Monday, 20 April 2026

சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்

 நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!


சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:


காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.


இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். 


கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம். 


கோவிலை தற்போது பூஜித்தும்,பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி  நமக்குதெரிவித்தார். 


அவர் கூறியமகத்துவங்கள் இதோ : 


- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி.

பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .


- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.


-இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி ரொம்பவும் மஹிமை பெற்றவர். 


அம்பிகை தன்னுள் பாதியாக உள்ளதைஅறிவிக்க, ஒரு காதில் மகரக்குழையும்,மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார்.


தொண்டர் தம் பெருமையைசொல்லவும் பெரிதே என்றவாக்கிற்கிணங்க, இவ்வாலயத்தில்அறுபத்து மூவரும் இல்லை. 


மாறாக,அறுபத்து மூவரும், தக்ஷிணாமூர்த்தியுடைய தலைசடையில் 63 லிங்கங்களாக காட்சிதருகிறார்கள்.


அதாவது, சிவனை வழிபட்டுசிவமாகவே ஆனதால் லிங்கமாகவும்,அடியார்களை இறைவன் தலை மீதுவைத்து பிள்ளை போல்கொண்டாடுவார் என்பது போல், அவர்தலையிலும் இருப்பது, பக்திக்குமரியாதை.


 கோவிலில் ஓரிடத்தில் வில்வமும் வேம்பும் ஒன்றாய் வளர்ந்திருக்கின்றன. 


வேப்ப  மரம் தனது கிளையை வில்வத்தின் மீது போட்டவாறு வளர்ந்திருக்கிறது.


அம்பாள் சிவனுடைய தோள் மீது கைபோட்டவாறு இருப்பது போல் இருக்கும். 


வில்வ மரம் மூன்று கிளைகள் விட்டு சூல வடிவில் வளர்ந்திருக்கிறது. 


அடியில் ஒரு பெரியசிவலிங்கமும் அம்பாளும் உண்டு. 


- தவிர அழகு வாய்ந்த விநாயகர்,சண்முகர், நவகிரஹங்கள்  சந்நிதிகள்உண்டு. 


- ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல்திருப்பணி. 

விமானம் தவிர.

அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும் பச்சைக்கல் கொண்டு சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது.


- பச்சைக்கல்லுடைய மகிமையால், அம்பாள் சந்நிதியில் உஷ்ணம் நிரம்புவதில்லை. 


எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.


- அந்நியர்களின் படையெடுப்புக்குஅஞ்சி, முற்காலத்தில் எல்லா விக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில் வைக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.


கோவில் இருக்குமிடம் தெரியாமல், மண்மேடு அமைத்து கோவிலை மூடிவிட்டனர். 


காலப்போக்கில் இங்குகோவில் இருந்ததே தெரியாமல் போனது. 


- பிற்காலத்தில்(1954), காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள், இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு, மண்மேட்டுக்குள் இருந்த சந்நிதியை கண்டுபிடித்தார்.


- அருகே இருந்த அம்பாள் சந்நிதி வெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள் விளையாட சென்றார்களாம், ஆனால் எப்போது போனாலும் ஒரு சர்ப்பம் சீறிக்கொண்டு அவர்களை விரட்டியதாம். கோவில் கண்டுபிடிக்கப்பட்டதையும், சர்ப்பத்தின் சீற்றத்தையும் குறித்து, காஞ்சி மஹாபெரியவாளிடம் தெரிவித்ததை அடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம். 


- அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர் (17-04-1978), விக்ரஹம் இல்லாதபோதும் சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம் யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாக அறிந்தார். 


அதே போல், அங்கே ஒரு அழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது, கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது.


 இதைக்கண்ட பெரியவாள், அங்கிருந்த நெருஞ்சி முட்களின் ஊடே, தர்ப்பைபாயை விரித்து, அமர்ந்துவிட்டார்.


 3 நாட்களுக்கு அங்கிருந்து விலகவில்லை. 


பின்பு, உடனே திருப்பணி துவங்க அனுக்கிரஹம் தந்தார். காஞ்சியை சேர்ந்த  சுப்பையா ஸ்தபதி இதைமேற் கொண்டு செய்தார்.


- திருப்பணி நிறைவடையும் நேரம், தரைத்தளம் போட தரையை தோண்டிய பொழுது, மேலும் ஒரு அம்பாள் சிலையும், அம்பாள் சந்நிதி விமானத்திற்கும் சுவருக்கும் இடையேவர வேண்டிய மேல் வரிசை சிற்பக்கற்களும் கிடைத்தன.


கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும் தந்தையும் சிசுவோடு இருத்தல் எனபலவித சிற்பங்களை கொண்ட அக்கற்களை இன்றும் பிரகாரத்தில் காணலாம். 


விமானம் எழுப்பப்பட்ட காரணத்தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை.


புதிதாக கிடைத்த அம்பாள் திரிபுரசுந்தரி என்றும், அவள்தான் த்ரிபுராந்தகேஸ்வரஸ்வாமியின் போக சக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்தி ஐக்கியமான ராஜராஜேஸ்வரிஅம்சமென்றும் பெரியவாளால் தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே சுவாமி சந்நிதிக்குள்ளேயே தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்பாளும், தனி பச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடு சுந்தரகாமாக்ஷி அம்பாளும் அருள்கின்றனர்.


1984ல் கும்பாபிஷேகம் காஞ்சி புதுப்பெரியவர்கள், கிருபானந்த வாரியார் ஆகியோர் முன்னிலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


 அம்பாள் ஐக்கிய ரூபத்தில் ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும் கோவில்களில் ( திருவாரூர், திருநாகேஸ்வரம், சிதம்பரம்) கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம் உண்டு. 


சாஸ்தா, பைரவர், வீரபத்ரர்என யாராவது  இருப்பர்.


- இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத்தலை தந்து, அனுக்கிரஹம் செய்த கோலத்தில் அனுகிரஹ வீரபத்ரர் அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர் சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறு காணப்படுகிறார்.


- ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும் நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண் ஒருபுறம் தீபம்காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம் காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன.


- சுந்தரகாமாக்ஷி அம்பாள், கிட்டத்தட்ட 6 அடி  உயரம். கைகளில் பாசாங்குசம் அபய வரதத்தோடு கூடிய பேருக்கேற்ற அழகு சொட்டும் திருமேனி.


- முன்னே லிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம்.


அம்பாளுக்கு கால்களுக்கு இடையேத்வாரமும், அதன் மூலம் கொலுசுசார்த்தும் வழியும் உள்ளது.


- அம்பாளுடைய முகலாவண்யம் சொல்லில் அடங்காதது.


அங்கே சென்று நின்று அனுபவிப்பவர்களுக்கே அதன் உள்ளர்த்தம் புரியும்.


 அபிஷேகத்தில் தலையில் ஜலம் விடும்போது, கண்களை மூடிக்கொள்வது போலவும், ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களை திறந்து கொள்வது போலும் காட்டி, அம்பாள் ஜாலம் பண்ணிக்கொண்டேஇருக்கிறாள்.


- அம்பாள் பராசக்தியாக, ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால், வாசலில் சுவர்களிலும் தூண்களிலும், கணபதி, ஸ்கந்தர், லட்சுமி, சரஸ்வதி, இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும் அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடு சாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடைசம்பத்கரி என்றும் கொள்ளலாம்) ஆகியவர்கள் காட்சி தருகின்றனர்.


சுவர்களின் இடையே ஒரு மாடத்தில் வாழைப்பழம் உரித்து சாப்பிட்டுக்கொண்டு, அம்பாளை நோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்திருக்கும் கோலத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர்கூட  அழகு தான்.


தற்போது பூஜிக்கும் நவீன் குருக்களுடைய தந்தை, சந்திரசேகர குருக்கள் 10 வயது சிறுபிள்ளையாக இருந்தபோது, மஹாபெரியவாளிடம், "இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னுபேர்? காமாக்ஷி காஞ்சிலே உக்கார்ந்துண்டு தானே இருப்பா? "என்று கேட்டுள்ளார்.


 அவருக்குபெரியவாள் அளித்த பதில்:


"இப்போ, உன் அம்மா எங்கயோ உக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய் தூத்தமோ காபியோ கேக்கறே... என்ன பண்ணுவோ.. பொறுமையா இதோவரேன் னு சொல்லிட்டு, எழுந்து வந்துபோட்டுத்தருவோ... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாதுகேட்டுண்டு வர்ற கொழந்தேளுக்கு,உடனே கொடுத்துடணும்னு ஆசையாம். அதாவது, உக்கார்ந்துண்டு இருக்கறவ எழுந்து வர்ற கொஞ்ச காலதாமதம் கூட அவளுக்கு பண்ண விருப்பம் இல்லையாம். அதான் நின்னுண்டு இருக்கா" .


 


கேட்டதை கொடுக்க காத்திருக்கும் காமாக்ஷி அம்பிகையை, த்ரிபுராந்தகரை, த்ரிபுரஸுந்தரியை காண சென்று வாருங்கள். 


முடிந்த வரை ஆலயத்தின் பாதுகாப்புக்கும், அபிஷேக அலங்காரங்களுக்கும் பொருட்களை தந்து, பணி செய்யுங்கள். 


ஆலயத்தில், நித்யபூஜை, தீபம் ஏற்ற எண்ணெய், சந்தனம் குங்குமம் மற்றும் அபிஷேகப்பொருட்கள் ஆகியவை உள்பட, பல்வேறு கைங்கர்யங்களில் உதவி தேவைப்படுகிறது. 


செய்ய சக்தியும், மனமும் விருப்பமும் உடைய அன்பர்கள், கீழே தந்துள்ள ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு, அல்லது நேரில் சென்றோ முடிந்த உதவிகளை செய்யுங்கள்.


காலம் காலமாக கருணை பொழியும் காமாக்ஷி அம்மை, நம்மை நிச்சயம் கடைத்தேற்றுவாள், வேண்டிய வரம் தருவாள். காமாக்ஷியை நம்பினோர்கைவிடப்படார். காப்பது அவள் கடன்.சுந்தர காமாக்ஷி சுபிக்ஷம் தரட்டும்!


தொடர்பு விவரங்கள் : ஆலய அர்ச்சகர் நவீன் சுந்தர் குருக்கள் - 9791505077, 9486060120, 9486370223


ஆலயம் தரிசனம் செய்ய செல்லுவோர் அர்ச்சகருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துவிட்டு செல்லவும்.

Thursday, 16 April 2026

சுகப்ரம்மர்


 ஶுகப்ரம்ம ரிஷி உண்மையில் கிளி முகம் உடையவரா? 


அல்லது அந்தப் பெயரில் ஒரு குறியீட்டு விளக்கம் இருக்கிறதா?


ஶுக என்றால் பொதுவாக சமஸ்க்ருதத்தில் கிளி என்று அர்த்தம்! ஆனால் அது மாத்திரம் அர்த்தமல்ல! 


கிளி சொன்னதை திருப்பி அப்படியே சொல்லும்! 


அதுபோல் உண்மையை மாற்றாமல் வெளிப்படுத்துபவர். 


ஶுகருடைய மனம் எந்த விகாரமும், குழப்பமும் இல்லாது! பிரம்மத்தை அப்படியே உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடியது. 


ஆகவே ஶுக மகரிஷியின் முகம் கிளியாகச் சொல்லப்பட்டது அவரின் முகம் கிளி என்பது அர்த்தமல்ல! 


அது அர்த்தம் அறியா புராணவாதிகள் இயற்றிய கதை! 


கிளி எப்படி சொன்னதை சொன்னபடி மாறுபாடில்லாமல் சொல்லுமோ அப்படி அவர் தனது தெளிந்த நிர்விகல்ப மனதில் பெற்ற பிரம்ம ஞானத்தை எந்த மாறுபாடும் இல்லாமல் சொல்லக்கூடிய வல்லமை உள்ளவர் என்பது அதன் அர்த்தம்! 


அது மாத்திரமல்ல, கிளி என்பது காமத்தினை பரிபூரணமாக இன்பமாக ஆனந்தமாக உருமாற்றியதன் குறியீடு. 


இதில் ஶுக மகரிஷி பரிபூரணமாக பிரம்மானந்தமாக உருமாற்றிய உயர்ந்த ரிஷி என்பதே அவரிற்கு கிளி முகம் என்பதன் இரகசியர்த்தம்! 


ஶுகப்ரம்மம் என்றால் பிரம்மத்தை மாறுபடாமல் வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளவர் என்பதாலே பாகவதம், புராணங்கள் ஶுக மகரிஷியின் வாயால் உபதேசிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. 


ஆகவே ஶுகப்ரம்ம ரிஷியைப் வணங்கும் போது அவரது உயர்ந்த நிர்விகல்ப யோக நிலையுடன் உள்ள தூய உணர்வினைச் சிந்தியுங்கள்! 


வெறுமனே கார்டூனில் கிளிமுகத்துடன் இருப்பதைப் போன்ற உருவம் வெறுமனே ஒரு குறியீடு அன்றி அவரது உண்மையான உருவம் இல்லை!


குண்டுமணி அம்மன்

 இந்த ஆலயத்தை குண்டுமணி அம்மன் கோயில் என்று அழைப்பார்கள். இந்த கோயில் அருகில் கோவானூர் முருகன் கோவில் ஒன்று உள்ளது. அங்கே இன்றும் சித்தர்கள் வந்து அம்மனையும் முருகனையும் வணங்கி வருகின்றனர். பௌர்ணமி இரவில் குண்டுமணி அம்மன் கோவில் வெளியில் தங்கி இறை உணர்வை பெறுங்கள் இந்த பாடல் சித்தர்கள் நூலில் உள்ளது என்று சிவகங்கையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இன்றும் அந்த கோவிலில் புலிப்பாணி சித்தர் வந்து பூஜித்து செல்கிறார். இந்த கோவில் மிகச்சிறிய கிராமத்துக்கோவில் இங்கு சித்ரா பௌர்ணமி அன்று வெளி மாநிலத்தில் இருந்து நிறைய சித்த மருத்துவர்கள் வந்து தங்கி பூ நீர் எடுத்து செல்வார்கள். இதன் மகத்துவம் மிக புனிதமானது. இந்த ஆலயம் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது. இங்கு தாமரைத்தண்டு திரியில் நெய் விளக்கேற்றி மல்லிகை பூ சாற்றி வணங்கினால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற சித்தர் நாடியில் உள்ளது.


தல வரலாறு:

         முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தனர். பிறகு காளையார்கோவில் அருள்மிகு சொர்ண காளீஸ்வரரை வழிபடுவதற்காகச் சென்றனர். செல்லும் வழியில், அப்போது காட்டுப் பகுதியாக இருந்த கோவனூரில் தங்கிவிட்டார்கள். காலையில் எழுந்ததும் நீராடி, சிவபூஜை செய்வதற்காக எங்கேனும் நீர்நிலை இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தனர். எங்குமே தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு ஊற்றை தோற்றுவித்தார். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்ய தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராக பெருகியது. சித்த மருத்துவத்தில் இந்தப் பூநீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து, தனது இஷ்ட தெய்வமும், குரு முதல்வரும் ஆன சுப்பிரமணியரை வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பாண்டிய மன்னனைக்கொண்டு மூல மூர்த்தி பிரதிஷ்டையும், கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார்.

           இந்தக் கோயிலின் நித்ய பூஜை கைங்கர்யப் பணிகள் செவ்வனே நடைபெற்று வர நென்மேனி, கீழ்மேனி, வீரவலசை, கிழக்குளம் ஆகிய ஊர்களில் நிலங்களை தானமாகத் தந்துள்ளனர். அவற்றின் மூலம் வரும் வருமானத்தை கோயிலுக்கு அளித்து வந்தனர். இது போன்று வேறு பல தர்மங்களும் கோயிலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. ஆளரவம் அற்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் சாந்நித்தியமிக்க கோயிலாக சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. நாலாபுறமும் உயர்ந்த மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.


கோயில் சிறப்புகள்:

         சித்தர்கள் அருவமாக வரும் திருத்தலம். கோவனூர் 

         சித்த மருத்துவர்களுக்கும், சித்த மருந்து சாப்பிடுபவர்களும் வழிபட வேண்டிய தலம்.

          மூலவரின் தோற்றம் திருச்செந்தூர் செந்திலாதிபனை போல மிக அழகாக இருக்கும்.

          முருகன் சன்னதி முன்பு மயில் மண்டபமும், கோபுர வாசலின் வட புறத்தில் இடும்பன் சன்னதியும், இடது பக்கம் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி சன்னதியும், விநாயகர் சன்னதியும் தனித்தனியாக அமைந்துள்ளன.

           கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும், விஸ்தாரமான பிராகாரம் காணப்படுகிறது. கோயிலின் எதிரே பலிபீடம், மயில் வாகன மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கொடி மரம் இருந்த இடம் தற்போது வெறுமையாக உள்ளது. பிரதான கோயிலில் மகா மண்டபம் அர்த்த மண்டபம், கருவறை என நேர்த்தியான கற்றளியாக உருவாக்கப்பட்டுள்ளது.

             கோவானூரில் சாத்தப்பன் என்ற சிறுவன் இருந்தான். இவனுக்கு சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம். ஒரு நாள் இவன் காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, தாகம் மிகுந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினான். அந்த முனிவர்களும் இந்த சிறுவனுள் ஆழ்ந்து கிடந்த இறையுணர்வை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றார்கள். இந்த சிறுவன் பிற்காலத்தில் இக்கோயிலே கதி என கிடந்தான். பின் பல தலங்களுக்கு சென்று "சாத்தப்பஞானி" என எல்லோராலும் போற்றப்பட்டார். இவர் தான் சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்தவர். சிவகங்கை மன்னர்களின் ராஜகுருவாகவும் இருந்தார்.

             அகஸ்தியர் இந்த இடத்தில் முருகப்பெருமானை நினைத்து பிரதிஸ்டை செய்துள்ளார். பின்னர் பாண்டிய மன்னர்கள் மூலவரை பிரதிஸ்டை செய்து கோயிலாக உருவாக்கியுள்ளனர். இப்படி தான் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.

             கோவனூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவள்ளி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றனர். இவற்றுள் கோயிலுக்கு நேர்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் குண்டுமணி அம்மன் கோயில்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குண்டுமணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று இங்கே நடைபெறும் விழா மிகவும் பிரபலம். அன்றுதான் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவனூர் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர்.

             சித்ரா பௌர்ணமியில் மட்டுமல்லாமல், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்களிலும் சித்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்வதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. பின்னர் குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கே கிடைக்கும் பூநீரைப் பருகுவதாகச் சொல்கிறார்கள். அன்றைய தினம் சித்த வைத்தியர்களும் கோயிலுக்கு வந்து பூநீர் சேகரித்துச் செல்வதை இன்றைக்கும் நாம் காணலாம்.

              கோவனூரில் உள்ள முருகன் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டது. திருச்செந்தூரில் தருவதுபோலவே இங்கும் இலை விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.

              சித்தர்கள் சாகாவரம் பெற்ற ஊர் என்று சொல்லப்படுகின்றது.

            கோவனூர் பொட்டலிலே குண்டுமணி அம்மன் சந்நிதியிலே சாகா மூலிகை பூத்திருக்கு சாய்ந்து கொட்டடி ஞானப்பெண்ணே என்ற பாடல் இன்றும் இந்த பகுதியில் பாடப்படுகிறது.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:  

அருள்மிகு கோவனூர் முருகன் கோயில்,

பில்லூர் கிராமம்,

கோவனூர்,

சிவகங்கை மாவட்டம்.


அமைவிடம்:

             சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் 7 கி.மீ தூரத்தில் பில்லூர் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு சிவகங்கையிலிருந்து திருப்புவனம், பூவந்தி செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும். பில்லூரிலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. நடந்து சென்றால் கோவானூர் முருகன் கோயிலை அடையலாம்.


கோவானுர் கிழக்கினிலே குண்டுமணி அம்மன் இருக்கு;

குண்டுமணி அம்மன் வாசலிலே சாகா மூலி ஒன்று பூத்திருக்கு:

         - சித்தர் பாடல்.

பழனி தொட்டிச்சி அம்மன்

 ஜோதிடர்களின் வாக்கை சித்திக்க வைக்கும் பழனி தொட்டிச்சி அம்மன்..


 ஜோதிடர்களுக்கு தேவை ஞானமும் அந்தக் கல்விக்கு தேவையான ஓலைச்சுவடி குறிப்புகளும் தேவை. வலது கரத்தில் ஞானத்தின் வடிவான தாமரை மலரும் இடது கரத்தில் ஓலைச்சுவடியையும் வைத்துக் கொண்டு அருள் பாலித்து கொண்டு இருக்கும் இந்த பழனி தொட்டிச்சியம்மன் வழிபாடு செய்தாலே ஜோதிடர்கள் வாக்கு சித்தி பெறலாம்.


 இந்தத் தொட்டிச்சி அம்மாவின் கதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


 தொட்டிச்சி அம்மன் குறி சொல்லும் குலத்தில் பிறந்த ஒரு தெய்வமகள்.  பழனி அடிவாரத்தில் புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி  அருகில் இந்த ஆலயம் உள்ளது.


 காலம் கடந்து கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக புலிப்பாணி பெயரும் போகர் பெயரும் மருத்துவம் ஆன்மீகம் ஜோதிடம் என அனைத்து விதத்திலும் இவர்கள் பெயர் காலம் கடந்து நிற்க காரணம் என்ன. எல்லை தெய்வம் என்று சொல்லக்கூடிய இந்த தொட்டிச்சி அம்மன் தான் காரணம்.


 திருவாவினகுடியில் முருகன் கோபித்துக் கொண்டு வந்து கோவில் கொண்டது உலகம் அறிந்தது. அன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் யார் அறிவார்கள். வீடு வீடாகச் சென்று குறி சொல்லும் வீட்டு மகளாக பிறந்து முருகனின் பெருமையை சேர்த்தவள் தான் இந்த தொட்டிச்சி அம்மன்.


 குறி சொல்லும் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான் ஆவார். இந்தத் தொட்டிச்சி அம்மன் ஆணையிட போகர் அவர்கள் பழனியில் நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்தது குறிப்பிடத்தக்கது என்பது இவை நான் அங்கு அறிந்து கொண்டது.


 இன்று நாம் ஜோதிடம் சொல்கிறோம் பலன் சொல்கிறோம் நம்ம ஜோதிடத்திற்கு முன்னோடி குறி சொல்பவர்களே ஆவார்கள். அவர்களுக்கு இந்த ஞான மார்க்கத்தை வழங்கியது முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானை இன்று உலகறிய செய்தது இந்த குறி செல்லும் குல பெண்கள் ஆவார்கள்.


 தொட்டிச்சி அம்மனுக்கும் செவ்வாய்க்கும் என்ன சம்பந்தம். பழனி முருகனை செவ்வாய் என்கிறோம். முருகன் கோபித்துக் கொண்டு வந்தது கோபம் என்பது செவ்வாய் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.


 அடர்ந்த வனப்பகுதியில் வேள்வி யாகம் செய்யக்கூடியவர் தான் இந்த செவ்வாய் பகவான். செவ்வாயின் அதிதேவதை துர்க்கை பத்திரகாளி வனதேவதை என்று சொல்லலாம். அதில் ஒருவர் தான் இந்த தொட்டிச்சி அம்மன். ஒரு காலத்தில் அதாவது நவீன வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் பழனி சுற்றிய பகுதி அனைத்துமே வனப்பகுதியாகத்தான் இருந்தது. பெரும்பாலும் குறி சொல்பவர்களுக்க நிரந்தர இடம் என்பது கிடையாது. ஆதிகாலத்தில் இருந்தே எல்லை தெய்வமாக இருந்த இந்த தொட்டிச்சி அம்மன் ஜோதிடத்திற்கும் ஜோதிடர்களுக்கும் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. தொட்டிச்சி அம்மன் சாந்த சொரூபமாக நாம் பழனியில் பார்க்கிறோம். பல ஊர் இடங்களில் இது அம்மன் செவ்வாயின் தன்மை கொண்டு உக்கிரமாக இருப்பதை அறியலாம்.


 நம்ம ஒரு பெண்ணை ஊர் பெயருடன் அழைத்துச் செல்லும் பொழுது உதாரணமாக பழங்காவேரி என்ற ஊர் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஊரில் இருக்கும் பெண்களை பழங்காரியான் என்று அழைப்பார்கள். இதே போல பல ஊர்களின் பெயர் மருவி அந்த நபர்களை அழைப்பது வழக்கம். தொட்டிச்சி என்ற பெண் தொட்டியம் மதுரை காளி அம்மன் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்ணும் மதுரையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதன் அடிப்படையில் தொட்டியம் அம்மனை தொட்டிச்சி  அம்மன் என்று அழைப்பது மரமாக இருந்திருக்கலாம். காலப்போக்கில் நாளடைவில் மருவி வருவது தானே இன்றைய நிலைமையில் உள்ளது.


நவீன காலத்தில் ஜோதிடத்தில் எவ்வளவு பெரிய ஜோதிட ஞானியாக இருந்தாலும் அக்குவேராக ஆணிவேராக ஜாதகத்தை பிரித்து பலன் கூறினாலும்  அடுத்து இன்னது தான் நடக்கப் போகிறது என்று தீர்மானித்து சொல்ல இந்த தொட்டிச்சி அம்மன் கடைக்கண் பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.


 

திருஈங்கோய்மலை

 கரூர் மாவட்டம் திருஈங்கோய்மலை அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஶ்ரீ மரகதாசலேஸ்வரர்🙏🙏

*இத்தலம் அம்பாளின் சக்தி பீடமாக கருதப்படுகிறது 

*51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம்.ரத்தினாவளி சக்தி பீடம் எனப்படுகிறது 

*தீர்த்தம் : - அமிர்த்தீர்தம்

*திரு வெங்கி மலை

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது

*கருவறையில் பச்சை நிற கல்லால் ஆன ரூபத்தில் காட்சி தருகிறார்.மரகதக்கல்லால் அமைந்ததால் சிவபெருமான் மரகதாசலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். *அவரது கருவறை வாயிலில் இடது புறம் விநாயகரும் வலது புறம் அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். 

*ஒரு காலத்தில், பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதியாமல் சிவனை மட்டுமே துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை, மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தாள். கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி, அவள்  வேண்டியபடியே தனது நீங்காத பாகமாக ஏற்றதால்  அர்த்தநாரீஸ்வரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வரவே, தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும் சக்தியை இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் தண்டம் போன்ற கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.

*இதன் மூலம் ஆதியில் அம்பிகைக்கு ஈசன் இடப்பாகம் கொடுத்த இடம் இத்தலமே யென்றும், அதன் பின்னரே திருசெங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொண்டார் என்றும் கூறப்படுகிறது 

*அம்பிகை மரகதவல்லி கருவறையில் முகப்பு மண்டபத்தில் ஒரு புறம் சிறிய லிங்கம் மற்றும் ஒரு அம்பிகை உள்ளனர். இதுவே அம்பாள் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்று கூறப்படுகிறது.

*நந்திக்கு முன் பலி பீடம் உள்ளது இந்த அம்பிகை சக்தி பீடத்தில் ஒன்றென கருதப்படுகிறது.

*வாட்போக்கி, குளித்தலை, ஈங்கோய் மலை மூன்றும் சோமாஸ்கந்த வடிவம் போன்றது. வாட்போக்கி – சிவபெருமான், குளித்தலை - கந்தன், ஈங்கோய்மலை – அன்னை பார்வதி. இந்த சோமாஸ் கந்த வடிவத்தினை ஒரே நாளில் தரிசித்து பிறந்த பயனை அடையலாம்.

*நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்

*ஐநூறு படிகள் கொண்ட இந்த மலையின் முகப்பில் ஒரு சுதை வளைவுடன் கூடிய மதில் சுவரும் அதனை அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது. *இறைவன் அம்பிகை இருவரும் கிழக்கு நோக்கிய கருவறையில் உள்ளனர், இறைவனின் இடப்புறம் அம்பிகை உள்ளார். கோபுரம் வழி பிரகாரத்தில் உள்ளே நுழையும்போது சன்னல் ஒன்றும் அதில் ஒரு விநாயகர் தரிசனம் அடுத்து பிரகார வலத்தில் முதற்கோயில் விநாயகருடையது இறைவன் கருவறை கோட்டத்தில் நர்த்தன விநாயகர். அடுத்து முருகன் சிற்றாலயம் உள்ளது.

*இந்த மலையின் அடிவாரத்தில் பதினென்சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். *அருகில் விளக்கு தூண் ஒன்று இருபது அடி உயரத்தில் படிகளின் துவக்கத்தில் உள்ளது.

*தேவாரம் பாடல் பெற்ற  காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்று 

புளிய மரம் நாடகம்

*ஒருமுறை இறைவனை காண சுந்தரர் வருகிறார், அப்போது நண்பராகிய அவரை சிறிது அலைக்கழிக்க எண்ணிய இறைவன் தலவிருட்சமான புளியமரத்தில் மறைந்து கொள்கிறார், சுந்தரர் பலவாறு வேண்டியும் காட்சி கொடுக்கவில்லை, மாறாக பாடியதற்காக ஒரு பொன் புளியங்காயை அவரிடம் எறிகிறார். இறைவன் புளியமரத்தில் இருப்பதை அறிந்து கொண்ட சுந்தரர். எனக்கு காட்சியளிக்காமல் இடம் கொடுத்த புளியமரம் இனி யாருக்கும் மறைவிடமாக இருத்தல் வேண்டாம் என கூறி சென்றுவிடுகிறார். அது முதல் இத்தலத்தில் புளியமரங்கள் காய் இல்லாது போயிற்று

*இத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு ஒரு வரலாறு ஒன்று உண்டு.

*ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார முனிவர், ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , " தாங்கள் முன்பு ஒருமுறை மரகதாசல மகிமை பற்றி சுருங்கக் கூறி அருளியுள்ளீர்கள். தற்போது அதனை விரிவாகக் கூறி அருளவேண்டும் " என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான் அத்தலப் பெருமையை விரிவாகக் கூறியருளினார்.முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு மலையைச் சுற்றிக் கொண்டு, வாயுவைச்  செல்ல முடியாமல் தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற இடங்களில் உயிர்கள் மடியத் தொடங்கின.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு செல்ல வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு வேகத்தோடு, அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள் ஐந்தைப் பிடுங்கியவாறு தென்திசை நோக்கிச் சென்றான். அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின. அவற்றுள் ஒன்றே, மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின் அம்சமாகப் புளிய மரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும் கூறுவர்

 ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டபோது  ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.

*ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ள தலமான திருவாட்போக்கியிலும் , நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் வீழ்ந்தன எனப்படுகிறது.

*காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில், இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு பலர் பலனடைகின்றனர்.

*அகத்திய மாமுனிவர், ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.

பார்வதி தேவி, இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.

*பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்து , சிருஷ்டித்  தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான் . விஷ்ணுவும் இப்பெருமானை வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் இங்கு ஈசனை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளனர்

*ஓங்காரம் அன்னது என நின்றான் மலை (நக்கீரர்)

என எல்லோருக்கும் பரம குருவாய் உள்ள ஓங்கார உருவான ஓங்காரேசுவரன் ஓங்காரப் பொருள் என்ன என்று உனக்குத் தெரியுமோ என்று ஆசிரியன் மாணவனைக் கேட்பது போல் முருகனது ஓங்கார ஞானத்தைச் சோதித்த போது முருகன் ஓங்காரப் பொருளான லிங்கப் பரம்பொருளைத் தொழுது ஓங்காரப் பொருளின் காதில் ஓங்காரப் பொருள் இன்னது என்று கூறினான்

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர்  மற்றும் மாணிக்கவாசகர் ஓங்காரத்து நாதர் என போற்றிப் புகழ்ந்த ஈசன் 

ஈங்கோய் மலை எந்தாய் போற்றி எனப்புகழ்கிறார் மாணிக்கவாசகர் 

*பூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே, உமையாளொடும் ஈங்கோய் மலையாரே என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர் 

*திருமந்திரத்தில் திருமூலரும் இலிங்க நல்பீடம் இசையும் ஓங்காரம் என ஈங்கோய் நாதனைப் புகழ்கிறார் 

*தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க வேண்டி, கிருத யுகத்தில் பிரமதேவன்  இத் தலத்தை அடைந்து பிரம தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம்மஞானம் எனத் தொடங்கும் மந்திரத்தை ஜபித்தவனாக அதில் ஸ்நானம் செய்து, திருப் புளிய மர  நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப் பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தான பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள்    இம்மை மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர்

*இங்கு சிவராத்திரி தினத்தில் பிரம்ம தீர்த்த ஸ்நானம் செய்து நறு மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை அர்ச்சித்தால், பிற தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஒப்பாகும் என்கின்றனர். புளிய மரத்தடியையும் பெருமானையும் ஒருங்கே வலம் வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள் எனவும் சிலாகித்து கூறுகின்றனர்.முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள். இத்தலத்தில் செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச் செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளிய விருக்ஷத்தை நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும்.

மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தின் பெரும் சிறப்பு.

இக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.

திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

*இத்தலம் போக மோக்ஷத்தைத் தரவல்லது. கார்த்திகை சுக்கிர வாரத்திலும் பொதுவாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயசான்னம் தானம் செய்தால், துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பர். நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள். இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில் உயர்ந்தவனாவான். சிவபெருமானையும் மரகதாம்பாளையும் நியமத்துடன் வழிபட்டால் முக்தி கிடைக்கும் எனப்படுகிறது 

*இத்தலத்தில் துர்க்கையை உக்கிரமாகவும்,சாந்தமாகவும்  தரிசிக்கலாம்.


#அம்பலத்தரசன்

Thursday, 9 April 2026

துளசி மற்றும் தொட்டாற் சினுங்கி

 சித்தர்கள் கூறிய துளசி தொட்டாற்சிணுங்கி வழிபாட்டில் மறைந்துள்ள ரகசியம்.


ஒரு தொட்டியில் நல்ல வளமான மண்ணை இட்டு நிரப்பி துளசியையும், தொட்டால் சிணுங்கியையும் அருகருகே வைத்து தோட்டத்திலோ, மாடியிலோ தென்மேற்கு மூலையில் அதிகம் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, நெய் விளக்கு ஏற்றி, 

பூஜை செய்து 21 முறை வலம் வரவேண்டும்.. 


தினமும் நெய்வேத்தியம் படைக்காவிட்டாலும் ஒவ்வொரு வெள்ளியன்றும். காலை மாலையில் நீராடி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர் அல்லது பானகம், வெண்பொங்கல் வைத்து பூஜை செய்து வரவேண்டும். 


தினமும் குளித்து விட்டு விளக்கேற்றி 21 முறை வலம் வருவதை மறக்காமல் செய்ய வேண்டும் என்றும், இதை நம்பிக்கையோடு தவறாமல் செய்து வந்தால் உங்களது பிரச்சனைகள் நீங்கும் என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். 


நீங்க வேற துளசிதான் எங்க வீட்ல எப்பவும் இருக்கே, என்கிறீர்களா? துளசி இருக்கும், அனால் தொட்டால் சிணுங்கி இருக்காது. 


அதுதான் துளசியின் கணவனான ஜலந்திரன் என்கிற அசுரன். இவன் ஈஸ்வரனிடம் அழியாத வரங்களைப் பெற்றவன். தேவலோகத்தையே அழித்து நாசம் செய்தவன். மனைவி மேல் பாசம் கொண்டவன். 


மகா விஷ்ணுவின் தந்திரத்தால் ஜலந்திரன் தலை துண்டிக்கப்பட்டு துளசியின் மடியில் விழுந்ததாகப் புராணம் சொல்கிறது. துளசியின் மேல் மனமிரங்கி இருவரையும் மூலிகைகளாக வரம் அளித்து மகா விஷ்ணு அருளியதாகச் சொல்லப்பட்டுள்ளது. 


இரு மூலிகைகளுக்கும் அனேக அற்புத சக்திகளை மகா விஷ்ணு தந்தருளியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.


துளசி, தொட்டாற்சிணுங்கியை திங்கள் கிழமையன்று பூஜை செய்து வலம் வந்தால், எண்ணங்கள் யாவும் ஈடேறும்.


ஐந்து வாரங்களில் இதற்கான பலன் தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து செய்து வந்தால் பலன் நிலைத்திருக்கும்..


துளசி, தொட்டாற்சிணுங்கியை

வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து வலம் வந்தால், குடும்ப ஒற்றுமை, போக பாக்கியம், லட்சுமி கடாட்சம் யாவும் உண்டாகும். 


செவ்வாய், சனிக் கிழமைகளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும். 


வியாழக்கிழமை வலம் வந்தால் விரோதிகள் வசியமாவார்கள். 


அந்தந்த கிழமைகளின் பலன்கள் யாவும் சித்திக்கும். 


இந்த அரிய தகவல் சித்தர்களின் தலைமைக்குருவான அகத்தியரால் சொல்லப்பட்டதாகும்.இதை அலட்சியமாக எண்ணாதீர்கள்.


அப்படி தொட்டாற் சிணுங்கி செடியில் என்னதான் இருக்கிறது என்று ஆராயப் போனால் அதில் பல விஷேசமான சக்திகள் சொல்லப்பட்டுள்ளன. 


அது மின் சக்தி உள்ள ஒரு மூலிகை என்றும், அதை ஒரு மண்டலம் தினமும் தொடுபவன் மன ஆற்றல் பெருகும் என்றும், சொன்னது பலிக்கும், நினைத்தது நடக்கும் என்றும், ஆண்மையைப் பெருகும் என்றும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகிய மூலிகை என்றும், மந்திர சக்தி உடையது என்றும் பல விஷேச சக்திகள் சொல்லப்பட்டுள்ளன. 


துளசி வெப்ப மூட்டும் மூலிகை, தொட்டாற் சிணுங்கி வெப்பத்தை குறைக்கும் மூலிகை.


துளசி மின்சாரத்தால் அடி பட்டவர்களைக் காக்கும், தொட்டாற் சிணுங்கி மின் சக்தியைத் தூண்டும்.


இப்படி ஒன்றுக் கொன்று எதிர் இயக்கங்களைக் கொண்ட பெண்பால் ஆண்பால் மூலிகையான கணவனும் மனைவியுமாக துளசியும், தொட்டால் சிணுங்கியும் திகழ்கிறது. 


இத்தனை இலட்சம் மூலிகைகளில் இவை இரண்டிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை சித்தர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தனரோ என்று ஆச்சர்யம் தோன்றுகிறது. 


இதில் மேலும் ஒரு விந்தை என்ன வென்றால் பெண்பாலான துளசி சூரியனின் அம்சம். ஆண்பாலான தொட்டால் சிணுங்கி சந்திரனின் அம்சம். நம் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பால். 


மூலிகையில் அந்த சூக்குமம் அப்படியே மாறி நிற்கும் காரணத்தை சித்தர்களே அறிவார்கள்.

Monday, 6 April 2026

வேதாள கதை தத்துவம்

 விக்கிரமாதித்தன் கடைப்பிடித்த அந்த 'மௌனம்' சாதாரணமான அமைதி அல்ல; அது தந்திர யோகத்தில் 'மௌன சாதனை' மற்றும் 'ஆற்றல் பாதுகாப்பு'  ஆகியவற்றின் உச்சக்கட்ட நிலையாகும். 


யோகத்தில் சித்த விருத்தி அற்று சாட்சி பாவமாக கவனிக்கும் உயனர்ந்த நிலையாகும்! 


வேதாளம் போட்ட நிபந்தனை: "நீ பேசினால் நான் மீண்டும் மரத்திற்கே சென்றுவிடுவேன்."  என்பது சித்த விருத்திகளை உருவாக்கினால் ஆற்றல் நழுவிப் போய்விடும் என்பதாகும்!


இந்தக் கதையி இறுதியில் விக்கிரமாதித்தன் வேதாள ஆற்றலை வசப்படுத்தி பேரரசனாகிறான். ஆகவே வேதாள ஆற்றலை வசப்படுத்த சித்த விருத்தியற்ற சாட்சி பாவ மன நிலை முதல் படியாகும்! 


இதனுள் ஒளிந்துள்ள ஆழமான தத்துவங்கள் எவை என்பதை விரிவாகப் பார்ப்போம். 


1. வாக்குச் சித்தி (Power of Speech)


தந்திர சாஸ்திரத்தில், ஒருவன் தேவையில்லாமல் பேசுவதைக் குறைக்கும்போது அவனது 'வாக்குச் சித்தி' பெருகும்.


விக்கிரமாதித்தன் வேதாளத்தைச் சுமக்கும் போது மௌனமாக இருப்பது, அவன் தனது பிராண ஆற்றலை வீணாக்காமல் உடலுக்குள்ளேயே தேக்கி வைப்பதைக் குறிக்கிறது.


ஒரு சாதகன் எப்போது பேச வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்ற விவேகத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.


2. மனதின் தர்க்கத்தை வெல்லுதல்


வேதாளம் சொல்லும் கதைகள் அனைத்தும் மனித மனதின் சிக்கல்கள், உணர்ச்சிகள் மற்றும் தர்க்கங்கள் சார்ந்தவை.


வேதாளம் பேசிக்கொண்டே இருக்கும், ஆனால் விக்கிரமாதித்தன் அதைக் கேட்டுக் கொண்டு மட்டுமே வருவான். இது தியானத்தின் ஒரு நிலை.


'சாட்சி பாவம்': எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும், ஆனால் நாம் அதற்கு எதிர்வினை (Reaction) ஆற்றாமல் அமைதியாக கவனிப்பதே இந்த மௌனத்தின் ரகசியம்.


3. மௌனம் கலைதலும் 'தர்ம சங்கடமும்'


வேதாளம் இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்டு, "உனக்கு விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சிதறும்" என்று சாபமிடும்.


இங்கு மௌனத்தை விட 'நீதி' (Dharma) முக்கியத்துவம் பெறுகிறது.


தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மௌனமாக இருப்பது ஒரு வீரனுக்கு அழகல்ல. எனவே, அவன் உண்மையைச் சொல்ல மௌனம் கலைக்கிறான்.


யோக ரகசியம்: நாம் அடைய வேண்டிய இலக்கு (சக்தி) கைநழுவிப் போனாலும், அறநெறியிலிருந்து (Dharma) தவறக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது. அதேவேளை அந்த தர்மத்தை காக்கவேண்டும் என்ற அகந்தையே அவன் யோகத்தையும் நழுவச் செய்கிறது. 


இது ஒவ்வொரு சாதகரும் தமது முதல் யோக சித்தியடைந்தவுடன் ஏற்படும் நிலையாகும். மனம் அடங்கினாலும் தாம் ஏற்றுக்கொண்ட தர்மத்திற்காக புத்தி செயற்பட்டு யோக சித்தியை நழுவச் செய்யும். 


4. மீண்டும் மீண்டும் முயற்சித்தல் (The Loop of Practice)


மௌனம் கலைந்தவுடன் வேதாளம் பறந்துவிடும். விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திற்குச் செல்வான்.


இது தியானத்தில் மனம் ஒரு நிலைக்கு வந்து, பிறகு ஒரு சிறு எண்ணத்தால் மீண்டும் கலைந்து போவதைக் குறிக்கிறது.


விக்கிரமாதித்தன் சோர்வடையாமல் மீண்டும் செல்வது, ஒரு யோகி தனது தியானம் கலைந்தாலும் மீண்டும் அமர்ந்து பழக வேண்டும் என்ற விடாமுயற்சியைக் காட்டுகிறது.


விக்கிரமாதித்தனின் மௌனம் நமக்கு உணர்த்தும் பாடம்:


உள்நோக்கிய பயணம்: வெளி உலகம் பேசினாலும், உள்மனம் அமைதியாக இருக்க வேண்டும்.


ஆற்றல் மேலாண்மை: தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது ஆன்மீக வலிமையை அதிகரிக்கும்.


சரியான நேரத்தில் பேசுதல்: மௌனம் பலம் என்றாலும், சத்தியத்திற்காகப் பேச வேண்டிய இடத்தில் பேசுவதே உண்மையான ஞானம்.


இறுதியில் 25-வது கதையில், வேதாளம் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் விக்கிரமாதித்தன் உண்மையாகவே மௌனம் காப்பான். அந்த 'உண்மையான மௌனம்' தான் அவனுக்கு வேதாளத்தின் நட்பையும், தீய மந்திரவாதியை (அகந்தையை) வெல்லும் ரகசியத்தையும் பெற்றுத் தரும்.


தனது புத்தியின் சலனத்தை அகந்தையை அடக்கினால் மாத்திரமே ஒருவன் காலீ சித்தி பெறமுடியும் என்ற உயர்ந்த தந்திர இரகசியம் இங்கு கூறப்படும். 


மனம் மௌனமாக அடங்கினாலும் புத்தி தனக்கு விடை தெரியும் என்ற தன்முனைப்பினால் பரிபூரண மௌனத்தை அடைய ,முடியாதவனாக 24 தடவைகள் தோற்று 25 தடவை புத்தியையும் அடக்கும் போது உண்மையான மௌனம் வாய்த்து அகந்தையை வெல்லும் பூரண சித்தி வாய்கிறது. 


விக்கிரமாதித்தன் 24 கதைகளில் மனதை வென்ற மௌனமான யோகியாக இருந்தாலும் புத்திசாலித்தனத்தால் அதன மௌனத்தை இழந்து அகந்தையிடம் தோற்கிறான். 


ஆகவே ஒருவன் மனதை கவனித்துக்கொண்டு சாட்சி பாவமாக இருந்தாலும் வேதாளம் என்ற மனம் அழகான கதைகளைச் சொல்லி நீ புத்திசாலி என்ற அகந்தையை உருவாக்கி மனதின் யோக நிலையைக் குழப்பி வெல்லும் என்பது இதன் ஆழமான யோக இரகசியம்!

Sunday, 5 April 2026

அகத்திய நட்சத்திரம்

 அகத்திய நட்சத்திரம் 🙇


அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்.


கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது. இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை. இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.


27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர். சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே.


கடல் நீரைக் குடித்த கதை...


அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.


அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர்  சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட், செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்.


நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்.


அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை....


இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம். உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு. ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது. வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.


வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும். அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை. ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது. கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது. அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.


இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர். ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும். ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது.


‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே.


அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.


வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும். கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை. தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.


குள்ளமான அகத்தியரின் பெருமை மிகவும் உயர்ந்தது.

Saturday, 4 April 2026

நிரஞ்சனேஸ்வரர் வேலூர்

 *பாவங்களைப் போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்*


வேளாண்குடி மக்கள் நிறைந்த இடத்தில் கோவில் கொண்டவர் நிரஞ்சனேஸ்வரர். 


இந்த  ஊரைக் காண்பதற்காக காசிப முனிவர் இந்தப் பகுதிக்கு வந்தார்.


அவரிடம் அந்தப் பகுதி மக்கள், அசுரர்களால் தங்களுக்கு நிகழும் துன்பங்களை எடுத்துக் கூறி காப்பாற்றும்படி வேண்டினர். தேவர்களும் கூட பொதுமக்களுக்காக காசிப முனிவரிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி, மாபெரும் யாகம் செய்தார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் ‘எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா?’ என்றபடி, காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக குண்டங்களை உடைத்தெறிந்தனர்.

 


இதையடுத்து காசிப முனிவர், தேவர்கள், பக்தர்கள் அனைவரும் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் நிரஞ்சனேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர்.


அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்’ என்றது.


தேவர்களும் மக்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் முருகப்பெருமான், மயில் வாகனத்துடன் சென்று இரண்டு அரக்கர்களையும் துரத்தினார். அவர்கள் மக்கள் நடமாட்டமும், கொக்குகள் நிறைந்த குளக்கரையுமான இடத்தில் மறைந்திருந்தனர். அவர்கள் இருப்பிடத்தை அறிந்து கொண்ட முருகப்பெருமான், முதலில் மலையனை தன்னுடைய வேலாயுதத்தால் வதம் செய்தார். அந்த இடம் தற்போதும் ‘மலையான்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மாயன், இனி மக்களுக்கு துன்பம் இழைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடினான். முருகப்பெருமான், நிரஞ்சனேஸ்வரரிடம் திரும்பி வந்தார். தங்களின் கட்டளையை நிறைவேற்றியதாக கூறிவிட்டு, வேலாயுதத்தை ஓரிடத்தில் ஊன்றினார். அந்த இடமே ‘வேலூர்’ என்றானதாக தல வரலாறு சொல்கிறது.

 


வடநாடு சென்று வெற்றி வாகை சூடி, திரும்பிக்கொண்டிருந்தான், ராஜேந்திர சோழன். வழியில் இயற்கை வளமும், இறையருளும் நிரம்பிய வேலூர் கிராமத்தை அவன் கண்டான். அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்தவனுக்கு ஒரு அசரீரியின் ஒலி கேட்டது. ‘நீ பார்க்கும் இடத்தில் தெய்வாம்சம் பொருந்திய கொம்பு ஒன்று கிடைக்கும். அதனை எடுத்துச் சென்று தீவு போன்ற பகுதியில் உள்ள குளத்தின் கிழக்குப் பகுதியில் குடிகொண்டிருக்கும் ஈசனின் முன்பாக நட வேண்டும்’ என்றது அந்தக் குரல்.


அப்போது இருள் சூழும் நேரமாகிவிட்டதால், மன்னன் தன் படை, பரிவாரங்களுடன் ஓரிடத்தில் தங்கி கண்ணயர்ந்தான். கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே ஒரு கொம்பு துளிர்விட்டு, இலையுடன் காணப்பட்டதைக் கண்டு வியந்தார். பின்னர் அசரீரி சொன்னதைப் போலவே அதை குறிப்பிட்ட இடத்தில் நட்டு, அங்கு ஒரு பெரிய ஆலயத்தை எழுப்பினார். மன்னன் நட்ட கொம்பு, துளிர்த்து மரமாக வளரத் தொடங்கியது. அது தான் இன்றும் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக இருப்பதாக சொல்கிறார்கள்.


கோவில் அமைப்பு :


ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் அமைந்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு திசையில் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் கோவில் வலபுறத்தில் தனிக் கோவில் கொண்டுள்ள சுந்தர விநாயகரை தரிசனம் செய்யலாம். பின்னர் கிழக்கு நுழைவு வாசலின் உள்ளே நுழைந்தால், கருவறையின் இரு புறமும் துவார பாலகர்கள், ஈசனுக்கு காவலாக நிற்கின்றனர். முன்னதாக வலதுபுறத்தில் கணபதியையும், இடதுபுறத்தில் முருகப்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.


கருவறையில் நிரஞ்சனேஸ்வரரை வீற்றிருந்து, தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை களைந்தும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் அருள்பாலிக்கிறார். ஈசனின் முன்பாக இருக்கும் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அது விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.

 


தல விருட்ச வழிபாடு :


இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் அருகில் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது. வியாழக்கிழமையில் வரும் அமாவாசை அன்று புஷ்கரணியில் நீராடினால், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தல விருட்சமான அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், கிளை மற்றும் இதரப் பகுதிகளில் சிவனுமாக மும்மூர்த்திகளும் இந்த மரத்தில் வாசம் செய்வதாக ஐதீகம்.


இந்த ஆலய தல விருட்சத்தை வணங்கினால், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், செல்வம் பெருகும் என்கிறார்கள். காலை வேளையில் கர்ப்பிணி பெண்கள் அரச மரத்தை வலம் வந்தால், சுக பிரசவம் நிகழும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொட அனுமதி உள்ளது. மற்ற நாட்களில் தொடக்கூடாது. இந்த மரத்தின் குச்சி மற்றும் மரப்பொருட்களை யாகம் செய்யும்போது மட்டுமே எடுத்து தீயில் போட்டு எரிக்கிறார்கள். விரதமிருந்து 108 முறை மரத்தை சுற்றினால், மன ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.

 


திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே உள்ளது வேலூர் கிராமம். மீஞ்சூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலும், பொன்னேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது திருவெள்ளைவாயல். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் வேலூர் நிரஞ்சனேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

Friday, 3 April 2026

திருக்கோயில் அதிசயங்கள்

 

#நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்!


#பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் #சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம்.  #கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.  அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி  தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும். இன்றைய அறிவு ஜீவிகளால் இதற்கு சரியான விளக்கம் தர முடியுமா?


ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள்.


 

#பெருமாளே சிவனாக மாறும் விந்தை!

திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும்.  அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  அந்த நாள் வெள்ளிக்கிழமை.  ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை "#சங்கரநாராயணர்" ஆகா மாற்றுகிறார்கள்.  அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.  பெருமாள் அந்த இடத்தை விட்டு இறங்கி அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம்.  வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும்.  மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள்.  தாயாரை பார்த்து வந்து சந்தோஷத்தில் இருக்கும் பெருமாளிடம் ஆசிர்வாதம் வாங்க சனிக்கிழமை அத்தனை கூட்டம் சேர காரணம், அன்று என்ன வேண்டுதல் வைத்தாலும் உடனே பாஸ் மார்க் தான்.


வியாழன் அன்று  போய் பாருங்களேன் .


#கொடி மர நமஸ்கார பூசை ஒரு திருப்புமுனை!

#திருசெந்தூரில் தினமும் காலை நடை திறப்பதற்கு முன் முதலில் கொடிமரத்துக்கு தான் பூசை.  பின்னர் தான் மூலவர் நடை திறந்து நிர்மால்யம், அபிஷேகம் எல்லாம்.தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமர பூஜையின் பொது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் , நமஸ்காரம் செய்வார்கள்.  அனுமதி இலவசம்.  வாழ்க்கையில் நிச்சயமாக திருப்பம் உண்டாகும்.


போய் பாருங்களேன்! 


 #நெய் உறைந்து மறைந்த லிங்கம்!

எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.  உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும்.  எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை.  இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.  வடக்கும்நாதர் சிவன் கோவில், #திருச்சூர், கேரளா மாநிலம்.  உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.


நம்பிக்கையுடன் போய் பாருங்களேன்! 


 #உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் !

#சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது.  பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை.  சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது.  இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.யோக நிலையில் உயர்பவர்களே, போய் உணர்ந்து பாருங்கள்.


#குளத்தில் மண் கலயத்தில் #விபூதி தோன்றுகிறது!

#ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், #மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம்.  அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம்.  மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.சென்று அருள் பெருங்களேன்.


#40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதர்!

#காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள #அத்தியூர்.  அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோவில் குளத்து நீரில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். கல்விக்ரகம் ஏற்பாடு செய்த பின்னர் அத்திவரதர் குளத்துள் இருக்கிறார். நாற்பதாண்டுகட்கு ஒருமுறை அத்தி வரதரை வெளிக்கொணர்ந்து அலங்காரங்கள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு மண்டலம் வைத்து வழிபாடுகள் செய்து பின் குளத்தில் மத்தியில் உள்ள நீராழி மண்டபம் இருப்பதால் அங்கு தெப்போற்சவம் சிறப்புறச் செய்து தாயாரும் பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். 1 வெளியே தாயார் வருவதில்லை.


 #கக்கிய பால் அரு மருந்தாகிறது!

#க்ரவுஞ்சகிரி, #செந்தூருக்கு அருகே இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுப்பிரமணியர் கோவில் கொண்ட மலை வாச ஸ்தலம்.  பெங்களூரிலிருந்து பெல்லாரி செல்லும் பாதையில் ஹோஸ்பெட் என்கிற ரயில் தடத்தில் இறங்கி செல்ல வேண்டும்.  முருகர் வள்ளி தேவயானை இன்றி தனித்து நிற்கும் இடம்.  அம்பாளுக்கு தனி சந்நிதி.  மிக தனிமையான இடம்.  கனத்த அமைதியும், குளிர்ச்சியும் சூழ்ந்த இயற்கை பச்சை சூழ்ந்த மலை.


அதிசயம் - முருகர் காலடியில் ராமரும் லக்ஷ்மணரும் அமர்ந்திருக்கிறார்கள்.  சீதையை மீட்டவுடன் அவர்கள் இருவரும் இங்கு வந்து முருகருக்கு பூசை செய்ததாக சொல்கிறார்கள்.  ஒருகாலம் வரை பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாதாம்.  அதனால், ராமர் வந்த காலத்தில் சீதையை கோயிலுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு அனுமனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார்களாம்.  இன்றும் முருகருக்கு நடக்கிற பூசைகள், ராமர் லக்ஷ்மணருக்கு தான் சென்று செருகிரதாம்.


முருகருக்கும் பார்வதி அம்மைக்கும் வாக்கு வாதம் வரவே, பார்வதி தேவி முருகனிடம், தான் கொடுத்த தாய் பால் தானே முருகனை வளர்த்தது என்று கேட்க, அதுவும் எனக்கு வேண்டாம் என்று அத்தனையையும் கக்கி விடுவதாக ஐதீகம்.  அது மலையில் உறையவே, வெள்ளை கல்லாக மாறுகிறது.  இந்த வெள்ளை கல், பால் நிறத்தில், தொட்டால் நல்ல நறுமண விபூதி போல் உள்ளது. முருகர் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள்.  கேட்டால், எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள்.  அரு மருந்தாக பயன் படுகிறது.  மிக அபூர்வமாக இருக்கிறது.


ஒரு முறை சென்று தரிசனம் பெற்று, அதையும் பெற்றுக்கொள்ளுங்களேன்!


 #நரசிம்மர் உலாவரும் தலம்!

"அஹோபிலம்", பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம்.  தேவர்கள் பெருமாளை காணும்பொழுது "ஹிரண்ய கசிபுவின்" வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம்.  இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம்.  மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம்.  நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது.  மலைமேல் தனியாக செல்லக்கூடாது.  கொடிய மிருகங்கள் வாழும் இடம்.  உண்மையான பக்தி இன்றி ஒரு போதும் இந்த தலத்தில் கால் பதிக்காதீர்கள்!  தொலைத்துவிடுவார்.


சென்று அவர் அருள் பெறுங்களேன்.


 #வில்வ பூசை உணர்த்தும் தத்துவம்!

"விஸ்வநாதர் கோயில்"காசி!


இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள்.  இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.  அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.


போய் பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!


 #பகவான் கிருஷ்ணரின் சமாதி!

பூரி ஜகன்னாதர் ஆலயம்!  ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம்.  ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு.  அந்த கோவிலின் கருவறை தான் "கிருஷ்ணரின்" சமாதி.  ஆம்!  அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர்.  கிருஷ்ணரோ இயற்கையான "வாசி யோகி".  ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது.  அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும்.  நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார்.  அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை "சங்கு" ரூபத்தில் அமைத்தார்.  ஆம்! அவர் போகர் சித்தர்.  


போய் தரிசனம் செய்யுங்கள்! அப்போது புரியும்!


 #நான்கு கரங்களுடன் ராமர்!

பொன்பதர் கூடம் ராமர் கோயில்.  செங்கல்பட்டிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.   உறையும் ராமபிரான் நான்கு கரங்களுடன் மற்ற கோவில்களிலிருந்து வித்யாசமாக உள்ளார்.  தந்தை தசரதன் ராமபிரானை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டவுடன் அதை புன்னகையுடன் சிரம் மேற்கொண்டார்.  இதை கண்ட சீதைக்கு, இப்படிப்பட்ட கட்டளையை ராமனால் எப்படி புன் முறுவலுடன் ஏற்றுகொள்ள முடிகிறது என்று எண்ணினாள்.  நேரம் வந்தபோது ராமர் தான்  என்பதை நான்கு கரங்களுடன் இரு கரத்தில் சங்கு சகரத்துடன் சீதைக்கு காட்சி  அளித்து  தானே நாராயணன் என்பதை உணர்த்தினார்.  அது  போல்  கண்டேன் சீதையை என்று அனுமன் கூறிய  போது, அவருக்கும் நான்கு கரத்துடன் காட்ச்சியளித்தாராம்.


சென்று பார்த்து அருள் பெற்று வாருங்களேன்!


 #சிக்கலாருக்கே வியர்க்கிறதாம்!

சிக்கல்! முருகர்  தன் தாயிடம் வேல் வாங்கின இடம்.  இங்கு உற்சவரும்  மூலவரும்  ஒருவரே.  மற்ற கோயில்களில் உற்சவர்  சிலை கால்லால் உருவாக்கப்பட்டிருக்கும்.  உற்சவரை உலோகத்தில் செய்து வைத்திருப்பார்கள்.  இங்கு மூலவரே உலாவருகிறார்.  ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகா கந்த சஷ்டி அன்று உலாவரும் முருகனுக்கு உடல் எல்லாம் வியர்க்கும்.  பூசாரி அவர் முகத்தை துடைத்து துடைத்தே தளர்ந்து விடுவார்.


சென்று பார்த்து அவர் அருள் பெறுங்களேன்!


 #பாதாள அஞ்சனக்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர்!

#குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.


இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.


கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.


அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.


இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.


அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.


சென்று பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!


 #நவக்ரகங்களை உள்ளடக்கிய பிள்ளையார்!

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


 #பழனி நவபாஷாண சிலைக்கு ஒரு முன்னோட்டம்!

கொல்லிமலையில் அமைந்துள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள கூவ மலையில் தண்டயுதபாணியாக முருகன் குடி கொண்டுள்ளார்.  இந்த கோவில் சிலையை போகர் சித்தர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கும் முன் ஒரு முன்னோட்டமாக தயாரித்து இங்கே பிரதிஷ்டை செய்தார் என்று செவி வழி செய்திகள் கூறுகிறது.  கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது.  ஏதோ புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் விரித்தார் போல் ஒரு பசுமை சூழ்ந்து நிற்கும்.  இந்த மலையின் பின் புறம் கொல்லிமலை கைலாசத்தை நினைவு படுத்தி எல்லாமே இங்கு அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி உயர்ந்து நிற்கும்.  இங்கு முருகர் வேட்டுவ கோலத்தில் காட்சி தருகிறார்.  நிறையவே ரகசியங்களை உள்ளடக்கிய கோவில்.  அகத்தியர் சித்தர் முதல் அனைவரும் காலை வேலையில் உலக நன்மைக்காக தவமிருக்கும் கோவில் என கூறப்படுகிறது.    அத்தனை அமைதி பொருந்திய கோவில்.


சென்று தரிசனம் செய்து அவன் அருள் பெற்று வாருங்களேன்!


 #வராஹ முகத்துடன் ஆஞ்சநேயர்!

அனுமன் ஆலயங்களில் வானர முகத்துடன் ஆஞ்சநேயராக அருள் பாலிப்பதுதான் வழக்கம். ஆனால், #சேலம் மாவட்டம் #ஆத்தூரில், 850 ஆண்டுகள் பழமை   வாய்ந்த ஆலயத்தில் குபேர திசையான வடக்கு திசை நோக்கி வராக முகத்துடன் அவர் எழுந்தருளியிருக்கிறார். வைணவ ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும்   அனுமன் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.

 

#சிவனுக்கு துளசி பூசை!

சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி   இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும்   பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே   எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. 


 #ஆப்பனூர் போய் தரிசித்தால் வாத நோய் விலகும்!

மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திருஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர்  பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது. 

 பில்லி சூன்யம் விலக்கும் ஏடகநாதர்!


மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

om nama sivaya,


அச்சுதமங்கலம் சோமேஸ்வரர்



Tuesday, 31 March 2026

நிலம் வாங்க சட்ட ரீதயான சரிபார்ப்புகள்

 ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!


முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.


Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.


Double Document நிலம்.


Power of attorney(POA) double document 


அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.


அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal power எழுதி கொடுத்தவர் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.


உயில் பத்திர நில double document.


உயில் மூலம் உரிமை மாறி இருக்கா


உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.

எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம். பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.


Settlement பத்திர நிலம் double document .


Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில் மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.


Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.


1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.


அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.


Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?


அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.


DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.


அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என  விசாரியுங்கள் Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.


எனவே ஜாக்கிரதை.


பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.


நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை FMB நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 


VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள். பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.


கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல் விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு 


பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.


அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.


பட்டாவின் பயனாளி யார்?.


முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்


மேஜர் இனாம்


ராயட்டு வாரி

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.


Minor இனாம் சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்


தொழில் முறை இனாம் நிலம்


தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன், கர்ணம்,தலையாரி,

வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.


ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர் (குற்றபரம்பரை) settlement etc யா என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகைபாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.


சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும். Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.


1956-பூமி தான நிலம்


Manual EC 

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும். பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.


பூமி தான நிலம்  வாங்காதீர்.


பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.


எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.


Zero value நிலம்


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு & வில்லங்க நிலம்


கோயில் நிலம் -HR&CE நிலமா 


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும். கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம் தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்ககூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும். இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


land reforms act.

இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர் ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் அனாதீனம் உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.


1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்


இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம் மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.


1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 


தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா ன்னு பார்க்கணும்.


இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும.


1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்


நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.


1976 களின் Urban land seiling act


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும் Innocent buyer என்று சொல்லி Land கமிசினர் க்கு மனு செய்யனும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள் எனவே ஜாக்கிரதை.


கோர்ட் attached property வாங்காதீர்.


டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர் அந்த நிலத்தை அவர் மனைவி maintenance ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.


எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.


அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள். 


அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள் பாலுமாகேந்திரவின் வீடு படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்


அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )


அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும். 1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.


இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள் இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.


அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.


ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.


அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.


அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.


அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 


அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்


அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.


எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.


தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.


பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்


காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.


நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர். அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர். இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்..!


முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.


Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.


2.Double Document நிலம்.


Power of attorney(POA) double document 


அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.


POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.


உயில் பத்திர நில double document.


உயில் மூலம் உரிமை மாறி இருக்கா


உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.

எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.


பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.


Settlement பத்திர நிலம் double document .


Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.


Update ஆகாத பட்டா மூலம் கிரயம் -double document.


1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.


அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.


Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?


அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.


DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.


அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.


Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.


 எனவே ஜாக்கிரதை.


பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.


நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 


VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள். பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.


கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு 


பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.


அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


 நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.


7. பட்டாவின் பயனாளி யார்?.


முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்


மேஜர் இனாம்


ராயட்டு வாரி

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.

------------


Minor இனாம் 

சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்


தொழில் முறை இனாம் நிலம்

----

தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,

வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.


ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

------------


DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)

settlement etc யா என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.

---------


சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.


Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.

--------


1956-பூமி தான நிலம்


Manual EC 

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.


பூமி தான நிலம்  வாங்காதீர்.


பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.


எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.

-----------


Zero value நிலம்


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.

-----------


கோயில் நிலம் -HR&CE நிலமா 


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.


கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.


இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.

-----------


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


land reforms act.

இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

-----


1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்


இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

-------


1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 


தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.


இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m

--------

1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்


நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.

--------


1976 களின் Urban land seiling act


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.


8. கோர்ட் attached property வாங்காதீர்.


9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.


எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.

---------------


10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.


11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )


13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும்.


1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.


இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்


1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.


2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.


ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.


14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.


15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.


16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 


17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்


18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.


நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.


உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,


 லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.


மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.


கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.


Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.


19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.


20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.


பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.


காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.


திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்


நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ்க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.


அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை.!


P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்

மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.

ஏக பாத தக்ஷினாமூர்த்தி

 ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி'யில் உள்ள பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஏகபாத தட்சிணாமூர்த்தி'யின் அரிய சிற்பம்..!!

இத்திருவுருவத்தில் #சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் #பிரம்மா'வும், இடது புறம் #திருமாலும் ஒடுக்கும் நிலையில் காட்சியளிக்கும் ஒரு அரிய கோலமாகும். சிவனே உயர்ந்த #பரம்பொருள் என்பதையும், #சிருஷ்டி, #ஸ்திதி, #சம்ஹாரம் அனைத்தும் அவரிடமிருந்தே தோன்றுகின்றன என்பதையும் குறிக்கிறது..!!