Wednesday 1 November 2017

அழகு முருகன் திருவிளையாடல் - துரைசாமி கவிராயர்

பழனி முருகனின் மகிமை

அப்பா! பழநி ஆண்டவனே! வலி பொறுக்க முடியவில்லையே… இது, முன் ஜன்மப் பாவமா? இந்த ஏழைமீது கருணை காட்டக் கூடாதா? உன்னையே சதா சிந்தித்துக்கொண்டிருக்கும் எனக்கு உன் கருணை கிடையாதா? வறுமைகூட எனக்கு வேதனையில்லை. ஆனால், இந்தக் குத்துவலி என்னைக் கொல்கிறதே! ஆ… ஆ… என்ன செய்வேன்! பழநி கந்தனே!’

கண்ணீர் விட்டுக் கதறினார் துரைசாமிக் கவிராயர். விறைவாதம் என்னும் நோயின் கொடுமை அவரை இப்படித் துடிதுடிக்க வைத்தது. நீண்டநேரம் பழநி முருகனையே நினைந்து நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு மெதுவாக உறங்கிப் போனார். ஒரு கனவு வந்தது.

ஓர் அழகான இளைஞன். கந்தனைப் போன்று கவின்மிகு செல்வன். ஒரு பேரொளிபோல் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான்.

கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழநிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். ‘மருளார் பிறவி துயர்தீர மருந்தொன்று உண்டு; மாநிலத்தே இருளார் வினைகள் இயலாமே இதயத் தெளிவு தருமருந்து; பழநிமலை முருக! முருக! எனும் மருந்து!’ என்பதற்கேற்ப, பவரோக வைத்தியனான பழநிமலை வேலன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.

யார் இந்தத் துரைசாமிக் கவிராயர்?

சென்னை, ராயபுரத்தில் சாமியப்பக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது பரம்பரையே கவி பாடுவதில் வல்லமை பெற்றது என்பதால், ‘கவிராயர்’ பட்டம் அவரது குடும்பச் சொத்தாக இருந்தது. அவரது தவப்புதல்வர்தான், பழநிமலை முருகனை நினைந்து நினைந்து உருகிய துரைசாமிக் கவிராயர். இளமையில் இருந்தே பழநி ஆண்டவரிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தார் அவர். பழநி தண்டாயுதபாணியின் திருவுருவப் படத்துக்குத் தினமும் தவறாமல் பக்தியுடன் மலர்மாலை சூட்டி, அர்ச்சித்து வழிபாடு செய்வார். பழநியாண்டவர் மீது பல பாடல்களை இயற்றி, அந்தப் பாமாலைகளையும் அவனுக்குச் சூட்டி இன்புறுவார். நாள்தோறும் எவருக்காவது அன்னமிட்ட பிறகே தாம் உண்ணும் நியதியை மேற்கொண்டார்.

இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில்தான், முன்வினைப் பயன் காரணமாக அவரை நோய் வந்து வருத்தியது. பழநிமலைச் செவ்வேள் அவரது துன்பத்தை நீக்கியருளினார்.

பழநிமலை ஆண்டவனுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு காவடி எடுப்பது என்பது இன்றைக்கு ஒரு பிரபலமான சடங்கு. சிவகிரி, சத்தியகிரி ஆகிய இரு மலைகளையும் அகத்திய முனிவரின் சீடனான இடும்பன் காவடியாகக் கட்டி, கயிலையில் இருந்து எடுத்து வந்ததாகப் பழநி ஸ்தல புராணம் கூறுகிறது. பழநியிலுள்ள இந்த இரு மலைகளுக்கும் காவல் தலைவன் இடும்பன்தான். அவன் காவடி எடுத்து வந்ததை நினைவுகூரும் வகையில் இந்தப் பிரார்த்தனை வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுவர். ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு.

இந்த வகையில், துரைசாமிக் கவிராயர் பழநி முருகனுக்கு காவடி எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்துகொண்டார். என்ன வேண்டுதல் தெரியுமா? தமது நோய் நீக்கி அருள்பாலித்த ஆறுமுகப் பரமனுக்கு ‘அன்னக்காவடி’ சமர்ப்பிப்பதுதான் சரியான நேர்த்திக்கடன் என்பது கவிராயரது எண்ணம். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார்.

துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழநிக்குமரன் திருவுளம் கொண்டான். அதையட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். ”துரைசாமிக் கவிராயர் பழநிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!” என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். ”பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்” என்று கவிராயர் கனவிலும் அருளினான் கருணை முருகன்.

அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழநி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார். அவர் பழநி சென்றடைய 45 நாட்களாயிற்று.

”துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!” என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழநியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழநிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழநி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.

”பழநிப் பரமனே! கருணைக் கடலே! தயாளப்பிரபுவே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!” என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார்.

ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. அதனைக் கண்ட அனைவரது உடலும் சிலிர்த்தது. பழநி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.

அப்போது… பக்திப் பரவசம் பொங்க ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல், இதோ உங்கள் பார்வைக்கு…

#பல்லவி

மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)

#அனுபல்லவி

உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)

#சரணம்

சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய

அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)

பழநி முருகப்பெருமானின் பேரருளைப் பரிபூரணமாகப் பெற்ற துரைசாமிக் கவிராயரது பேரன்தான் அத்யாச்ரமி பாலசுந்தர சுவாமிகள். இவர், #பாம்பன் #ஸ்ரீமத் #குமரகுருதாசசுவாமிகளின் #பிரதான #சீடர் எனும் பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் சரவணபவ

No comments:

Post a Comment