விவேகானந்தர் தன்னுடன் வந்த நண்பரின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஜோதிடர் கூறிய படியே, விவேகானந்தர் தன் மனதில் நினைத்திருந்த அத்தனையும் அப்படியே எழுதப்பட்டிருந்தன.
விவேகானந்தரின் தாயார் பெயர் புவனேஸ்வரி என்பது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்து, விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதும், அவர் மகா சமாதி அடைந்து விட்டார் என்பதும், எனினும் அவர் சூட்சம நிலையில் விவேகானந்தரைக் கவனித்து வருகிறார் என்பதும் எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக விவேகானந்தர் நினைத்த திபெத்திய மொழியில் உள்ள புத்த மத மந்திரமான " லாமாலா காப் சேகவா" என்பதும் சரியாக எழுதப்பட்டிருந்தது. கடைசியாக, உரையாடும் போது கூறிய, "ஓம் பகவதே வாசுதேவாயா " என்ற மந்திரச் சொல்லையும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஜோதிடர் காகிதத்தில் எழுதி வைத்திருந்தார்.
விவேகானந்தர் வியப்பின் எல்லைக்கேச் சென்று விட்டார் . மன வலிமை மிக்கத் தன் மனதை ஊடுருவிப் பார்த்ததோடு மட்டுமில்லாமல், ஒரு மணிநேரத்திற்குப் பின் தனக்குத் தோன்றப் போகிற மந்திரச் சொல்லையும் முன்கூட்டியே எழுதுவது என்றால் அது அதிசயமான ஆற்றல்தானே?
கோவிந்த செட்டியாரைப் பாராட்டி விட்டு விடை பெற்றார் விவேகானந்தர்.
இந்த அதிசய நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பரான ' கேத்ரி ' மன்னருக்கு 15- 2 -1893 அன்று ஒரு கடிதம் எழுதி, அதில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் விலாவாரியாக விவரித்திருந்தார். இந்தக் கடிதமும் விவேகானந்தர் மன்னருக்கு எழுதிய மற்றொரு கடிதமும் 'கேத்ரி' அரண்மனையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம்தான் இந்த அரிய செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது.
இதைவிட வியப்பான ஒரு நிகழ்ச்சி விவேகானந்தர் , ஜோதிடர் இருவரிடையேயும் நடந்த மற்றொரு சந்திப்பில் நடந்தது.
மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா சென்ற விவேகானந்தர், சிகாகோ சர்வமத சபையில் பேசி உலகப்புகழ் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய அவர் 1897 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பகோணம் நகருக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கே நடந்த கூட்டமொன்றில் அவர் வேதாந்தம் குறித்து உரை நிகழ்த்தினார்.
அந்தக் கூட்டத்தில், தான் முன்பு சந்தித்த ஜோதிடரான கோவிந்த செட்டியார் இருப்பதை விவேகானந்தரின் கூரிய கண்கள் கண்டு பிடித்துவிட்டன. சொற்பொழிவிற்கிடையே ஜோதிடருக்குச் சைகை காட்டி , தன்னைத் தனியேச் சந்திக்கும்படி தெரிவித்தார்.
அதேபோல, விவேகானந்தர் சொற்பொழிவாற்றி முடித்தபின், ஜோதிடர் வந்து விவேகானந்தரைச் சந்தித்தார்.
அவரை வரவேற்று உபசரித்த விவேகானந்தர் அவரிடம், "ஐயா, உங்களுக்கு அற்புதமான சக்திகள் இருக்கின்றன. அதன் மூலம் உங்களுக்குப் பேரும் புகழும், செல்வமும் கிட்டுகின்றன. ஆனால், நீங்கள் ஆன்மீகத்தில் ஒரு அடிகூட முன்னேறவில்லையே, எங்கே தொடங்கினீர்களோ அந்த இடத்திலேயேதான் நிற்கிறீர்கள். கடவுளை நோக்கி உங்கள் மனம் சிறிதளவு கூடச் செல்லாமல் இருக்கிறதே. இது சரியா?" என்றார்.
இதுவரை தனக்கிருந்த அதிசய ஆற்றலைப் பணத்திற்கும் புகழுக்கும் மட்டும் பயன்படுத்தி வந்த கோவிந்த செட்டியாரின் உள்ளத்தில் விவேகானந்தர் எழுப்பிய கேள்வி சாட்டையடியாக வந்து விழுந்தது. அது அவருடைய அகக்கண்களைத் திறந்து விட்டது. மறுநொடியே அவர் சுவாமி விவேகானந்தரின் காலில் விழுந்து வணங்கி, " சுவாமி என் தவறை உணர்ந்து கொண்டேன் . என்னைக் கடைத்தேற்றுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.
உடனே அவரைக் கட்டித் தழுவிக் கொண்ட விவேகானந்தர் அவரிடம், "கடவுளை அடையத் தடையாக உங்களிடம் இருந்த அனைத்தும் இப்போது முதல் நீக்கப்பட்டு விட்டன" என்று கூறி வாழ்த்தி அருளினார்.
அந்த நொடி முதல் கோவிந்த செட்டியாரிடம் இருந்த சிறப்புகள் அத்தனையும் அவரிடம் இருந்து மறைந்துவிட்டன. அன்றுமுதல் இறைவனைக் காணும் ஏக்கம்தான் அவருக்கு உண்டாகியிருந்தது. கடவுளைக் காணவேண்டும், அவன் திருவடியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் உள்ளத்தில் இருத்திக் கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.
இந்த நிலையை அடைந்த பின் பழைய அதிசய ஆற்றல் கோவிந்த செட்டியாரிடம் திரும்பியது. இருப்பினும், அதைப் பணத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்தாமல் இறைச் சேவையாக மட்டும் செய்து வந்தார் செட்டியார்.
No comments:
Post a Comment