ)

ஆகம வேத கலாமய ரூபிணி

அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி

ஞான வித்யேச்வரி ராஜ ராஜேச்வரி


பலவித மாயுனைப் பாடவும் ஆடவும்

பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்

உலக முழுதும் என தகமுறக் காணவும்

ஒரு நிலை தருவாய் காஞ்சிக் காமேச்வரி!


உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்

உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்த

நித்யகல்யாணி பவானி பத்மேச்வரி

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்

தொடர்ந்த முன்மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் 

காணச் செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி...🙇‍♂️🙏


https://youtu.be/5e229dQNXis

No comments:

Post a Comment