Saturday 18 September 2021

துளஸியின்_மகிமை -- குட்டி கதை

 .               #துளஸியின்_மகிமை


       ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தையில் விற்று அதில் வரும் பொருளைக் கொண்டு குடும்பத்தைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குப் போகும் போது வழியில் ஒரு குடிசையில் முநிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளஸி இலையால் பூஜை செய்வதைப் பார்த்துக் கொண்டே போவார். 


      ஒரு நாள் காட்டில் கீரை வகைகளைப் பறிக்கும் போது அதனருகே துளஸிச் செடியும் வளர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது அவருக்கு முனிவர் பூஜை செய்யும் துளஸி இலை ஞாபகம் வந்தது. இந்த துளஸியையாவது பறித்துக் கொண்டு முநிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனைக்காகக் கொடுப்போமே என்று துளஸியையும் சேர்த்துப் பறித்து கீரைக் கட்டோடு போட்டு, தலைமீது வைத்து முநிவரின் குடில் நோக்கி வந்தான். ஆனால் அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறு கருநாகம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.


      முநிவரின் குடில் அருகே வந்து நின்றான் ஏழை. முநிவர் ஏழையைப் பார்த்தார். அவன் பின்னே யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று கண்களை மூடினார். ஏழையின் பின்னே நிழல் போல் க்ரகங்களில் ஒருவரான ராகு பகவான் நின்றிருந்தார். முனிவர் ஏழையிடம், அப்பா! உன் தலையிலுள்ள கீரைக்கட்டை அப்படியே வைத்திரு. ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்கவேண்டாம். இதோ வந்துவிடுகிறேன் என்று கூறி குடிலின் பின்பக்கம் சென்று ஒரு மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார். 


      ராகு பகவானும் முநிவர் முன்னே வந்து நின்று வணங்கி, ஸ்வாமி, தாங்கள் என்னை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டார். முநிவரும் ராகு பகவானை வணங்கி, ராகு பகவானே! எதற்காக இந்த ஏழையே பின் தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா?


      ராகு பகவான், ஸ்வாமி! இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கருநாகம் உருவெடுத்து இவனைத் தீண்டவேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றுமில்லாத அதிசயமாக இன்று திருமால் விரும்பும் துளஸியை இவன் சுமந்ததால் இவனை என்னால் துண்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளஸியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனைத் தீண்டிவிட்டு, என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன் என்றார்.


      துறவிக்கு, ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளஸியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி, ராகு பகவானே! அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்று கேட்டார். ராகு பகவான், ஸ்வாமி! இத்தனை காலம் நீங்கள் பெருமாளுக்கு பூஜை செய்த புண்ணியத்தின் பலனனை அந்த ஏழைக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் அவனது தோஷம் நீங்கப் பெற்று, நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்றார்.


      முநிவர் மகிழ்ந்து, அவ்வளவுதானே! இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த பூஜையின் பலனையெல்லாம் அந்த ஏழைக்குத் தாரை வார்த்துத் தருகிறேன் என்று கூறி, ஏழைக்கு தன் பூஜையின் பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தார். ராகு பகவானும் முநிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார்.


      கீரைக் கட்டில் இருந்த கருநாகமும் மறைந்தது. முநிவர் ஏழையிடம் ஒரு கட்டளையிட்டார். அப்பா, இனி நீ தினமும் என் பூஜைக்கு துளஸி பறித்து வரவேண்டும். சரியா? என்றார். ஏழைக்கு மகிழ்ச்சி. நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முநிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கிச் சென்றான். 


        வைகுண்டவாஸன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே. பக்தியோடு எதைக் கொடுத்தாலும் பரவசமாய் அவன் ஏற்பான்.


                              அமரபாரதி

No comments:

Post a Comment