Wednesday 27 March 2019

நந்தி தேவர் என்பவர் யார்...

நந்தி தேவர் என்பவர் யார்...

சிஷி: மேலேயருளிய நந்திதேவர் என்கிறவர் யாவர்?

குரு:  சிவாதார முனிவருடைய தவத்தினால் அவருக்குப் புத்திரனாய்த் தோன்றி பரமசிவனைக் குறித்துத் திருவையாற்றிற் றவமிழைத்து நெற்றிக் கண் மான் மழு சதுர்ப்புஜம் காளகண்டம் முதலியவை விளங்கச் சிவசாரூபமும் இரஜிதப் பிரம்பும் சுரிகையும் கைலைக்காவலும் கணங்களுக்குத் தலைமையும் பெற்றுக் கொண்டார். அன்னணம் பெற்றுக்கொண்ட இரண்டாஞ் சம்புவாகிய ஸ்ரீ நந்தி யம் பெருமான்; கைலாய அந்தராளத்தின் யாமியவாயின் மண்டபத்திற் றென் முகமாய்க் கொலு வீற்றிருந்து சிவகட்டளைக் கெதிர்பார்த் திருப்பவராம். சிவ தரிசனத்திற்கு முன்னம் அவர் தரிசனமாம். அவர் தரிசனம் சிறந்த யோகீஸ்வர ர்கட்கு முபாதானமாகும். இவரே புராணங்களிலும் ஆகமங்களிலும் வேதங்க ளிலும் "பரமசிவமே பரத்துவம்" என்று முடிபு கூறியிருக்க " விஷ்ணுவே பரத்துவம்" என்று மாயையின் வயப்பட்டு அசத்தியம்பேசி நீட்டிய வியாசருடைய கரங்களைச் சபித்துத் துணித்த அபரமசிவமாவார். பிறவும், வசுமணாவதாரஞ் செய்து உலகத்தில் வீரசைவத்தை நிலை நாட்டிய ஆசானு மிவரெனப்படும். மேனுவன்ற கைலைக் காவற் கொலுமண்டபத்தில் மேற்கே சிரசும் கிழக்கே பாதமும் வைத்து வலத்தோள் கீழாய்ப் படுத்து நெற்றிலோசனச் சுடரானது பத்துயோஜனை வரை பரவி யாவரு முண்ணுழையாது காவலிருக்கும் படிக்கும் உள்ளே புகப்  பலம்பெற்ற சிவபதிகண் மட்டும் தடையிலாது அச்சுடருட் புகுந்து காற்புறமாயுள்ளே செல்லும்படிக்கும் சிவயோக நித்திரைகொள்வாரும், கோமுகம்போல நீண்ட வதனமுள்ளாரும் ஸ்ரீ சைலவடிவமாகிச் சிவனை வதியப் பெற்றாரும் இவரேயாவார். சிவாதார புத்திரரென்பதைச் சிலாதார புத்திரரென்று அக்ஷரப் பிசகா யதிர்க்கப்பட் டிருப்பதுமுள.