Monday 5 October 2020

வள்ளலார் பிறந்த தினம்..!! வரலாறு சுருக்கம் பகுதி 1


 வள்ளலார் பிறந்த தினம்..!!


வரலாறு சுருக்கம்


வாழ வழிகாட்டும் வள்ளலார்

தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் மருதூர் என்னும் ஒரு சிறிய கிராமம் உள்ளது  .

அந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார்,திருவள்ளூர் மாவட்டத்தில் போன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்தவர் .

இராமைய்யாவுக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் .அவருக்கு முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார் . 

இராமைய்யா மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.


சிதம்பர தரிசனம் !


பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால வழக்கம் .அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமைய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது .அனைவரும் தரிசித்தனர் .அந்த சமயம் ,

கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தன்னுடைய தாயின் கரங்களில் இருந்து கொண்டு தரிசித்தார்..அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று இடைவிடாமல் சிரித்தது..அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த அப்பைய்யா தீஷ்தர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு பார்த்து ஆச்சரியப்பட்டு போயினர் .பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப் பார்க்கிறேன் பல குடும்பங்கள் குழைந்தைகளுடன்   தரிசனம் பார்க்க வந்துள்ளார்கள் .இப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி ,இராமையாவிடம் ,இக் குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு,இராமைய்யா தன் குடும்பத்துடன் சென்றார் .


குருக்கள் வீட்டில் நடந்தது !


அப்பய்யா தீஷ்தர்,பாய்விரித்து குழைந்தையை கையில் பெற்று, கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினார் .அதைப் பார்த்த இராமைய்யா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் அதிசயித்தனர். பின் அவர்களுக்கு தேநீர் கொடுத்து மகிழ்ந்தார் .

இக் குழைந்தை சாதாரணக் குழந்தை அல்ல கடவுளின் குழந்தை அருள் ஞானக் குழந்தை,இக் குழந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு அடியேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் தழும்ப வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் அப்பைய்ய தீஷ்சதர்.இது வரலாற்று உண்மையாகும்.


ஆண்டவர் காட்சி கொடுத்தல் !


அனைவருக்கும் இரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை ஐந்து மாதக் குழந்தையாக இருந்த இராமலிங்க பெருமகனார்க்கு வெட்ட வெளியாக புலப்பட்டது. இறைவன் ரகசியத்தை வெளிப்படையாகக் காட்டி அருளினார் திரை தூக்கத் தாம் அருள் வெளியாகக் கண்ட அனுபவத்தை அவருடைய நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டில் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலை என்னும் தலைப்பில் அருட்பாடலாக எழுதி வெளிப்படுத்துகிறார் . 

தான் குழந்தையாக இருந்த போது சிதம்பரம் அழைத்து சென்ற தாய் தந்தையர் யாரும் அவரிடம் சொல்லவில்லை.அவர்களும் இல்லை .அவருக்கு வேறு யாரும் சொல்லவில்லை.அப்படி இருந்தும் அவருக்கு எப்படி அந்த நிகழ்ச்சி தெரியும்.எல்லாம் இறைவன் காட்டியது,இறைவன் சொல்லியது.இறைவனுடைய குழந்தை யாயிற்றே ,இறைவனால் அனுப்பிவைத்த குழந்தை என்பதால் அவருக்கு அனைத்தும் வெளிப்படையாகக் காட்டியதை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார் . 


அருள் விளக்க மாலை பாடல் ;--44,    

தாய் முதலோரோடு சிறு பருவத்திற் தில்லைத் 

தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது 

மேய் வகைமேற் காட்டாதே என்தனக்கே எல்லாம் 

வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே

காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே

தூய்வகை யோர் போற்ற மணி மன்றில் நடம் புரியுஞ்

ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்து அருளே !

என்ற பாடல் மூலமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.இராமலிங்கப் பெருமானை சிறு வயதிலேயே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டார் என்பதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் யார் என்பதை பின் வரும் வரலாற்றில் காண்போம் .தொடர்ந்து வரலாற்றைப் பார்ப


்போம் .


குடும்பம் சென்னைக்கு செல்லுதல் !

ராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமைய்யா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான  போன்னேரிக்கு அடுத்த சின்னக்காவனம்  சென்றார் சிலகாலம் சின்னக்காவனத்தில் வாழ்ந்த பின்பு தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்,குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை ஏழு கிணறு ,கதவு எண் பழையது 39....உள்ள வீராசாமிப் பிள்ளைத் தெருவில் உள்ள வீட்டில் குடி பெயர்ந்தார்கள் .இன்னும் அந்த வீடு சென்னையில் வழிபடும் தலமாக உள்ளது . 

அந்த வீட்டில் இருந்து கொண்டு ,மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களிடம்  கல்வி பயின்றார்.பின் புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற் பொழிவு களுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.


ஓதாது உணர்தல் !

இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார் .பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் .அடுத்து நடந்தது என்ன ?

ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் அமரச் சொன்னார் .இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் அதை கவனித்த ஆசிரியர் கண்டு கொள்ளாதது போல் பாடம் நடத்த ஆரம்பித்தார் அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும் .ஆசிரியர் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும் .ஆசிரியர் சொன்ன பாடல் .

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல,இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள்.இராமலிங்கம் சொல்லாததைக் கவனித்த ஆசிரியர் ஏன் நீ சொல்ல வில்லை என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்டார்.அதற்கு தயங்கி பதில் சொல்லாமல் இருந்தார் இராமலிங்கம் .மீண்டும் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாய் வாய் திறந்து பேசுடா என்று மிரட்டுவது போல் கேட்டார் ஆசிரியர் .


இராமலிங்கம் பதில் சொல்ல ஆரம்பித்தார் !

ஐயா நீங்கள் நடத்திய பாடத்தில் நல்ல கருத்துக்கள் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது ஆதலால் நான் அப்படி சொல்ல விருமப வில்லை என்று பதில் அளித்தார் .ஆசிரியருக்கு கோபம வந்து விட்டது .என்ன அருமையான கருத்து கலந்த வரிகள் உள்ள பாடலாகும் அதைப்போய் அமங்கலம் என்று சொல்கிறாய் ,அப்படியானால் நீ பெரிய அறிவாளியா ? உங்கள் அண்ணன் சபாபதி என்னிடம் பயின்று இன்று பெரிய புராண சொற் பொழிவாளராகி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார் .அவருடைய தம்பியாகிய நீ இப்படி குதற்கமாக பேசுகிறாயே என்று வினவியதுடன் அப்படியானால் நீயே ஒரு பாடலை சொல் பார்ப்போம் என்று கிண்டலாக அதட்டி கேட்டார் .{இவை யாவும் மற்றவர்கள் எழுதி வைத்தவையாகும் அருட்பாவில் ஆதாரம் இல்லை } 


இராமலிங்கம் மிகவும் மிகுந்த மரியாதையுடன் பாடலை பாட ஆரம்பித்தார் .அவர் பாடிய பாடல் வருமாறு .... 


ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியாது இருக்க வேண்டும்

மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை

மறவாது இருக்க வேண்டும்

மதி வேண்டும் நின கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வில் நான் வாழ வேண்டும்

என ...வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர்.அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதி யாயினார்கள் .இராமலிங்கம் உனக்கு பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை.ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி திட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று குரல் கம்மிடவும் குறு நா உளறவும் படபடத்து பதில் உரைத்தார் .

இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும் ,பக்குவ நிலையையும் ,கந்தக் கோட்டஞ் சென்று கவி பாடும் திறமையையும் கண்ட மகாவித்துவான்,---இராமலிங்கம் கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும்,உணர்த்தவும்,அறிவில் வல்லவர் என்று உணர்ந்து கல்விக் கற்பிப்பதை கைவிட்டு விட்டார்

 அன்றிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் சென்னையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச சென்று கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார் இளம் வயதிலேயே இறைவன் மீது பல பாடல்களை இயற்றிப் பாடினார்.எழுதினார் .

இராமலிங்கப் பெருமான் எந்த பள்ளியிலும் பயின்றது இல்லை!,எந்த ஆசிரியரிடத்தும் படித்தது இல்லை! எவரிடத்தும் உபதேசம் பெற்றது இல்லை ! எவரிடத்தும் தீட்சை பெற்றது இல்லை!சரியை,கிரியை,யோகம்,ஞானம்,போன்ற ஆன்மீக பயிற்ச்சி பெறவில்லை.கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார் கேட்க வேண்


டுவனவற்றை இறைவனிடமே கேட்டார் !.கல்வியும் கேள்வியும்,பதிலும், கருத்தும் இறைவனிடமே பெற்றதே தவிர வேறு யாரிடமும் கேட்கவில்லை கற்கவில்லை !,வேறு எந்த நூல்களில்  இருந்தும் படித்து தெரிந்து கொள்ள வில்லை என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். .


இறைவன் இராமலிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார்.குமாரப்பருவத்திலே என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்திற் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்வியை, என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடைப் பகுதியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில் எழுதி வைத்துள்ளார் .மேலும்


மேலும் பாடலில் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!.


வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்

மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது

பெம்மான் என்று அடிகுறித்துப் பாடும் வகை புரிந்த

பெருமானே நான் செய்த பெருந் தவ மெய்ப்பயனே

செம்மாந்த சிறியேனைச் சிறு நெறியிற் சிறிதும்

செலுத்தாமல் பெரு நெறியிற் செலுத்திய நற்றுணையே

அம்மானே என்னாவிக் கான பெரும் பொருளே

அம்பலத் தென்னரசே என் அலங்கல் அணிந்தருளே !

சிறுவயதிலேயே இறைவன் தனக்கு,-- அருளை வியந்து அளித்த பெருமையைப் பற்றி போற்றி புகழ்ந்ததோடு அல்லாமல் ,இச்சிறியவனை,சிறு நெறியிற் செலுத்தாமல் --அனைவராலும் போற்றும் பெருநெறியில் செலுத்திய நற்றுணையே என போற்றி புகழ்கின்றார்


அடுத்து


கருவிற் கலந்த துணையே என் கனிவிற் கலந்த அமுதே என்

கண்ணிற் கலந்த வொளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்

உருவிற் கலந்த அழகே என் உயிரிற் கலந்த உறவே என்

உணவிற் கலந்து சுகமே என்னுடைய வொருமைப்பெருமானே

தெருவிற் கலந்து விளையாடும் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான

சித்தி யளித்த பெருங் கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்

மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருண இதுவென்றே

வாயே பறையாய் யறைகின்றேன் எந்தாய் கருணை வளத்தாலே !

என்னுடைய கருவிலே கலந்த கருணைக் கடல்,நீ --அதுமட்டும் அல்லாமல் ,கனிவிற் ,கண்ணில் ,கருத்தில்,உருவில்,உயிரில் ,உணர்வில்,உள்ளத்தில்,உடம்பில்  முதலிய அனைத்திலும் கலந்து என்னை பிரியாமல் ,உண்மை அறிந்துகொள்ளும் ''மெய்ஞ் ஞான சித்தி'' அளித்த பெருங்கருணை தேவே .உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மருவிக் கலந்து (சமமாக ) வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுவென்றே --என்னுடைய வாயே பறையாய் {சத்தம் }யறைய வைத்து வேடிக்கைப் பார்க்கும் உம் பெருங் கருணை திறத்தை என்னென்று கருதி ! என்னென்று துதிப்பேன் !என்கிறார் வள்ளார் .

சிறு வயதிலே பள்ளிக்கு செல்லாமல்,யாரிடமும் கல்விக் கற்காமல்,உலகில் உள்ள எல்லாவற்றையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளும் அருள் அறிவும்,ஆற்றலும் பெற்றவராகும்.      


தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி விளக்கி உள்ளார் !


மேலும் இடம்பத்தையும் ஆராவாரத்தையும் ,பெருமறைப்பையும்,போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, பயிலுதற்கும்,அறிதற்கும் மிகவும் லேசுடையதாய் ,சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருஅருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யாகிய தமிழ் மொழி யினிடத்தே மனதை பற்ற செய்து அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாடல்களை பாட்டுவித்து அருளினீர் என்று தமிழ் மொழியின் சிறப்பினையும்,பெருமையும்  தெளிவுப் படுத்துகிறார்

அச்சிறு பருவத்திலே ஜாதி ஆசாரம்,ஆசிரம ஆசாரம்,என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய் என்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து ,அப்பருவம் ஏறுந்தோரும்  எனது அறிவை விளக்கஞ் செய்து,செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்க வைத்து அருளினீர் என்றும் .


உண்மைக கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர் !


வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்தானே ,அப்பருவத்திற்கு மிகவும் உரிய விரும்பும் இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்கு வித்து அருளினீர் என்றும்.

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே ,எல்லா உயிர்களுக்கும் இன்பம் தருதற்கு அகத்தும் புறத்தும் விளங்கிகின்ற ''அருட்பெரும்ஜோதி உண்மைக கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர் என்றும் .

வாலிபப் பருவம் தோன்றியபோதே சைவம் ,வைணவம் .சமணம்,பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு { கிருத்துவம்,இஸ்லாம் }பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும் .கதிகளும்,தத்துவங்களும் தத்துவசித்தி விகற்பங்கள் என்றும் [அதாவது உண்மை அல்ல }அச்சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள் ,சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் ,உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச சிறிதும் அனுட்டியாமற் [பற்று வைக்காமல் }செய்வித்து அருளினீர் என்றும் .

அன்றியும் வேதாந்தம் ,சித்தாந்தம்,போதாந்தம் ,நாதாந்தம் ,யோகாந்தம்,கலாந்தம்,முதலாகப் பல பெயர்க் கொண்டு பலபட விரிந்த மதங்களும் ,மார்க்கங்களும்,சமரச சுத்த சன்


மார்க்க சத்திய அனுபவத்தின் லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாமற் {அவைகளை பின்பற்றாமல் }தடை செய்வித்து அருளினீர் என்றும் தான் சிறுவயதில் எப்படி வாழ்ந்தேன் இறைவன் என்னை எப்படி ஆட்கொண்டு சென்றார் என்பதை மிகத் தெளிவாக இமாலிங்கப் பெருமான் அவரே தன் வாழ்க்கை சரிதத்தை எழுதி வைத்துள்ளார் ,


அடுத்து அவரே சொல்லுவதை கேளுங்கள் .

அங்கனம் செய்வித்தும் அதற்கு மேல் என்னை --உலகியலில் உள்ள பொன்னாசை ,பெண்ணாசை,மண்ணாசை,முதலிய எவ்வித இச்சைகளிலும் என் அறிவை ஓர் அணுத்துணையும் பற்று வைக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி ,எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் வேண்டும் என்னும் கருணை நன் முயற்சியைப் பெறுவித்துச சுத்த சனமார்க்கத் தனிநெறி ஒனறையே பற்றுவித்து எக்காலத்தும்,நாசமடையாத சுத்த தேகம் ,பிரணவதேகம் ,ஞானதேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும்,''கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,கருமசித்தி,யோகசித்தி,ஞானசித்தி, முதலிய எல்லாச சித்திகளும்,பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் சித்திப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்கு திருவுளங் கொண்டு, ''அருட்பெரும்ஜோதியராகிய'' உண்மைக கடவுள்  ஒருவரே ! ,----

நான் எவ்விதத்தும் ,அறிதற்கு அறிய உண்மைப் பேரறிவை அறிவிதத்தும் ,நான் காண்பதற்கு அறிய உண்மைப் பெரும் காட்சிகளைக் காட்டுவித்தும்,நான் எவ்வித்த்தும் செய்தற்கு அறிய உண்மைப் பெருஞ் செயல்களைச செய்வித்தும் ,நான் எவ்விதத்தும் அடைதற்கு அறிய உண்மைப் பெரும் நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அனுபவித்து அறிதற்கு அறிய உண்மைப் பேரணுபவங்களை அனுபவித்தும் ,எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்தில் இருந்து உயிரிற் கலந்து பெரும் தயவால் திரு நடம செய்து அருளுகின்றீர் ..

இங்கனம் செய்து அருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இராமலிங்கப் பெருமானை சிறுவயதிலேயே ஆட்கொண்டார் என்பதை யாரும் மறுக்க இயலாது .

அனைத்தும் இறைவனிடமே கேட்டுப் பெற்றதாக அவரே கூறும் பாடல்கள் !

ஆறாம் திருமுறையில் பாடிய பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம் !

ஏதும் ஒன்றும் அறியாப் பேதையாம் பருவத்தே என்னை யாட்கொண்டு எனை யுவந்தே

ஓதும இன்மொழியாற் பாடவே பணித்த ஒருவனே என் உயிர்த்துனைவா 

வேதமும் பயனுமாகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான 

போதகந் தருதற்கு இது தகுதருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே !   

எனது உடலும் உயிரும் பொருளும் நின்ன தல்லவோ

எந்தாய் இதனைப் பெருக வென நான் இன்று சொல்லவோ 

சின்ன வயதில் என்னை யாண்ட திறத்தை நினைக்குதே 

சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே !       

ஆதியிலே எனை யாட்கொண்டு என் அறிவகத்தே யமர்ந்த

அப்பா என் அன்பே என் ஆருயிரே அமுதே 

வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் 

மிகப் பெரிய பருவமென வியந்து அருளி அருளாம் 

ஜோதியிலே விழைவுறச செய்து இனிய மொழி மாலை 

தொடுத்திடச செய்து அணிந்து கொண்ட துறையே சிற்பொதுவில்

நீதியிலே நிறைந்த நடத்தரசே என்றடியேன் 

நிகழ்த்திய சொன்மாலையும் நீ நிகழ்த்தி யணிந்தருளே!

வெம்மாலைச சிறுவரோடும் விளையாடித் திரியும்

மிகச்சிறிய பருவத்தே வியந்து நினை நமது 

பெம்மானென்று அடிக்குறித்துப் பாடும் வகை புரிந்த

பெருமானே நான் செய்த பெருந்தவ மெய்ப்பயனே

செம்மாந்தச சிறியேனைச சிறு நெறியிற் சிறிதுஞ்

செலுத்தாமற் பெரு நெறியிற் செலுத்திய நற்துணையே 

அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே 

அம்பலத்தென் அரசே என் அலங்கல் அணிந்தருளே !


ஓதாது உணர்ந்திட வொளி யளித்து எனக்கே 

ஆதாரமாகிய அருட்பெரும்ஜோதி !  


''கற்றதும் நின்னிடத்தே ,பின் கேட்டதும் நின்னிடத்தே '' 


''பள்ளியில் பயிற்றாது எந்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து ''


''ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் '


''ஓதும் மறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி '


''ஓதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்த்திய என் மெய் உறவாம் பொருளே '''

'         

''ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் ''

        

எனபனப் போன்ற அகச்சான்றுகள் ஆறாம் திருமுறையில் குவிந்து கிடைக்கின்றன .இவை தெரியாமல் வள்ளலார் வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் அவரவர் கருத்துக்கு புலப்பட்டதை கண்டபடி எழுதி வைத்துள்ளார்கள் அருட்பாவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ,மேலோட்டமாக படித்து விட்டு எழுதுவது முற்றிலும் தவறாகும்.வரலாறு எழுதுபவர்கள் எல்லாம் சமய வாதிகளாகவே உள்ளார்கள்,சமய மதங்களில் பற்று உள்ளவர்கள் சமய மதம் கண் கொண்டு திருஅருட்பாவை பார்த்து எழுதுகிறார்கள்.அவர்களுக்கு உண்மை விளங்காது.அதனால் முன்னுக்குப் பின் முரணாகவே எழுதுகிறார்கள் .

சாதி,சமயம் ,மதம் இனம் மொழி நாடு முதலிய எதிலும் பற்று இல்லாதவர்களுக்கு மட்டும்தான் திருஅருட்பாவின் க


ருத்துக்கள் உண்மையாக விளங்கும்.அதே நேரத்தில் ஜீவ காருண்யமும்,உயிர் இரக்கமும்,பொது நோக்கமும் கொண்டு,உலகப் பற்று இல்லாமல்,உண்மையைத் தேடும் ஆர்வம் இருந்து  திருஅருட்பாவை படித்தால்தான் உண்மைகள் தானே விளங்கும்.

அதேபோல் இராமலிங்கப் பெருமான் உலகியலில் எந்தப் பற்றும் இல்லாமல் இறைவனுடைய பற்றை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டார் என்பது அவர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது. ..


சென்னை கந்தகோட்ட வழிபாடு!


கல்வி கற்க பள்ளிக்கு செல்லாத இராமலிங்கம் வீட்டிலும் தங்காமல் பள்ளிக்கும் செல்லாமல் நாள்தோறும் சென்னையில் உள்ள கந்த கோட்ட முருகப் பெருமானைப் பாடி வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள். கந்தசாமிக் கோயில் என்று வழங்கப் பெற்ற அதனைக் கந்தக் கோட்டம் என வழங்கத் தொடங்கியவர் இராமலிங்கப் பெருமானாரே.

மேலும் அனைத்து தெய்வங்களைப் பற்றியும்,போற்றிப் வழிப்பட்டு பாடல்கள் இயற்றி உள்ளார்.

அடுத்து அந்த தெய்வங்கள் எத்தனமையானது,அவைகளின் சக்தி ஆற்றல் எந்த அளவிற்கு உள்ளது.அந்த தெய்வங்கள் எங்கு இருந்து தங்களுக்கு,ஆற்றலையும் சக்தியும் பெறுகின்றன,அவைகளுக்கு சக்தியும் ஆற்றலையும் கொடுக்கும் மாபெரும் சத்தியும் ஆற்றலும் உள்ள தெய்வம் எங்கே உள்ளது ?,அதன் தன்மை என்ன ? உண்மை என்ன ? உருவம் என்ன ? எப்படி செயல்படுகிறது ?என்பதை தான் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் வெளிப்படையாக காட்டியும் சொல்லியும் உள்ளார் ...

ஆடல செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்    அனைத்தும் இறைவனிடமே கேட்டுப் பெற்றதாக அவரே கூறும் பாடல்கள் !

ஒரு கட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம்,அண்ணனுக்குத் தெரியாமல் வீட்டின் பின் புற வழியாக வந்து அண்ணியின் உபசரிப்பால் உணவு அருந்திவிட்டு செல்வது வழக்கமாக கொண்டார்.,ஆனாலும் அண்ணனுக்குத் தெரிந்தும், தெரியாதது போல் இருப்பார்.


உணவு !


இராமலிங்கம் உணவைப்பற்றி எப்போதும் நினைத்ததில்லை ,பசி எனபது என்னவென்று தெரியாமல் இறைவன் மீது பற்றுக் கொண்டு தோத்திரம் செய்வதும் ,பாடல் இயற்றுவதுமே அவர் பெரும்பணியாகக் கொண்டார் .வீட்டில் உணவு இல்லாவிட்டாலும்,அவர் பசியை அறிந்து இறைவனே உணவு வழங்கி பசியைப் போக்கியுள்ளார் .

நான் பசித்த போதெல்லாம் தான் பசித்த தாகி

நல்லுணவு கொடுத்து என்னைச் செல்வமுற வளர்த்தே

ஊன் பசித்த விளைப்பொன்றும் தோற்றாதே வகையே

ஒள்ளிய தெள்ளமுதம் எனக்கு இங்கு வந்தளித்த வொளியே

வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்

வாழ்வெனக்கே யாகியுற வரமளித்த பதியே

தேன் பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்

திருநடஞ் செய் யரசே என் சிறு மொழி ஏற்று அருளே !

என பல பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார் .இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே இராமலிங்கம் ,அவர்ப் பசியைப் போக்குவது இறைவன் கடமை அல்லவா ! ஆதலால் இறைவனே எக்காலத்தும் அவர் பசியைப் போக்கியுள்ளார் இருந்தாலும் தன்னுடைய அண்ணியார் அன்பில் கட்டுப்பட்டு உணவிற்கு வீட்டிற்கு வருகிறேன் என்று ஒப்புதல் அளித்தார்,


அவருடைய் தந்தையார் திதி வந்தது !


தந்தையார் திதி வந்ததும் அவருடைய அண்ணார் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து ஏற்பாடு செய்து வழிப்பட்டு அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார் .அந்த நேரத்தில் தம்பி இராமலிங்கம் வீட்டில் இல்லை .அதை நினைத்து அண்ணியார் மிகவும் வேதனைப்பட்டார் ,அன்று இரவு இராமலிங்கம் எப்போதும் போல் மாலை இரவு நேரத்தில் வந்தார்.அண்ணியார் அழுது கொண்டே அவருக்கு உணவு படைத்தார்,அதைக்கண்ட இராமலிங்கம் ஏன் அண்ணி அழுகிறீர்கள் என்று கேட்க,அனைவரும் வந்து கலந்து கொண்டு சூடாக உணவு உண்டுவிட்டு சென்றார்கள் .நீ ஆறிய உணவை யாருக்கும் தெரியாமல் வந்து உண்கிராயே ! அதை நினைத்து வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது .

நீ இனிமேல் வெளியில் எங்கும் செல்லாமல் ,உன் அண்ணன் சொலபடிக் கேட்டு வீட்டிலே தங்கி இருப்பா என்று அன்பு கட்டளை இட்டார்..அண்ணியின் அன்புக்கு கட்டுப்பட்டு சரி அண்ணி வீட்டிலே தங்குகிறேன் ஆனால் ஒரு விண்ணப்பம் எனக்குத் தனியாக ஒரு அறையை கொடுங்கள் அங்கு நான் தனிமையில் தங்கிக் கொள்கிறேன் என்றார்...உன் விருப்பபடியே உங்கள் அண்ணாரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என்றார்.  .

.

வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.!   


ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார்


. சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சி யளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

எல்லோருக்கும் காட்சித் தருவதாக கூறுகின்றார்களே எனக்கு ஏன் காட்சி தரவில்லை என்று கண்ணாடி முன் அமர்ந்து பாடிய பாடல் .

பண் ஏறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்

கண் ஏறுபடும் என்றோ கனவிலேனும்

காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ

விண் ஏறும் அரிமுதலோர்க்கு அறிய ஞான

விளக்கே என்கண்ணே மெய் வீட்டின் வித்தே

தண் ஏறு பொழிவில் தணிகை மணியே ஜீவ

சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே !

என்று தன்னுடைய எண்ணத்தையும் விருப்பத்தையும்,கண்ணாடி முன் அமர்ந்து பார்த்து உன்னுடைய உண்மை நிலையைக் காட்டவேண்டும் முறையிடுகிறார் .அதற்கு இறைவன் தனக்கு எப்படி காட்சிக் கொடுத்தார் என்பதை பின் வரும் பாடலில் பதிவு செய்கிறார்.

சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்

தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்

கூர்கொண்ட வேலும் மயிலும்,நற் கோழிக் கோடியும் அருட்

கார் கொண்ட வண்மைச் தணிகா சலமும் என் கண்ணுற்றதே !

எனற பாடல் வாயிலாக இறைவன் எப்படிக் காட்சிக் கொடுத்தார் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இவற்றைப் படிக்கும் சமயவாதிகள் சன்மார்க்கிகள் மற்றும் பலர் தணிகை முருகன் கண்ணாடியில் இராமலிங்கத்திற்கு காட்சி கொடுத்தார் என்று நினைத்துக் கொண்டும் உண்மை என்றும் பேசிவருகிறார்கள் அவை உண்மை அல்ல ! என்பதை பின்னாளில் முருகன் என்பது யார் ?அதற்கு என்ன பொருள் என்பதை அவரே தெரியப் படுத்துகின்றார் அதை ஊன்றி படித்துப்  பார்த்தால் உண்மை விளங்கும் .


சொற்பொழிவு !


சென்னையில் மிகவும் பிரபலமானவர் சோமுசெட்டியார்  என்பவராகும் ,தங்கம் வைரம் வியாபாரம் செய்யும் தொழில் உடையவர்,அவர் ஒவ்வொரு வருடமும் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம்.

அந்த வருடம் இராமலிங்கம் அண்ணார் சபாபதியை புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.சபாபதி சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்     

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு,அன்று உடல்நலம் குன்றியதால் ஒப்புக் கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்ப் பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடி யிருந்தனர். அண்ணன் சொன்ன படியே,அண்ணாருடைய நிலைமையை சோமு ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தார்,வேண்டா வெறுப்பாக சம்மதித்து ஒப்புக் கொண்டார்....சபாபதி அவர்கள் வரவில்லை என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியை இழந்தனர்,கூட்டத்தில் சலசலப்பு காணப்பட்டது .


கன்னி சொற்பொழிவு !


இராமலிங்கம் விழா மேடைக்கு வந்தார்.எல்லோரும் அதிசியமும் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தார்கள் .

இராமலிங்கம் சேக்கிழார் பாடிய ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன்,நிலவுளாவிய நீர் மலிமேனியன் ,அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன் .அவன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் '' என்ற பாடலை மனமுருகப் பாடி அதற்கு விளக்கம் சொன்னார் .அவற்றைக் கேட்ட மக்கள் உணர்வின்றி மெய்சிலிர்த்துப் போனார்கள் .அதுதான் இராமலிங்கத்தின் கன்னி சொற்பொழிவாகும்.அதன்பின் அவரிடம்,--சோமு ஐயா அவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும்,--மறுநாளும் நீங்களே வந்து ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்றும்,மேலும் அங்கு கூடியிருந்தோர் அனைவரும் வெகுநேரம் வற்புறுத்தினர். ராமலிங்கமும் அதற்கு அண்ணாரைக் கேட்டு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

மறுநாள் காலையில் சோமு ஐயா அவர்கள் ,தன்னுடைய சவாரி வண்டியில் சபாபதி வீட்டிற்குச் சென்றார்.சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை,நாம் சொற்பொழிவுக்கு போகாததால் வருத்தத்துடன் வந்து இருக்கிறார் என்று நினைத்து,ஐயா இன்று நான் நிச்சயம் வந்து விடுகிறேன் எனக்கு உடல்நிலைத் தேறிவிட்டது என்று சோமு அய்யாவிடம் சொன்னார் .சபாபதி நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் ,உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எதைப்பற்றியும் மனம் வருத்தம் வேண்டாம் .

நான் இன்று வந்ததின் நோக்கம் ,இன்றும் உன்னுடைய தம்பி இராமலிங்கத்தை சொற்பொழிவு செய்ய அனுப்பவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் .சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை ....ஐயா என்ன சொல்றீங்க எனக்கு உடல் நிலை குணமாகி விட்டது நான் வந்து விடுகிறேன் வருத்தப் படாதீர்கள் என்று தணிந்த குரலில் பதில் உரைத்தார்..அதற்கு சோம


ு ஐயா அவர்கள்,நான் சொல்லுவதை கேளுங்கள்.உங்கள் தம்பி இராமலிங்கம் நேற்று ஆற்றிய சொற்பொழிவு ஜனங்களை மிகவும் கவர்ந்து விட்டது .ஜனங்கள் அவரையே இன்றும் அழைத்து வாருங்கள் என்று விரும்புகிறார்கள் ,அதற்காகத்தான் சொல்லிவிட்டு போகலாம் என்று நானே வந்தேன் என்றார்.அதற்கு சபாபதி பதில் சொல்ல முடியாமல் சரிங்க ஐயா அப்படியே அனுப்பி வைக்கிறேன் என்று ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்தார் .

தன்னுடைய மனைவி பாப்பாத்தியை அழைத்து ,இது என்ன அதிசயம என்று ஒருவருக்கொருவர் பேசி அதிசயித்துப் போனார்கள் இராமலிங்கமா! என் தம்பி இராமலிங்கமா! --எனக்கு ஒன்றும் புரியவில்லை உனக்கு ஏதாவது புரிகிறதா தெரிகிறதா என்று தன மனைவியிடம் கேட்டார்.எனக்கு இராமலிங்கத்தைப் பற்றித் தெரியும் ஆனால் இப்படி இந்த அளவிற்கு பெரியதாக ஒன்றும் தெரியாதுங்க என்று கண்களில் நீர் பெருக உணர்ச்சி வசப்பட்டவராக பதில் அளித்தார் .


மறுநாள் சொற்பொழிவு நிகழ்ச்சி ! 


முதல் நாள் இராமலிங்கத்தின் சொற்பொழிவு கேட்ட ஜனங்கள் வாயிலாக சென்னை நகரம் முழுவதும் அதன் செய்தி பரவிவிட்டது .எட்டு வயது சிறுவன்,சோமு ஐயா வீட்டின் நிகழ்ச்சியில்  அருமையான சொற்பொழிவு செய்கிறானாம் என்று அறிந்து மக்கள் கூட்டம் மறுநாள் அங்கு அமர்வதற்கு இடம் இல்லாமல் நிரம்பி விட்டது.

சபாபதியும் தன்மனைவி பாப்பாத்தியும் என்னதான் இராமலிங்கம் செய்கிறான் என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு தங்களை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று துணியால் தங்களை மறைத்துக் கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சென்றார்கள்.அங்கு மக்கள் கூட்ட நெரிசலில் ஒரு ஓரமாக நின்று கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இராமலிங்கம் மேடைக்கு வந்தார் அமர்ந்தார் .மக்கள் அனைவரும் ஆவலோடு அமைதியாக சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.சபாபதியும் பாப்பாத்தியும் ஊன்றி கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.கடல் அலைகள் போல் தமிழ் வார்த்தைகள் இலக்கணம் இலக்கியம்,சொற்பொருள் யாவும் ஒருங்கே புயல் சீற்றம் போல் கொட்டிக் கொண்டே இருந்ததன் .அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ! உலக ரகசியங்களையும்,உயிர்களின் படைப்புகளையும்,கடவுளின் உண்மைகளையும்,மனித வாழ்க்கையின் பெருமைகளையும் மனிதன் கடவுளை அறிந்து அருளைப் பெற்று கடவுளுடன் எப்படி இணைய முடியும் என்பதையும் தமிழும்,தமிழின் சிறப்பும் பற்றியும,கேட்போர் மயங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துகளால் பிணைந்து வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தார்.

நேரம் அதிகமாகி விட்டதால் அவரே சொற்பொழிவை நிறுத்திக் கொண்டார்.உலக வரலாற்றில் இதுபோன்ற சொற்பொழிவை கேட்டதில்லை என்று மக்கள் அனைவரும் அக மகிழ்ச்சியுடன் கண்டு கேட்டு உணர்ந்து சென்றவண்ணம் இருந்தார்கள்.சோமு செட்டியார் அவர்களுக்கு மகிழ்ச்சி அளவில் அடங்காமல் மேடைக்கு வந்து இராமலிங்கத்தை கட்டித் தழுவி,உள்ளம் பூரித்து முத்தமிட்டு வாரி அனைத்துக் கொண்டார் .

இதை எல்லாம பார்த்துக் கொண்டு இருந்த சபாபதியும்,பாப்பாத்தியும்.இவன் இராமலிங்கம் இல்லை,இவனே கடவுள் ,கடவுளே வந்து சொற்பொழிவு நிகழ்த்தியது என்று நினைந்து தங்களையே தங்களால் நம்ப முடியவில்லை என்பதை உணர்ந்து கண்ணில் நீர் பெருக யாருக்கும் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்.         


தொடரும்.

No comments:

Post a Comment