Thursday 9 March 2023

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் விபரம்

 தினமும் ஐந்து முறை நிறம் மாறக்கூடிய சிவலிங்கம், வண்டு துளைத்த லிங்கம், உலகை சமநிலைப் படுத்த அகஸ்தியர் தென் திசைக்கு வர அவருக்கு கல்யாண சுந்தரராக திருமண காட்சியை காட்டிய திருத்தலம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தஞ்சாவூர், திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் பற்றிய முழு விபரம் இங்கு பார்ப்போம்.

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் விபரம்

மூலவர் - கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

அம்மன்/தாயார் - கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி

உற்சவ மூர்த்தி - கல்யாண சுந்தரேஸ்வரர்

விருட்சம் - வில்வம்

தீர்த்தம் - சப்தசாகரம்

புராண பெயர் - திருநல்லூர்

அமைந்துள்ள இடம்: தஞ்சாவூர் நல்லூர்


கோயில் திறக்கும் நேரம் - காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 வரை

மாலை 5.30 மணி முதல் இரவு 8 வரை


இந்த திருக்கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும். அமர்நீதிநாயனாரை ஆட்கொண்டதும், அப்பருக்கு திருவடி சூட்டிய பெருமை கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இந்த கோயில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் திருநல்லூரில் அமைந்துள்ளது.


கோயிலின் பெருமை

இமயமலையில் சிவன் - பார்வதி திருமண காட்சியைக் காண உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் திரண்டன. இதனால் வட திசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. உலக சமநிலை மாறுவதை சமப்படுத்த அகஸ்தியரை தென் திசைக்கு செல்லும் படி இறைவன் கட்டளையிட்டார்.

உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார்.

இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் மூர்த்திக்கு முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார்.

இந்த கல்யாணசுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாணசுந்தரேஸ்வரர் - பார்வதி சிலையை காண முடியும்.


கோயிலின் அமைப்பு

கோயில் முன் குளமும், ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் நதவனம், மடப்பள்ளி, விநாயகர், நடராஜர் சன்னதி, மகாகாளியம்மன் சன்னதி, கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ணன் லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.


கல்யாணசுந்தரர் சுதை

மூலவர் அமைந்திருக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் சிலைக்கு பின் இருக்கும் கல்யாண சுந்தரர் சிலை சுதை சிற்ப வடிவில் உள்ளன.

சுதை - சுண்ணாம்பு, களிமண் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட விக்ரகம்.


சப்தஸ்தானம்

சப்தஸ்தானம் எனும் ஏழுர்த்தலங்களில் திருநல்லூர், திருப்பாலைத்துறை, மட்டியான்திடல், பாபநாசம்,கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், ஆகிய தலங்களாகும்.


மகம் நட்சத்திரத்திர கோயில்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும்.


மற்ற புராண நிகழ்வுகள்

ஆதிசேஷணுக்கும், வாயு பகவானுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது கயிலை மலையிலிருந்து வாயுவால் வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மற்றொரு சிகரம் சுந்தரகிரி எனப்படுகிறது.

அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசருக்கு இறைவன் திருவடி சூடிய திருத்தலம்

தர்மண், குந்தி தேவி பூஜித்து பேறு பெற்ற திருத்தலம்.

முசுகுந்தன் இந்திரனிடமிருந்து பெற்ற திருவாரூரில் தற்போது இருக்கும் தியாகராஜ பெருமானை, இந்த தலத்தில் மூன்று நாட்கள் வைத்து பூஜித்து, பின்னர் திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார்.

லிங்கத்தின் மீது துளைகள்

பிருங்கு முனிவர் வண்டு வடிவில் வந்து இறைவனை வழிபட்ட ஆலயம்.

வண்டு வடிவில் இறைவனை வலம் வந்து வழிபட்டார். இதன் காரணமாக இந்த சிவலிங்கத்தின் மீது சில துளைகள் காணப்படுகின்றன.

தற்போது திருவெண்டுறை என அழைக்கப்படும் திருவண்டுதுறை வண்டுறை நாதர் கோயிலின் வரலாறும் இதையே கூறுகின்றது.


நிறம் மாறும் சிவலிங்கம்

இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார்.

பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.


தாமிர நிறம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்க நிறம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி தந்து அருள் தருவதால் இவருக்கு பஞ்சலிங்கேசர் என பெயர் பெற்றுள்ளார்.

இந்த கோயிலில் அமர்நீதி நாயனாருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். இது குறித்த பிரதிமைகள் கற்சிலைகளும், செப்பு சிலையும் உள்ளன.

இங்கு சோழர் கால 22 கல்வெட்டுகள், ஒரு முஹய்சரர் கல்வெட்டு என 23 கல்வெட்டுகள் உள்ளன.


திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்

புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ

சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த

நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்

சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்

இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி

நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே..




No comments:

Post a Comment