Sunday 9 April 2023

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை...

 சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை...


  நான் கேட்ட ஒரு பழைய பாடல் , என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது.


“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை.” 


எத்தனையோ ஆண்டுகளாக நாம்  கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது !

ஆனால் இன்று ஏனோ ,

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் என் உள்ளத்தின் உள்ளே  ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு 

அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன.


“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”


"இசைத்தமிழ் நீ செய்த 

அரும் சாதனை "பாடலின் இடையில் வரும் வரிகள் இவை.


இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே ,

அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை ?


நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்.


“ அது வந்து , 

அதாவது , சிவனின் திருவிளையாடல்களில் 

அதுவும் ஒன்று.

அதற்கு மேல்...முழுசா தெரியலியே !”


சரி , பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்.


கண்ணதாசன்.


சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்!

அவர் ஒரு வரி எழுதினால் , 

அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் .

 

கூகிளில் அங்கும் இங்கும் ஓடியாடி  ,

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையை தேடிப்  பிடித்தேன்.

அது இதுதான்.


அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன்  - அவன் பெயர் அரதன குப்தன்- மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தான்


காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் , தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.


எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர , 

உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது  தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.


வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே ஒரு புன்னைவனம்.

அதில் ஒரு வன்னிமரம் ; அருகில் ஒரு சிவலிங்கம்.


சற்றுத் தள்ளி ஒரு கிணறு.


கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு , 

அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும் !


காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள் ; கதறி அழுதாள்.


காரணம் ?


அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்.

.

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது.

.

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .

.

நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட , உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்.


சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.

அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே  இந்தப் பெண்ணுக்கு  ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..!”

.

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.

இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், 

அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான்.


இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.


கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்.


கள்ளம் இல்லாத உள்ளம் கொண்ட ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல ,அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி.


அப்புறம் என்ன ?


வழக்கு சபைக்கு வந்தது.

திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்.


“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி ” என்று கூறினாள் ரத்னாவளி.

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : “ஓஹோ ,அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 


கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.


கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ; தொழுதாள்.


கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி :  “ஈசனே , இது என்ன சோதனை ? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார் ? சொல் இறைவா , சொல் ?”

ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ , அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :


"நாங்கள் சாட்சி.."


குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க , 

ஈசன் அங்கே எழுந்தருளி   நின்றாராம்:


“ ஆம் , இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்.

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக  , கல்யாணம் நடந்த இடமான  திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும் ” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்.


பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்.


இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில் , 

வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்.


நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?


ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன்.

ஆனால் அப்போது  இந்தக் கதை தெரியாததால் தேடிப் போய் பார்க்கவில்லை .


இனி போகும்போது கவனித்துப்  பார்க்க வேண்டும்.


கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு !


கும்பகோணத்திலிருந்து 6கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறது.


( “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறார் கல்கி)


கதையைப் படித்து முடித்த நான் , 

கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன்.


“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ ?”


கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 

இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே !

No comments:

Post a Comment