Wednesday 1 February 2023

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் அழைந்துள்ள சிவன் கோவில். இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘வடக்குநாதர்’ என்பதாகும்

 நெய்யில் மறைந்த சிவலிங்கம்...!


கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. 


இந்த லிங்கத்திற்கு பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்து வந்ததன் காரணமாக, நெய் உறைந்து சிவலிங்கத்தையே மறைத்து விட்டது


கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் அழைந்துள்ள சிவன் கோவில். இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘வடக்குநாதர்’ என்பதாகும்


.


இங்குள் மூலவருக்கு பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.


பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்து வந்ததன் காரணமாக, நெய் உறைந்து சிவலிங்கத்தையே மறைத்து விட்டது. அப்படி உறைந்த நெய்யின் உயரமே சுமார் 4 அடி இருக்கும் என்கிறார்கள்.


எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்திருந்தாலும், வெயில் காலத்தில் வெப்பம் தகித்த போதிலும், உறைந்த நெய்யானது உருகுவதில்லையாம்.


இன்னும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அபிஷேக நெய் பிரசாதத்தை வாங்கி உண்டால், தீராத நோய்களும் தீரும் என்கிறார்கள்.


கேரள மாநிலம், திருச்சூரில் வடக்குநாதர் கோவில் இருக்கிறது.  இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், 16 வகையான பேறுகளை அடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம்:


தல வரலாறு


ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். 


ஜமதக்னி முனிவரிடமிருந்த காமதேனுப் பசுவின் சிறப்புகளை அறிந்த கர்த்தவீரியன் என்ற மன்னன், அந்தப் பசுவைத் திருடிச் சென்று விட்டான்.


கர்த்த வீரியனை அழித்துப் பசுவை மீட்டு வந்தார் பரசுராமர். இதனால் கர்த்தவீரியனின் மகன்களுக் கும், பரசுராமருக்கும் பகை ஏற்பட்டது. 


இதனால் அவர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கொன்றனர். இதையடுத்து அரச குலத்தவர் மீது கோபம் கொண்ட பரசுராமர், கார்த்த வீரியன் மகன்களை அழித்ததுடன் நிற்காமல் அரச குலத்தவர்கள் பலரையும் அழித்தார்.


அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர், சிவபெருமானுக்குப் பல கோவில்களை நிறுவ விரும்பினார். 


அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார்.


கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று, பரசுராமரின் கையிலிருந்து வீசியெறிந்த வேள்விக்கான அகப்பை விழுந்த இடம் வரைப் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தான்.


புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார்.


சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார்.


ஆனால் போனவன் வரவில்லை. அங்கிருந்த அமைதி அவனை கட்டிஇழுத்தது. அங்கேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கினான்.


நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். 


அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். 


இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. 


அமர்நாத் கோவில் லிங்கத்தைப் ‘பனிலிங்கம்’ என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.


மூலவருக்கு நெய்  கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, மூலவருக்குக் காட்டப்படும் தீப ஆராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. 


இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.


பரசுராமரால் உருவாக்கப்பட்ட புதிய நிலப்பரப்பில் வடக்கிலிருந்த குன்றில் இறைவன் இருந்ததால், இத்தல இறைவன் வடக்குநாதர் என்று அழைக்கப்படுகிறார்.


கோவில் அமைப்பு

திருச்சூர் வடக்குநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்றே நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. 


வட்ட வடிவத்திலான கருவறையில், சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். 


கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும்.


ஆலயத்தில் சிம்மோதரனுக்கும், கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


மேலும் சங்கு, சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கான சமாதியும் இடம் பெற்றிருக்கிறது.


வழிபாட்டுப் பலன்கள்

இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். 


குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.


மூலவருக்கு, இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் ‘திருப்புகா வழிபாடு’ எனும் வழிபாட்டைத் தொடர்ந்து, 41 நாட்கள் பார்த்து வந்தால், வழிபடுபவர்கள் நினைக்கும் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும். 


இந்த இரவு நேர வழிபாட்டிற்குத் தேவலோகத்தினர் பலரும் வருவதாகவும், அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக, இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும்.


இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.


அமைவிடம்

கேரள மாநிலம், திருச்சூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தேக்கின்காடு எனப்படும் சிறிய குன்றுப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து பல நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


விலகி  இருக்கும்  நந்தி

சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது.


பிரதோ‌ஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.


அமிர்தம் கிடைக்க தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். 


அந்த பாம்பு கோவில் கருவறை முன்பிருக்கும் வாசலில், மணியாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதனால், பிரதோ‌ஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார்.


திருச்சூர் வடக்குநாதர் கோவில் ‘பெருந்தச்சன்’ என்பவரது காலத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது.


அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் ‘யோகதிரிப்பாடு’ எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, நிர்வாகம் நடைபெற்றது. 


அதன் பிறகு, கொல்லம் ஆண்டு 981–க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன், ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில், இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங்கினர்.


மன்னரின் காலத்தில், கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.


அப்பகுதி மக்கள், அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாகத்தான் இருக்கும். அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆனால், அவர்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழா நடத்த முடியாமல் போய்விட்டது என்கின்றனர்.


திருச்சூர் பூரம் திருவிழா

கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. 


இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். 


இந்தத் திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை.


இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். 


இந்தத் திருவிழாவில் யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவில்  சிறப்புகள்

இந்தக் கோவிலுக்கு முதன் முதலாக வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது கைகளால் எழுதி வேண்டிக்கொள்கிறார்கள்.


இவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.


குழந்தைப்பேறு இல்லாமலிருந்த சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதியர் இங்கிருக்கும் இறைவனை வேண்டித்தான், ஆதிசங்கரரைத் தங்களது மகனாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொருஆண்டும், ஆடி மாதம் முதல் நாளில் இந்தக் கோவிலில் ‘யானையூட்டு விழா’ நடத்தப்படுகிறது. இவ்விழாவின் போது, இக்கோவிலின் தெற்குக் கோபுர வாசலில் அணிவகுத்து நிற்கும் யானைகளுக்குக் கஜவழிபாடு செய்யப்படும்.


இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், யானைகளுக்கு உணவளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.


இந்தக் கோவிலில் சிவராத்திரி நாட்களில் கோவிலைச் சுற்றிலும்  லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

No comments:

Post a Comment