Sunday 7 November 2021

காக ( காக்கா ) சாஸ்த்திரம்

 காக ( காக்கா ) சாஸ்த்திரம்....


பித்ருக்கள் தான் காகத்தின் வடிவில் பூலோகத்தில் வலம் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. 


காகங்களுக்கு முக்காலங்களையும் அறியும் சக்தி இருக்கின்ற காரணத்தால் தான், அது, ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே தெரிவிக்கும் விதமாக பல்வேறு சமிக்ஞைகள் மூலமாக உணர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


அதையடுத்து, காகங்களின் சிறப்பு மற்றும் அதன் அறிவிப்பு குறித்தும், காகத்தை வணங்குவதால் யார், யாருடைய அருள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.


□ சிறப்பு...


காகத்திற்கு மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு தனிக்குணம் உள்ளது.


மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும். ஆனால், மற்ற பறவைகள் தீட்டுகளை பார்க்காது.


ஏதாவது ஒரு காகம் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று "கா கா" என்று குரலெழுப்பி இறந்த காகத்திற்காக துக்கம் அனுஷ்டிக்கும்.


அதன்பின்பு அந்த காகங்கள் எல்லாம் நீர்நிலைக்கு சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து, மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் வழக்கம் காக்கைக்கு உண்டு.


அதேபோல், தீட்டான சாப்பாட்டை காகங்கள் சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.


□ புண்ணியம்...


இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட காகத்திற்கு தினம்தோறும் உலர் திராட்சையை உணவாக வைப்பது சிறந்தது.


அதனால் கிடைக்கும் புண்ணியம் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரும்.


மேலும், உங்கள் வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்களும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.


வாழ்வின் இறுதிக்காலம் வரை மிக சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்று காக சாஸ்திரம் கூறுகிறது.


□ அறிவிப்பு...


சில வீடுகளில் காகம் தொடர்ந்து கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.


சிலருக்கு காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களால் தலையில் தட்டி விட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும்.


இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை, கெடுதலை தடுப்பதற்காகத்தான், காகம் எச்சிலை போட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது நஷ்டத்தையும் உண்டாக்கும்.


பயணம் செல்பவரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.


ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் பயணம் இனிதாகும்.


பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் லாபம் ஏற்படும்.


வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.


ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு


ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு பெரும் ஆபத்து நேரிடலாம்.


காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையை தெரிவிக்கிறது. இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதை அறிவிக்கிறது.


□ யாருடைய அருள்...


காகத்திற்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கிறது.


காகத்திற்கு உணவு வைக்கும் போது, எமதர்மனின் ஆசீர்வாதம் மற்றும் விநாயக பெருமானின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment