Thursday, 12 March 2026

கனகதாரா ஸ்தோத்திரம்

 கனகதாரா ஸ்தோத்திரம் 


Part-2


நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்

நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!

சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்

சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்

வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்

வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!

தேர்கொண்டேன் புரவி இல்லை செல்வமாம் புரவியாலே

திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே..!


ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி

அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி 

ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்

அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்

தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக

திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்

வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே 

வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே..!


வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி 

சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி 

கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி 

ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி 

பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி 

நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி போற்றி 

பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி  போற்றி 

மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி போற்றி....


அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி 

அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி 

குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி 

குளிர்ந்தமா மதியினோடும் குடி வந்த உறவே போற்றி 

மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி 

மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி 

என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி

எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி போற்றி...!


தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி 

தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி 

தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி 

தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி 

தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்

தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி 

தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி 

தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி போற்றி..!


பெண்ணெனப் பிறந்தாயேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி

பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி

தண்ணளி வேங்கடத்தான் தழுவிடும் கிளியே போற்றி

தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி

சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி

ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி

பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி

பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி போற்றி..!


கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி

கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி

மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி

மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி

விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி

விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி

எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி போற்றி

இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி போற்றி...!


மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி 

வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி 

மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி 

விரித்தமேற் புலனுக்கெல்லாம் விளங்காத பொருளே போற்றி 

கைநிறை செல்வம்யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி 

காக்கையை அரசனாக்கும் கைமலர் உடையாய் போற்றி 

செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி 

சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி போற்றி...!


மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி 

மூவுலகங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி 

தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி 

தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி 

ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி 

ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி 

தாள்களில் பணிந்தேனம்மா தண்ணருள் தருவாய் போற்றி 

தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி போற்றி...!


கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி

காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி

வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி

வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி

பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி

பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி

விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி

வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி...!


மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி

மங்கைக்கு நன்னீராட்ட கங்கை நீர் குடத்தில் மாந்தி

தண்டலக் கூந்தல் ஊற சர்வமங்கள நீ ராட்டி

தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி

மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி

மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்

அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே

அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்...!


பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே

பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ

ஏவுமோர் உலகத்துள்ளே இன்மையோன் ஒருவனே தான்

இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்

தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்

சநிதிரப் பிறைப் பூங்கண்ணி சற்று நீ திரும்பிப் பார்த்தால்

மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்

மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி போற்றி..!


முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி

மூவிரண்டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக

அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி

ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்

இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும்

இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்

நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும் என்றும்

நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை...!