Friday 24 June 2022

இல்லற இரகசியம்

 #501

இதுதான் இல்லற இரகசியம்".


*ஒரு சாது* மரத்தடியில் அமர்ந்திருந்தார்.  *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.  


*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.


*‘பறவையே!  உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?*  முயற்சிப்பதில் தவறில்லை.  *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.*   பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது  உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.


*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*.  பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* சாது.


‘சீடனே!  *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் சாது.  

      

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.


*‘ஐயா!  கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன்.   நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.  இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.


*‘பறவையே!  இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல்.  பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.


பதினைந்து நாட்கள் ஓடிப்போனது.  *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.


*‘ஐயா!  எங்களால் கடலில்  நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது.   நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.    தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம்.  ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம்.  எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.


சாது யோசித்தார்.  *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.  


*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.  சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள்.  அது மிதக்கும்.  அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள்.  களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.


*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.*  இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.


*‘ஐயா!  உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.   குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.


*‘பறவைகளே அருமை!  நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.


*‘ஐயா!  சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம்.  சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.  அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.  பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.*  ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை.  குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*


சாதுவைப் பார்த்தான் சீடன்.   சாது பேசினார்.


*‘சீடனே!  பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது.  துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.*  அதற்குக் காரணம் *‘துணை'.*  ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*.   இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது.  *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.*  ஆனால், 

*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*.   பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது.  *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.*  ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.  


குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*.   இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.*   


 *இதுவே இல்லற ரகசியம்..!!*


(வாட்ஸ் அப்பில் வந்தது)

1 comment: