Sunday, 22 March 2026

அன்னி மிஞிலி

 அன்னி மிஞிலி [Anni minjili]: பழிக்கு பழி வாங்க போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]":

 
 
"முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!"[அகநானூறு 262]
 
அன்னி மிஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய பெண். இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார். அந்த நஞ்சை நிலத்தில் பல எருதுகளை ஒன்றாய் பூட்டி உழுவு செய்தார். அப்படி உடல் வலிக்க உழவு வேலை செய்யும் போது, ஒரு நாள் அவருடைய மாடு, பக்கத்து பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள பயிரை மேய்ந்து விட்டது. நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன். மன்னனுக்கு வேண்டியவன். கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்னி மிஞிலியின் வாய்மை தவறாத தந்தை, தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்க்காக ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் . ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு தீர்ப்பளித்து விட்டான். இதனால் அவன் பெரும் குற்றம் [“நவை”] செய்து விட்டான் . கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர்.
 
பார்வை போனது தந்தைக்கு! . அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மிஞிலி துடிச்சாள்; அப்பாவின் கண்ணைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும் சூள் உரைத்தாள்!  சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள்.
 
இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை உறிய முறையில் உண்ண மறுக்கிறா; ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி.. ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க… ஆனா அழகான ஆடை கூட உடுக்க மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது?

சூளை எப்படி நிறைவேற்றுவது? அவளோ எளிய முல்லை நிலப் பெண்; ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால் சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய, பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் திதியனிடம் தன் தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள். அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த சிற்றரசர் திதியன் - அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள் பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்; சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்; கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி… அவளும் தன் வஞ்சினம் முடித்தாள்.

No comments:

Post a Comment