Wednesday 18 October 2017

குசா சக்தியில் புடவை அணியுங்கள்

சித்தர்களுக்குரித்தான இந்த வரிசை மடிப்பு தத்துவத்தை பெண்கள் எப்படிப் பயன்படுத்துவது ? இக்கால சந்ததிகளுக்காக வரிசை மடிப்பு தத்துவ ரகசியங்கள் தேவார, திருவாசக பதிகங்களில் நிறைந்து பரந்துள்ளன. உதாரணமாக,

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்ததனால்
ஒன்பதோடொன்றொ டேழு பதினெட்டோ டாறும் உடனாய நாட்களவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே

என்னும் திருஞான சம்பந்தப் பெருமானின் தேவாரம் பெண்களுக்கான வரிசை மடிப்பு தத்துவத்தை விளக்குகிறது.

இம்முறையைப் பயன்படுத்த விரும்பும் பெண்கள் தங்கள் பிறந்த தேதியையும், தங்கள் கணவரின் பிறந்த தேதியையும் கூட்டிக் கொள்ளவும். வரும் எண்ணை இரண்டால் பெருக்கவும். அவ்வாறு வரும் எண்ணை ஓரிலக்கமாக்கி அதற்குச் சமமான மடிப்புகளைத் தங்கள் புடவை நுனிகளில் வைத்து அணிந்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் நிலவும்.

உதாரணமாக, மனைவியின் பிறந்த தேதி 5 எனவும், கணவரின் பிறந்த தேதி 7 எனவும் அமைந்தால், ஐந்துடன் ஏழைக் கூட்ட அது 12 என வரும். 12ஐ இரண்டால் பெருக்கி வரும் 24ஐ ஓரிலக்கமாக மாற்ற அது 6 என வரும். மேற்கூறியபடி அந்தப் பெண் தன்னுடைய புடவையில் ஆறு மடிப்புகளை வைத்து அணிந்து கொண்டால் அந்த மடிப்புகள் குசா என்னும் நற்கிரண சக்திகளைப் பரப்பி குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலவச் செய்யும். இக்காரணம் பற்றியே அக்காலத்தில் ஒன்பது கஜம் கொண்ட நூல் புடவைகளை அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

நூல் புடவைகளில்தான் குசா சக்திகள் முழுமையாக நிரவித் திகழும் என்பதை மனதில் கொள்ளவும். புடவை அணியும்போது திருஞான சம்பந்த நாயனாரின் மேற்கூறிய பாடலை அவசியம் பாடிக் கொண்டே அணிய வேண்டும் என்பது முக்கிய விதியாகும். தன்னுடைய பிறந்த தேதி, தன் கணவரின் பிறந்த தேதி இவற்றை தெரியாதவர்கள் ஒன்பது கஜ நூல் புடவையில் ஒன்பது மடிப்புகள் வைத்து மேற்கூறிய திருஞான சம்பந்த நாயனாரின் தேவாரப் பாடலைப் பாடி அணிந்து கொள்ளுதல் நலம்.

No comments:

Post a Comment