Tuesday 27 June 2023

ஒளவை பிராட்டியார் ஞான குறள்

 Source சித்தர்களின் குரல், சிவசங்கர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid036FDPJUsvJzSNuYgFA5DZmvUQy4nh7NKWtUC88stFb8k4AhVN6eHfX2uHtH42eDTql&id=1615171208699125&mibextid=Nif5oz


ஔவையின் ஞானக்குறள் - 06

------------------------------------------------------

அமுத தாரணை


இந்த அதிகாரத்தில் என்தாயார் ஒளவை பிராட்டியார் நமது உடலில் அமிர்தம் ஊறும் இடங்களைக் குறித்துத் தான் ஔவை பாடியுள்ளார். அமிர்தமானது உடலில் நாக்குப் பகுதியில் ஐந்து இடங்களில் சுரந்து கொண்டிருக்கிறது. இது இனிப்புச் சுவையுடையதாக இருப்பதால் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது.

(01) அமிர்தம் நாவின் நுனியில் சுரக்கிறது. இனிப்புள்ள ஊற்றுநீர் போன்ற சுவை உடையது.

(02) புவனாமிர்தம் நாவின் நடுவில் சுரக்கிறது. இளகின இனிப்பான சர்க்கரைப் பாகுவைப்போல் சுவையுடையதாக இருக்கும். ஞானக் கிரியைகள் செய்யும்போதும், ஞானநிலையில் வரும். நினைவுகளின் உணர்வுகளாலும் இவ் அமிர்தம் சுரக்கிறது. 

(03) மண்டலாமிர்தம் - நாவின் அடியில் சுரக்கிறது. குழம்பிய சர்க்கரைப் பாகுவைப் போல் சுரக்கிறது.

(04) ரகசியாமிர்தம் - உள்நாக்கின் அடியில் சுரக்கிறது. முதிர்ந்த சர்க்கரைப் பாகுவைப் போன்று சுரக்கிறது.

(05) மௌனாமிர்தம் - உள்நாக்கிற்கு மேல்புறம் சுரக்கிறது. வெகு இனிப்புள்ள குளிர்ந்த மணிக்கட்டியைப் போல் சுரக்கிறது. அனுக்கிரகத்தினாலும் துரியநிலை அனுபவத்தாலும் இவ் அமிர்தம் சுரக்கும்.


பாடல்:- 01

-----------------


"அண்ணாக்குத் தன்னையடைத்து அங்கு அமிர்து உண்ணில்

விண்ணோர்க்கு வேந்தனு மாம்"


பொருள்:-

           "சாதகன் பார்வையையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தி ஞான தவம் செய்யும்போது, பிரணவ உச்சியில் உள்ள நாக்கின் மத்தியிலே சுரக்கும் அமிர்தத்தை உண்டாக்கால், விண்ணோர்களாகிய தேவர்களுக்கு அரசனாகுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                  திருவடி ஞான தவம் செய்யும்போது பார்வைக்கும் மனதிற்கும் முக்கியப் பங்கு ஒன்றுள்ளது. அது பார்வையையும் மனத்தையும் அகாரத்தில் (வலது திருவடி) ஒருமுகப்படுத்தி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுதான். அப்போது பிரணவ உச்சியில் உள்ள அண்ணாக்குப் பகுதியின் மத்தியில் இனிப்புச் சுவையுடைய நீர் ஊறி கரக்கும். இது அமிர்த நீராகும். இதை அப்படியே உண்டுவிடவேண்டும். அப்படி உண்டுவிட்டால், சாதகன் தேவர்களுக்கெல்லாம் அரசனாகிவிடுவான்.


பாடல்:- 02

-----------------


"ஈரெண் கலையினில் நிறைந்தஅமிர்து உண்ணில்

பூரண மாகும் பொலிந்து" 


பொருள்:-

           "ஈரெண் - ஈரெட்டு, இரு எட்டு - பதினாறு கலைகளையுடைய சத்திர கலையாகும். அப்படி சந்திர கலையில் நிறைத்துள்ள அமிர்தத்தை உண்ணும் தேகம், சந்திரனைப் போல் பொலிவுற்று ஒளிவீசிக் கொண்டிருக்கும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                சந்திர கலைகள் பதினாறு கொண்டு ஒளிவீசிக் எண்ணிக்கையிலான கலைகளைக் கொண்டு ஒளிவீசிக் கொண்டிருக்கும். பௌர்ணமி நாட்களில் இந்த பதினாறு கலைகளின் ஒளிவீசும் வெண்ணிறப் பொலிவுகளை நாம் காண முடியும். சந்திரனின் பதினாறு கலைகள் பௌர்ணமி தினத்தன்றே பூரணமாக வெளிப்படும். அதுபோல சந்திர கலையில் பார்வையையும் மனத்தையும் ஒருங்குவித்து ஞான தவம் செய்தால், அமிர்தம் ஊறி ஊற்றாய் சுரக்கும். அந்த சந்திர அமிர்தத்தை உண்டுவிட்டால். சந்திரப் பிரகாசத்தைபோல நமது தேகம் அடைய வேண்டியதைப் பூரணமாய்ப் பெற்று ஒளிவீசித் திகழும்.


பாடல்:- 03

-----------------


"ஓங்கார மான கலசத்து அமிர்து

உண்ணில் போங்காலம் இல்லை புரிந்து" 


பொருள்:-

             "போங்காலமில்லை - சாகும் நிலையில்லை. மரணமற்ற நிலை இது. சாதகன் ஞான தவம் செய்யும்போது பிரணவத்தின் உச்சியில் சுரக்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், அவனுக்கு மரணமற்ற பெருநிலையை அடைந்திடுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                 ஓங்காரம் இருக்கும் இடமே கலசம் என்று உவமையாக ஒளவை கூறியுள்ளார். அமிர்தம் கலசத்தில் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு, கலசம் என்பது நமது தேகம். தேகம் அமிர்தமாக மாற வேண்டுமென்றால், தேகம் அமிர்தத்தை சாப்பிட வேண்டும். ஞான கர்மத்தின்போது பருதி, மதி, சுடர் ஆகிய முக்கலைகளையும் ஒருங்கே அக்கினிக் கலையில் கூட்டுவித்து தவம் செய்யும் போது ஓங்காரமாகிய பிரணவத்தில் சுரக்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், மரணமற்ற பெருவாழ்வினை அடைந்துவிடலாம். இறப்பை வெல்லும் உபாயம் இது.


பாடல்:- 04

-----------------


"ஆனகலசத்து அமிர்தை அறிந்து உண்ணில்

போனகம் வேண்டாமல் போம் 


பொருள்:-

              "போனகம் என்பது உணவு, ஆகாரம் என்று பொருள். சாதகன் அவனுடைய ஞான சாதனையில் அமிர்தம் இருக்கும் இடத்தை அறிந்து, அவ் அமிர்தத்தை உண்டால், அவனுக்கு வேறு ஆகாரம் எதுவும் தேவைப்படாது" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                 ஞான சாதனை செய்யும்போது பல்வேறு, பலதரப்பட்ட அனுபவங்கள் தோன்றித் தோன்றி வந்து கொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் சாதகன் கடந்து, கடந்து முன்னேறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவனுக்கு அமிர்த நீர் ஊறி உடலில் அண்ணாக்கில் சொட்ட ஆரம்பிக்கும். அவ்வாறு சாதகன் ஞான சாதனையின் வாயிலாக தலையைச் சுற்றிலும் தாமரை மலரைப் போல் எட்டு இதழ்கள் இருப்பதைக் காண்பான். அந்த எட்டு இதழ்த் தாமரையின் நடுப்பகுதியில் அமிர்தம் சுரப்பதை அறிவால் அறிந்து உணர்ந்து உண்பான். அவ்வாறு உண்ணுவிட்டால் சாதகனுக்கு உணவின் தேவையானது இல்லாமலே போய்விடும்.


                ஸ்ரீவித்தை தந்திரத்தில் சாதகனின் தலையைச் சுற்றிலும் எட்டு இதழ்களில் எட்டு தேவதைகள் சர்வ சம்க்ஷோபண சக்கரத்தில் வீற்றிருப்பதாகவும், அவர்கள் ஒளியுடலில் இருந்துகொண்டு, சாதகர்களுக்கு வேண்டியதைத் தருவதாகவும் ஒரு யோக முறை ஒன்று உண்டு. ஸ்ரீவித்யா உபாசகர்கள் இதை அறிவார்கள். அத் தேவதைகளை "அனங்க தேவதைகள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டிதழ் பற்றி திருமூலர் அவர்களும் பின்வருமாறு கூறுவதை ஒப்பு நோக்கவும்.


"ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்

ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு

சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்

பூவின்றிப் சூடான் புரிசடை யோனே"

                - திருமந்திரம்:2535


உடலின் உச்சியாகிய தலைப் பகுதியில் சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்கு மேலே, நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ்நிலங்களுக்கு பாயவிடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேரும், கிழங்கும் இல்லாமலே செழிப்பான ஒரு செழுங்கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களை புரிசடையோனாகிய சிவன் சூடிக் கொள்வதில்லை. சேறில்லாத குளம் என்பது நமது இரு கண்களே. கண்கள் மட்டும்தான். புலவர்கள் மலருக்கு ஒப்பிட்டுள்ளார்கள். மலரினைப் போல கண்களும் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. கண்களில் வரும் நீரே ஊறி வரும் அருவியாகும்; பின் அதுவே ஓடிவரும் ஆறாக மாறிவிடும்.


"ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்

மருங்கிய மாயா புரி, அதன் உள்ளே

சுருங்கிய தண்டின் சுழினையின் ஊடே

ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே"

                  - திருமந்திரம்:2528


நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த தாமரையென்று சொல்லப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பின் உள்ளே காணப்படும் சுழிமுனைத் தண்டின் உள்ளே அடங்கிய அறிவுப் பேரொளியினை ஞான தவத்தால் அருளால் ஆராய்ந்து பெற்றிடுங்கள். அதுவே உகந்த வழியாகும். இனி அப்பேரொளிப் பிழம்பினை நினைந்து நினைத்து உற்றுப் பார்த்துப் பார்த்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றவாறு. சிலர் சகஸ்ரதளத்தை எட்டிதழ்த் தாமரை என்றும் அழைப்பதுண்டு.


“ஆறேஅருவி அகங்குளம் ஒன்றுண்டு

தூறே சிவகதி ணுண்ணிது வண்ணமுங்

கூறே குவிமுலைக் கொம்பளையாள் உடன்

வேறேயிருக்கும் விழுப்பொருள்தானே”

              - திருமந்திரம்:2979


சீவனின் சென்னியில் உள்ள சகஸ்ரதளம் என்னும் குளத்தை, ஆறு ஆதாரங்களின் வழியே பாய்ந்து செல்லும் அருவியாகிய உடலின் உயிர்சக்தி வந்து நிரப்பும். கீழே உள்ள உயிர்சக்தியை மேல்நோக்கிச் செலுத்தும் சிவகதி மிகவும் நுண்ணியது. சீவன் பெறும் சிவகதியின் முடிவில், குவிந்த முலைகளை உடைய சக்தி தேவியுடன் அனைத்துக்கும் வேறாக இருக்கும் மேலான சிவமும் விளங்கும். குவிந்த முலைகள் என்பது நமது இரு கண்களே ஆகும். கண்களை தனியே எடுத்துப் பார்த்தால் அது குவிந்த முலைபோல் இருப்பதைக் காணலாம்.


பாடல்:- 05

-----------------


"ஊறும் அமிர்தந்தை உண்டியுறப் பார்க்கில்

கூறும் பிறப்புஅறுக் கலாம்"


பொருள்:-

               "ஊறும் ஞான அமிர்தத்தை ஞான தவத்தில் பிரணவ உச்சியில் பார்த்து வரும்போது வரக்கூடிய அமிர்தத்தை உண்டால் பிறவிப்பிணி எனும் பிறப்பை அறுத்துவிடலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               சென்னியில் ஊறிவரும் அமிர்தத்தை அண்ணாக்கில் நின்று உண்டுவந்தால், தேகம் வச்சிர தேகமாக மாறிவிடும். சுத்த தேகம் அமைந்துவிடும். சுத்த தேகத்திற்கு ஞான தேகம் அமையும் நிலை அடுத்தடுத்து உருவாகிக் கொண்டே போகும். செய்யும் ஞான தவத்தின் மூலாக்கினியில் அமிர்தமானது உருகி ஊறி அண்ணாக்கின் வழியே கீழே விழும். அதை உண்டு பருக வேண்டும். அமிர்தம் உண்டபின் அவனுக்கு மரணமில்லை. பிறப்பை அறுக்கும் அமிர்த (சாவா நிலை) நிலை இது.


பாடல்:- 06

-----------------


"ஞான ஒளிவிளக்கான் நல்லஅமிர்து உண்ணில்

ஆனசிவ யோகி யாம்"


பொருள்:-

             "யாரொருவன் ஞான தவத்தின் மகிமையால் ஞான ஒளியை உண்டாக்கி அதனால் அமிர்தம் உருகி வருவதை உண்பவனோ, அவனே சிவயோகி என்று அழைக்கப்படுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               சிவயோகியாகும் தகுதி இங்கு ஒளவையால் கூறப்பட்டுள்ளது. திருவடி ஞான தவத்தின் மூலமாக தேகத்தில் யோகாக்கினியை உண்டாக்கி, பின் அதை அக்கினிக் கலையில் கொண்டு போகும் தந்திரத்தை அறிந்து, அங்கு ஞான ஒளியினைக் கண்டுவிடும்போது, ஒளியின் வெப்பத்தால் அங்குள்ள அமிர்தமானது உருகி அண்ணாக்கின் வழியே தொண்டைப் பகுதியில் கீழிறங்கும். அந்த அமிர்தத்தைப் பருகிவிட்டால் சாதகன் பிறப்பை அறுத்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றிடுவான்.


பாடல்:- 07

-----------------


"மேலைஅமிர்தை விளங்காமல் தான்உண்ணில்

காலனை வஞ்சிக்க லாம்"


பொருள்:-

            "பிரபஞ்சப் பெருவெளி எனப்படும் உச்சிக்கு மேலேயுள்ள துவாத சாந்த வெளியிலிருந்து, சூரியக் கலையின் வழியே கீழே இறங்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், காலன் எனும் எமனை ஏமாற்றி இறப்பைக் தடுத்துவிடலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

              ஞான தவத்தில் சாதகன் நன்கு முன்னேறிச் செல்ல வேண்டும், துவாதசாந்தத்தில் அக்கினிக் கலையின் சோதியைக் கொண்டு போய்ச் சேர்க்க தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். உச்சிக்கு மேலேயுள்ள இத்தளத்தில் இருக்கும் அமிர்தமானது சூரியக் கலையின் வெப்பத்தின் காரணமாக உருகி கீழே வரும். இந்த அமிர்தமானது சூரிய கலையினால் உருகி மூன்று உளுந்தளவு பிரமாணமே கீழே வருவதால் உடனே அது ஆவியாகி விடும். அதனால் அமிர்தம் வரும்போது காலதாமதம் செய்யாமல் உடனே உண்டுவிட வேண்டும் என்பதைத்தான் "விளங்காமல் தான் உண்ணில்" என்றார். அதன்பிறகு எமன் அருகில் வரமாட்டான். எமனை வென்று சாகா நிலையில் இருந்திடலாம்.


பாடல்:- 08

-----------------


கால்அனல் ஊக்கம் கலந்த அமிர்துண்ணில்

ஞானம் அதுவாம் நயந்து


பொருள்:-

             "காலனல் - கால் + அனல் - வாயுக்களோடு கூடிய அக்கினி. ஊக்கம் - பிரணவ உச்சி. பிராண, அபான வாயுக்களைக் கொண்டுபோய் அக்கினியில் சேர்ப்பித்து, பின் இம்மூன்றையும் கொண்டுபோய் பிரணவ உச்சியில் சேர்த்துவிட்டால் உண்டாகும் அமிர்தத்தை உண்டால் ஞானம் உண்டாகிடும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               பிராணன், அபான வாயுக்கள் என்பது அகாரத்திலும் உகாரத்திலும் செயல்படும் சிவ, சக்திக் கலைகளின் பெயர்களாகும். சிவத்தை சக்தியோடு கலக்க வேண்டும். சிவசக்தியை அக்கினியோடு கலக்க வேண்டும். பின் சிவசக்தி அக்கினையை பிரணவ உச்சிக்குக் கொண்டுபோய் கலக்க வைக்க வேண்டும். இக்கலப்பில் அங்கு ஒரு வேதியியல் மாற்றம் அதாவது இரசவாதம் நடைபெற ஆரம்பிக்கும், ரசவாதத்தின் போது வெளிப்படும் வெப்பத்தில் அமிர்தமானது. உருகி கொட்ட ஆரம்பிக்கும். இந்த அமிர்தத்தை உடனே பருகி விட்டால், ஞானம் உண்டாகிவிடும். ஞான தவத்தில் பெற்ற அறிவு நமக்கு அமிர்தத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும்.


பாடல்:- 09

-----------------


எல்லையில் இன்னமிர்தம் உண்டுஆங்கு இனிதுஇருக்கில்

தொல்லை முதல்ஒளியே ஆம்


பொருள்:-

             "தொல்லை முதல் ஒளி - பழமையாகிய ஆன்ம ஒளி.   பிரபஞ்சப் பெருவெளியின் எல்லையில் அமிர்தத்தை உண்டு இனிமையாக ஆனந்தமாக இருப்பதற்கு பழமை வாய்ந்த அந்த ஆன்ம ஒளியே முதல்காரணமாகும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

            ஆதிகாலம் தொட்டு இருந்துவரக் கூடிய ஞான சாதனைகளில் காணப்படும் ஆன்ம ஒளியினால் மட்டுமே, சாதகன் துவாதசாந்த வெளியில் உள்ள பொற்தளத்தில் இருக்கக் கூடிய அமிழ்தை கொடுக்க முடியும். வேறெந்த தந்திரங்களினாலும் இவ் அமிழ்தை கொடுத்துவிட முடியாது. அதற்கு திருவடி ஞான தவச் சாதனையே பெரும் உறுதுணையாக சாதகனுக்கு இருக்கிறது. இப்படி அரிதிலும் அரிதான அமிழ்தை ஞான சாதனையில் உண்டு பருகி இன்புற்று ஆனந்தக் கூத்தாடலாம். நடராஜத் தத்துவம் இதைத்தான் மறைபொருளாய் சொல்லிக் கொண்டிருக்கிறது, தெருக்கூத்து ஆடுபவனா தில்லைநாதன்? ஞானக்கூத்தை ஆடுபவன் சிவன். அக்கினிக் கலைகளை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டு அவன் ஆடும் கூத்து இருக்கிறதே. அது ஞானக் கூத்து; சென்னிக் கூத்து: ராஜக் கூத்து; நடராஜக் கூத்து. பருதி, மதி, சுடர் கலைகள் ஒன்றுகூடும்போது இந்த ஆனந்தக் கூத்தை நாமும் கண்டு இன்புற்று மகிழலாம்.


திருமூலர் அவர்கள்,


"ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்

ஒளியிருள் கண்டகண் போலவேறு ஆயுள்

ஒளியிருள் நீங்க உயிர்சிவ மாமே"

             - திருமந்திரம் :1819


என்று ஒளியே உயிர் என்றும், காணும் கண் என்றும், உணரப்படும் சிவம் என்றும் கூறியுள்ளார்.


பாடல்:- 10

-----------------


"நிலா மண்டபத்தில் நிறைந்த அமிர்துண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்"


பொருள்:- 

            "நிலா மண்டபம் - சந்திர கலை இருக்கும் இடம். அந்தரம் - ஆகாயம். சந்திர மண்டபத்தில் நிறைந்து காணப்படும் அமிர்தத்தை உண்டால், ஆகாயத்தில் உலாவி (சஞ்சரித்தல்) வரலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                ஞான தவ சாதனையின்மூலம் ஆகாயத்தில் கமனம் செய்யும் யோகநிலை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரக் கலையின் ஒலியைக் கொண்டு போய் அக்கினிக் கலையில் சேர்க்கும்போது, அக்கினிக் கலையில் உள்ள ஒளி ஆற்றல் ஒலியோடு சேர்ந்து அவ்விடத்தில் பெரு ஒளி வெடிப்பை உண்டாக்கும். அது சந்திர மண்டலத்தை தாக்கும். அப்போது சந்திர மண்டலத்தில் உள்ள அமிர்தம் உருகி வரும். அந்த சந்திர அமிர்தத்தை உண்டால், ஆகாயத்தில் எவ்வித பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டு எங்கும் சென்றுவரும் கமன ஆற்றல் சித்தித்திடும். ஆனால், சாதகன் இவ்வகை சித்திகளில் கவனம் வைத்தால், ஞானத்தை இழந்துவிட நேரிடலாம். கவனம் தேவை என்றும் எச்சரிக்கிறார்....


        - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து

          சித்தர்களின் குரல் shiva shangar

No comments:

Post a Comment